2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘வாக்குறுதிகளை நம்புவதற்கு தயாராக இல்லை’

Editorial   / 2017 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன்

 

“கடந்த ஆறு மாதங்களாக, தெருவில் இருந்து போராடுகின்ற எங்களை, தொடர்ந்து இந்த அரசாங்கம் ஏமாற்றி வருகின்றது. இனியும் நாங்கள் வாக்குறுதிகளை நம்புவதற்கு தயாராக இல்லை” என, முல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.  

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள், தங்களது பூர்வீகக் காணியை விடுவிக்கக்கோரி, கடந்த 176 நாட்களாக (இன்றுடன்) போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.  

அவர்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

“இந்த நல்லாட்சி அரசாங்கமானது, கால அவகாசங்களைக் கோரி, எங்களை வீதியில் காத்திருக்க வைக்கின்றதே தவிர, எங்களது நிலத்தை விடுவிக்கவில்லை. இனியும் நாங்கள் வாக்குறுதிகளை நம்புவதற்கு தயாராக இல்லை.  

“ஒவ்வொரு கட்சிக்காரர்களும் அரசியல்வாதிகளும் இங்கு வந்து செல்கின்றார்கள். தமக்கு கால அவகாசம் கேட்கின்றார்களே தவிர, எமக்கு சரியான, தீர்க்கமான பதிலைப் பெற்றுத்தரவில்லை.  

“அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகள் ஏன் இப்படி இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் வீதியில் இப்படியே இருந்து மடிய வேண்டும் என்று நினைக்கின்றார்களோ தெரியவில்லை.  

“அரசாங்கம் முடிவு எடுத்திருந்தால் காலத்தை இழுத்தடிக்காமல் எங்களுக்குத் தீர்வைத் தந்திருக்கலாம். போராட்டத்தில் வயோதிபர்கள், சிறுவர்கள், நோயாளர்கள், என்று பலதரப்பட்டோர் இருக்கின்றோம். அவர்களைப் பற்றியாவது சிந்தியுங்கள்.  

“போராட்டக் காலங்களில் நாம் பல அவலங்களைச் சந்தித்திருக்கின்றோம். நிம்மதி இல்லாமல் இருக்கின்றோம். ஓர் அரசியல்வாதியாவது, ஒரு நாள் இரவும், பகலும் எங்களுடன் இருந்து பாருங்கள், அப்போது எங்கள் வலி உங்களுக்கு புரியும்” என்றனர்.  

இதேவேளை, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வழங்குவதாகக் கூறிய 148 மில்லியன் ரூபாய் நிதி கிடைத்ததும், முல்லைத்தீவில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று, இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன, கடந்த 15ஆம் திகதி தெரிவித்திருந்தார்.  

  இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் வெளிநாடுகளின் தூதுவர்களுக்கு கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கடிதம் அனுப்பி வைத்திருந்தார். காணி விடுவிப்புத் தொடர்பில், அரச தலைவருடன் நேரடியாகப் பேச்சு நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .