2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘வழக்கை அநுராதபுரத்துக்கு மாற்ற பயமே காரணம்’

Editorial   / 2017 ஒக்டோபர் 12 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தமிழ் அரச சாட்சிகள் தமிழ்ப் பிரதேச நீதிமன்றத்தில் தமிழ் நீதிபதி முன்னிலையில் சுதந்திரமாக சாட்சியமளிக்க முடியும். அவ்வாறு சாட்சியமளிக்கும்போது தம்மிடம் இருந்து எவ்வாறு சாட்சியங்களுக்கான விபரங்களை அரச தரப்பு பெற்றுக்கொண்டது என்பதை அவர்கள் வெளிப்படுத்தி விடுவார்களோ என்ற பயமே வழக்கை அநுராதபுரத்துக்கு மாற்றியமைக்கான காரணம் என நான் யூகிக்கின்றேன்” என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில்,

“ஜெனீவாவில் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஐ.நாவுக்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனே கைவாங்குவதாக உறுதிமொழி கொடுத்த இலங்கை இன்னமும் அதைச் செய்யவில்லை. அதனைக் கைவாங்கி விட்டால் அதன் கீழ் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களை உடனே பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுங்கள் என்று கோருவது இலகுவாய் இருந்திருக்கும். ஏனெனில், எமது வழமையான சட்ட ஏற்பாடுகளுக்கு முரணாகவுள்ள பயங்கரவாதத் தடை சட்டத்தின் சரத்துகளின் கீழேயே பெரும்பாலான கைதிகள் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளனர்” என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது அநுராதபுரத்தில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் வழக்கு, வவுனியா மேல் நீதிமன்றத்தில் தொடங்கவிருக்கும் நேரத்தில், வழக்கை அநுராதபுரத்துக்கு மாற்றுமாறு சட்டமா அதிபர் ஆணை வழங்கியுள்ளமையானது பொறுப்பற்ற செயலொன்றாகத் தென்படுகிறது எனக் கூறியுள்ள சி.வி. விக்னேஸ்வரன், சாட்சிகள் பயமுறுத்தப்பட்டதாலேயே இவ்வாறு மாற்றியதாகக் கூறப்படுகின்ற நிலையில், சட்டப்படி சாட்சிகளுக்காக வழக்கை இன்னொரு நீதிமன்றத்துக்கு மாற்றுவது கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.  

மேலும் கருத்துத் தெரிவித்த சி.வி. விக்னேஸ்வரன், “எனக்குக் கிடைத்த தகவல்களின் படி, போர் முடிவடையும் தறுவாயில் முன்னரே கைது செய்து வைத்திருக்கப்பட்ட சிலரை விடுதலைப்புலிகள் கொன்றார்கள் என்றும் அதனுடன் இந்த குறிப்பிட்ட கைதிகள் தொடர்புபட்டிருந்தார்கள் என்பதே அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை என்று தெரிய வந்துள்ளது. அத்துடன் சில கைதிகள் அரச சாட்சிகளாக மாறி குறித்த கைதிகளுக்கு எதிராகச் சாட்சியம் கூறினால் விடுதலை கிடைக்கும் என்று அவர்களுக்குக் கூறப்பட்டதாகத் தெரிகின்றது.

இங்கு அரசியல் கலந்திருப்பதை நான் காண்கிறேன். நடந்ததோ இல்லையோ எப்படியாவது விடுதலைப் புலிகள் கடைசிக் கட்டத்தில் தம்வசம் இருந்த சிறைக் கைதிகளைச் சுட்டுக் கொன்றார்கள் என்பது நீதிமன்றத்தில் நிரூபணமாகிவிட்டால் படையினர் செய்த அட்டூழியங்களுக்குச் சமனாகப் புலிகளும் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டிருந்தனர் என்று சர்வதேச அரங்குகளில் இலங்கை அரசாங்கம் கூறமுடியும். இதனால்தான் வேறு கைதிகளையே அரச சாட்சிகளாக்கி தமக்கு வேண்டிய ஒரு முடிவை குறித்த வழக்கில் கொண்டுவர அரசு பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகின்றது” என மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .