2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புத்தளத்தில் விசேட சோதனை 18 பேர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 26 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் மற்றும் கற்பிட்டி ஆகிய பகுதிகளில் நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக, இலங்கையின் பல இடங்களிலும் பாதுகாப்பு தரப்பினரால் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று (25) கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடமிருந்து, ஒரு தொகை சிம் கார்ட்கள் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடமிருந்து, பறிமுதல் செய்யப்பட்ட சிம் கார்ட்களில் 14 சிம் கார்ட்கள் பாவனையில் உள்ளதாகவும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் ௯றினர்.

இதேவேளை, புத்தளம் தில்லையடி அல் - ஜித்தா கிராமத்தில் வியாழக்கிழமை பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த சோதனை நடவடிக்கைகளின் போது, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனரென, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கத்தி ஒன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவரும், சந்தேகத்தின் பெயரில் ஒருவருமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனரென, புத்தளம் பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அநுர குணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, புத்தளம், மதுரங்குளி மற்றும் வன்னாத்தவில்லு ஆகிய பகுதிகளில், வீதித் தடைகளை ஏற்படுத்தி வாகனங்கள் மற்றும் நபர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சோதனை நடவடிக்கைக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். 

அத்துடன், புத்தளத்தில் உள்ள அனைத்து மதஸ்தளங்களுக்கும் கடும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், தமது தேவைகள் நிமித்தம் அரச அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் கடும் சோதனைகளுக்குப் பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் ௯றப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .