2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’வீதியில் நின்ற இளைஞன் மீதே ஆயுததாரியின் இலக்கு இருந்தது’

Editorial   / 2017 ஜூலை 23 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

“வீதியில் நின்ற இளைஞன் மீதே, ஆயுததாரி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார்” என, நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகச் சம்பவத்தை நேரில் பார்த்ததாகத் தெரிவித்த இளைஞன் ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“நாம் வீதியால் வந்து கொண்டிருந்த வேளை, நல்லூர் பின் வீதியில் உள்ள கோவில் வீதி - பருத்தித்துறை வீதிச் சந்திக்கு அருகில், இளைஞர் ஒருவர் நின்றுக்கொண்டிருந்தார். அவரது ஆடையில் வர்ண நிறப்பூச்சுகள் (பெயின்ட்) காணப்பட்டன. அவரைப் பார்க்கும் போது வர்ண நிறப்பூச்சுப் பூசும் வேலைக்குச் சென்று வந்தவர் போன்று காணப்பட்டார்.

“குறித்த இளைஞன் மீது, ஆயுததாரி ஒருவர், கைத்துப்பாக்கியால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார். அவ்வேளை, அந்த வீதியால் எமக்கு பின்னால் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் வாகனமும் வந்து கொண்டிருந்தது.

“துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து, நாமும் வீதியால் வந்து கொண்டிருந்த நீதிபதியும், வாகனத்தை நிறுத்தினோம். அதன் பின்னர் நாமும் நீதிபதியின் வாகனத்தில் வந்திருந்த நீதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தரான பொலிஸ் உத்தியோகத்தரும், துப்பாக்கிதாரியைப் பிடிக்க முயன்றோம்.

அதன்போது, துப்பாக்கிதாரி எம் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். அதன் போது நீதிபதியின் பாதுக்காப்பு உத்தியோகத்தர்கள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

“அதனைத் தொடர்ந்து, துப்பாக்கிதாரி, வீதியால் ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வயோதிபத் தம்பதிகளின் மோட்டார் சைக்கிளை, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்ற வேளை, மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்டை இழந்து, வீதியோர மதிலில் மோதுண்டது.

“இதன்போது, துப்பாக்கிதாரியின் கையில் இருந்த கைத்துப்பாக்கி, வீதியில் வீழ்ந்தது. அதைக் கைவிட்ட துப்பாக்கிதாரி, கோவில் வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார்” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சம்பவ இடத்தில் பத்து வெற்றுத் துப்பாக்கிச் சன்னங்கள் காணப்பட்டதாகவும், துப்பாக்கிதாரி வீழ்த்திச் சென்ற நிலையில் மீட்கப்பட்ட கைத்துப்பாக்கியானது, 12 எம்.எம் வகையைச் சேர்ந்து எனவும், துப்பாக்கி மீட்கப்பட்ட போது, மகசீன் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .