2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திருடிய மோட்டார் சைக்கிளில் சென்று கொள்ளை

எம். றொசாந்த்   / 2019 மார்ச் 28 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்ற இருவர், அந்த மோட்டார் சைக்கிளில் சென்று வீதிகளில் சங்கிலிகளையும் அறுத்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றவர் தலைமறைவாகியுள்ளார். தலைமறைவாகியுள்ள நபரை கைது செய்வதுக்கு பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருடப்பட்டுள்ளது. அது தொடர்பில் உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதேவேளை யாழ். வைத்தியசாலை வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணொருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்து சென்றனர். இச் சம்பவம் நடைபெற்று சிறிது நேரத்தில் மானிப்பாய் வீதியிலும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சங்கிலி ஒன்றினை அறுத்து சென்றனர்.

குறித்த இரு சங்கிலி அறுப்பு சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்து முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டனர். சங்கிலி அறுக்கப்பட்ட இடத்துக்கு அண்மையாக பொருத்தப்பட்டு இருந்த சி.சி.ரி கமராவின் உதவியுடன் மோட்டார் சைக்கிளை அடையாளம் கண்டு அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது, அது கோப்பாய் போலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் திருட்டு போன மோட்டார் சைக்கிள் என்பதை கண்டறிந்தனர்.

தொடர்ந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து, சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கொண்டனர். சந்தேக நபர்கள் அளவெட்டி பகுதியில் பதுங்கி இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் அங்கு சென்ற போது சந்தேக நபர்களில் ஒருவர் தப்பி சென்ற நிலையில் மற்றையவர் பொலிஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. அத்துடன் வீதிகளில் அறுத்த ஒன்றரை பவுண் மற்றும் இரண்டு பவுண் தங்க சங்கிலிகள் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

கைது செய்யபட்ட நபரை பொலிஸார் தமது பாதுகாப்பில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தப்பி சென்ற மற்றைய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X