2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘நெகிழ்வுத் தன்மையைக் காட்டமாட்டோம்’

Editorial   / 2018 ஜனவரி 07 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“ஏகிய இராஜ்ஜிய என்பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியது. ஆனால், அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நெகிழ்வுத் தன்மையை காட்டாது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் பொதுக்கூட்டம், பருத்துறையில் நேற்று  (06) நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடரந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னவர்கள், இப்போது மீண்டும் வந்து நாங்கள் எல்லாவற்றையும் செய்து கொடுப்போம் என சொல்கிறார்கள். எப்படிப் பெற்றுக் கொடுக்கபோகிறீர்கள் எனக் கேட்டால், அதற்கு அவர்களிடம் பதில் இல்லை.

“புதிய அரசமைப்பு உருவாக்கத்தில், சில விடயங்களில் நாங்கள் இணங்கியிருக்கிறோம். குறிப்பாக, 'ஏகிய இராஜ்ஜிய' என்பதில் நாங்கள் இணங்கியிருக்கிறோம். அது எதற்கான இணக்கம் என்றால், சமஷ்டி என்றால், சிங்கள மக்கள் மத்தியில் உள்ள கருத்து, நாட்டை பிரிக்கிறார்கள் என்பது. நான் சிங்கள மக்களைச் சந்தித்து பேசுகிறபோது, 'நாட்டை பிரிக்கும்படி நாங்கள் கேட்கவில்லை. ஆனால் பூரணமானதும், மீளப் பெறமுடியாததுமான அதிகாரங்களை எங்களுக்குத் தாருங்கள்' என்றே கேட்கிறேன். இதனாலேயே, நாங்கள், 'ஏகிய இராஜ்ஜிய' என்பதற்கு இணங்கினோம். அதிகாரப் பகிர்வு தவிர்ந்த மற்றைய விடயங்களில், நாங்கள் இணக்கப்பாட்டைத் தெரிவித்திருக்கின்றோம்.

“ஆனால், அதிகாரப் பகிர்வு விடயத்தில் நாங்கள், தொடர்ந்தும் இறுக்கமான நிலைப்பாட்டைக் கடைப்பிடிப்போம். அரசாங்கத்தின் செயற்பாடுகளிலும் இடைக்கால அறிக்கையிலும், எங்களுக்கும் பூரணமான திருப்தியில்லை. ஆனால், வந்திருப்பது ஓர் இடைக்கால அறிக்கை. அந்த இடைக்கால அறிக்கையிலேயே இந்தளவு விடயங்களைச் சாதிக்க முடிந்தமையில், எமக்குப் பூரணமான திருப்தி இருக்கின்றது. இந்த விடயத்தில், ஊடகங்களும் பொய்யைச் சொல்கின்றன” என்றார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .