2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’எவர் வெளியேறிச் சென்றாலும் அரசாங்கம் கவிழாது’

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூலை 17 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

"அரசாங்கத்தில் இருக்க விருப்பமில்லாத எந்த ஒருவருக்கும், அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் செல்ல முடியும். அவ்வாறு அவர்கள் வெளியேறிச் செல்வதால் அரசாங்கம் பலவீனமடைந்து விடப்போவதில்லை" என, நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார கூறினார்.

"இந்த அரசாங்கம், 2020 ஆம் ஆண்டு வரையில் பலமிக்க அரசாங்கமாகத் தொடர்ந்து பயணிக்கும். அரசாங்கத்தில் உள்ள சில தரப்பினருக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் சிலர் கூக்குரலிட்டாலும் அவைகளுக்குப் பயப்படவேண்டிய தேவையில்லை. சத்தம் போடுபவர்கள் குரைக்கும் அளவுக்குக் கடிப்பதில்லை என்பது எமக்குத் தெரியும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாஹோ மடகல்ல ஹக்வட்டுனாஓயா நீர்ப்பாசனத் திட்டத்தை, இன்று (17) பார்வையிட்டதன் பின்னர், அங்கு குழுமியிருந்தவர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், "சத்தம் போட்டு, அரசாங்கத்தைப் பயம் காட்டுவதற்குச் சில தரப்பினர் முயற்சிகளைச் செய்கின்றார்கள். அவ்வாறு பயப்படுவதற்கு ஒருவருமில்லை. அவ்வாறானவர்கள் வெளியேறினாலும் போவதற்கு இடமுமில்லை. சத்தம் போட்டுக்கொண்டு இங்கே இருந்து கொள்வதே அனைவரினம் எண்ணமாக உள்ளது.

எவராவது அரசாங்கத்தை விட்டுச் சென்றார் என்பதற்காக, எமக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படபோவதில்லை.  விரும்பும் எவரும் எந்த நேரத்திலும் அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் செல்ல முடியும். அவ்வாறு செல்வதால் அரசாங்கம் கவிழப்போவதுமில்லை. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் 2020ஆம் ஆண்டு இடம்பெறும் வரையில் இந்த அரசாங்கம் பலமான அரசாங்கமாக தொடர்ந்து பயணிக்கும்.

ஹக்வட்டுனாவ நீர்ப்பாசன திட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளதாக ஜனாதிபதிக்கும் கூட முறையிடப்பட்டிருந்ததால் நான் இன்று அதிகாரிகள் சகிதம் இதன் நிலைகளைப் பார்வையிடுவதற்காக வந்திருக்கின்றேன். சில குற்றச்சாட்டுக்கள் போதிய விளக்கம் இல்லாமல் முன்வைக்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்துக்காக செலவிடப்படும் மொத்த தொகை 532 மில்லியன் ரூபாயாகும். இந்தத் திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் கைவிடப்பட்ட வயல் நிலங்களுக்கு நீரை வழங்க முடியும்.  2019 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் இத்திட்டத்தை முடித்து வைக்க எதிர்பார்க்கிறோம்" எனவும் அமைச்சர் இதன் போது கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .