2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘சிவலிங்கம் சிவகாந்தன் பெருந்தன்மை கொண்டவர்’

Editorial   / 2017 செப்டெம்பர் 17 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

“என்னென்ன பணிகள் எங்கே தேவைப்படுகின்றனவோ அங்கெல்லாம் தமது சமூக நலப் பணிகளை எதுவித பிரதியுபகாரமும் நோக்காது ஆற்றி வருகின்ற பெருந்தன்மை கொண்டவர் சிவலிங்கம் சிவகாந்தன்” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஏழாலை மண்ணின் மைந்தன் சிவலிங்கம் சிவகாந்தன் ஆற்றிய சமூக நல சேவைகளை பாராட்டி வாழ்த்துவதற்கான பாராட்டு விழா, விழிசிட்டி பாடசாலை மைதானத்தில் நேற்று (16) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“சிவலிங்கம் சிவகாந்தன் அவர்களை சுமார் 2 அல்லது 3 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் ஒரு வைபவத்தில் முதன் முறையாக சந்தித்தேன். ஆசியாவிலேயே சிறந்த நூல் நிலையமாக அக்காலத்தில் அடையாளப்படுத்தப்பட்ட யாழ். பொது நூலகம் கயவர் கூட்டத்தால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்ட போது, அதனை எண்ணிக் கலங்கியவர்களில் நானும் ஒருவன்.

“எமது நூலகத்தின் புத்தகத் தேவைகளை நன்கு உணர்ந்து கொண்ட சிவகாந்தன், லண்டனில் இருந்து தருவிக்கப்பட்ட ஒரு தொகுதி புத்தகங்களையும் போட்டோக் கொப்பி இயந்திரம் ஒன்றையும் நூல் நிலையத்தில் வைத்து எனது கைகளில் ஒப்படைத்திருந்தார். அவை அப்போதைய நூலகரிடம் வழங்கப்பட்டன.

“தெருத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு அடித்த கதையாக ஒரு சிறு மூக்குக் கண்ணாடியை வழங்கி விட்டு அதனைப் படம் பிடித்து இங்கே வெளியாகின்ற அனைத்துப் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும் சமூக சேவையாளர்கள் மத்தியில்  சிவகாந்தன், வலக்கை கொடுப்பது இடக்கைக்கு தெரியாது பல பொதுப் பணிகளைச் செய்து வருகின்றார். 

“தாய், தந்தையர் அற்ற நிலையில் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வாழ்கின்ற சிறுவர்களுக்கான புதியக் கட்டடம், இன்பருட்டி மீனவர்களுக்கான மீன்பிடி வள்ளங்களுக்கான பண உதவி, சுய தொழில் வாய்ப்புக்கான உதவி, பெண்கள் முன்னேற்ற அமைப்புக்கான நிலக் கொள்வனவு, ஏழாலை தெற்கு அமெரிக்க மிஷன் பாடசாலை விளையாட்டு மைதானம், சைவ சன்மார்க்க முன்பள்ளிக் கட்டடத் தொகுதி ஆகியவற்றுக்கான உதவிகளை மனமுவந்து மேற்கொண்டதுடன், இந்து ஆலயங்களின் புனரமைப்புக்கு மட்டுமன்றி கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் அவற்றின் வளர்ச்சிக்காகவும் உதவிகள் புரிந்தமையின் மூலம் இவர் சமயங்கள் கடந்த ஒரு சமூக ஆர்வலராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இவரின் இளமைக் காலத்தில் இவர் இடதுசாரிக் கொள்கைகளை ஆதரித்தவர். அதனால்தான் போலும் சாதாரண மக்களிடம் பெருவிருப்பை வளர்த்துக் கொண்டிருந்தார். ஏழை, எளிய மக்களை உயர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதற்கு முயற்சிகள் மேற்கொண்ட அரசியல்த் தலைவர்களை இவர் மிகவும் மதித்தார்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .