2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘யாழ். மண்ணை நேசித்தேன்’

Editorial   / 2018 மே 24 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

“மூன்று மெய்ப்பாதுகாவலர்களுடன் யாழ். மண்ணுக்கு வந்தேன். இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுடன் திரும்பிச் செல்லுகின்ற ஓர் துர்ப்பாக்கிய நிலை எனக்கு ஏற்பட்டு விட்டது” என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார்.

திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு மாற்றலாகிச் செல்லும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் பிரிவுபசார நிகழ்வு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நேற்று (23) புதன்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாண மண்ணில் அநியாயங்கள் அட்டூழியங்கள் அரங்கேறிய போது, தடுத்து நிறுத்தவேண்டிய கடப்பாடு நீதித்துறைக்கு இருந்தது. நீதிமன்றத் தீர்ப்புக்கள் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய குற்றங்களை கட்டுப்படுத்தும் நடவடிகையில் நான் ஈடுபட்டேன். யாழ். மண்ணை நேசித்தேன். யாழ். மண்ணை சுவாசித்தேன். வித்தியா என்ற மாணவியின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன். ஆனால் சாதனைகள் வேதனைகள் இருந்தவேளை சோதனை ஒன்று ஏற்பட்டது.

மூன்று மெய்ப்பாதுகாவலர்களுடன் யாழ். மண்ணுக்கு வந்தேன். இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுடன் திரும்பிச் செல்லுகின்ற ஓர் துர்ப்பாக்கிய நிலை எனக்கு ஏற்பட்டுவிட்டது.

யாழ்ப்பாண மக்கள் அமைதியாக வாழவேண்டும் என நினைத்தேன். என்னைக் காப்பாற்ற தன்னுயிரைக் கொடுத்த அந்த சிங்கள சகோதரனை நினைத்து ஒவ்வொரு நாளும் எனது மனம் வேதனையில் துடிக்கின்றது. மூன்றாவது நபரைப் பலிகொடுத்து, செல்லுகின்றமைதான் வேதனையாக உள்ளது. சிங்கள சகோதர சகோதரிகள், தாய்மார் என்னையும் அவர்களது வீட்டுப் பிள்ளையாக ஏற்றுக்கொள்ளுமளவுக்கு அந்த துர்ப்பாக்கிய சம்பவம் ஏற்படுத்திவிட்டது.

ஒரு நீதிபதிக்கு ஏற்பட்ட இழப்பு ஒரு பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட மரணம் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வு என்பதை என்னால் உணரக்கூடியதாக இருந்தது. அந்த பொலிஸ் உத்தியோகத்தரின் பிள்ளைகளை நான் இறக்கும் வரையும் பார்ப்பேன். அவர்களும் எனது பிள்ளைகள். நன்றி மறப்பது நன்றன்று.

ஒரு தமிழ் நீதிபதியின் உயிரைக் காப்பாற்ற சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர் உயிரைக் கொடுத்தான் என்ற வரலாற்றை அந்த மாபெரும் வீரன் யாழ்.மண்ணில் பதித்துவிட்டுச் சென்றுள்ளான்.

நீதித்துறையில் இளஞ்செழியன் சாதனை படைத்தார் என்று சொல்வார்கள். அது எனது தொழில். ஆனால் எனது தொழிலைக் காப்பாற்ற எனது உயிரைக் காப்பாற்ற ஒருவன் சாதனை படைத்து மேற்சென்றான், அது தியாகம். அதற்கு கோடான கோடி கோடி கொடுத்தாலும் முடியாத விடயம்.

ஒரு நண்பர் எனக்குக் கூறினார், “இனிவரும் காலங்களில் நீங்கள் தமிழ் நீதிபதி எனப் பெயர் எடுக்கக் கூடாது. உங்களுக்காக சிங்கள சகோதர, சகோதரிகள், தாய்மார்கள் அழுகின்றார்கள். எனவே இந்த நாட்டின் இலங்கைத் தீவின் நீதிபதி என்றே இளஞ்செழியனை அழைக்க வேண்டும்" என்றார். பெருமையாக இருந்தது.

யாழ்ப்பாண மண் உணர்வுபூர்வமான மண். அமைதி சாந்தியை விரும்புகின்ற மண். மூன்று ஆண்டுகள் என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து யாழ். மண்ணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளேன். விடைபெறும் நேரம் வந்துவிட்டது. யாழ்.மண்ணுக்கு 'குட் பாய்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .