2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கொவிட்-19க்கு முகம் கொடுக்கும் வியாபாரத்தை விருத்தி செய்யும் திறன்கள்

Editorial   / 2020 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி. யுதாஜித்

சுற்றுலாத்துறையில் திறன்களை அபிவிருத்தி செய்யும் வகையில், அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியில் செயற்படுத்தப்படும் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்கு அமைவாக உள்வாங்கப்பட்ட, வளர்ச்சிக்கான தேர்ச்சித் திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தின் எதிர்வரும் 3 வருடங்களுக்கான மூலோபாயத்திட்டத்தின் வெளியீட்டு நிகழ்வு, அண்மையில் அம்பாறை ரண்பிம விடுதியில் நடைபெற்றது.  

 உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் சுற்றுலா, விருந்தோம்பல் துறையின் அபிவிருத்திக்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2023ஆம் ஆண்டு வரையில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்களை உள்ளடக்கியதான இத்திட்டத்தின் வெளியீட்டு நிகழ்வில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவும் சிறப்பு அதிதியாக மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

 அத்துடன், மாவட்டத்திட்டமிடல் செயலகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர், அரச, தனியார் சுற்றுலாத்துறை பங்குதாரர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். நிகழ்வில், உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் அம்பாறை மாவட்ட முகாமையாளர் 

யு.எல்.சம்சுதீன், திட்டத்தின் மூலோபாயப் பிரிவு பணிப்பாளர் ஆர்.ரசுராமமூர்த்தி, முகாமையாளர் திருமதி சரண்யா ரவிக்குமார் உள்ளிட்டோரும் பங்கு கொண்டு விளக்கங்களை வழங்கினர்.  

 இத்திட்டத்தில், சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான திறன்களை விருத்தி செய்வதன் மூலம், புதிய திறன்களை உருவாக்குதல், புதிய திறன்கள் உள்ள மனித வளத்தை உருவாக்குதல், தொழில்வாய்ப்புகளை உருவாக்குதல், சுற்றுலாத்துறைக்குத் தேவையான புதிய திறன்களை விருத்திப் பயிற்சிநெறிகளை உருவாக்குதல், பெண்கள்,  மாற்றுத்திறனாளிகளை சுற்றுலாத்துறையில் இணைப்பதற்கு ஊக்குவித்தல் போன்ற பல்வேறு விடயங்கள் இணைக்கப்பட்டுள்ளன.  

 அதேநேரத்தில், தகவல் தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சி நெறிகளை வழங்குதல், கொவிட்-19க்கு முகம் கொடுக்கக்கூடிய வியாபாரத்ைத  விருத்தி செய்வதற்கான திறன்களை விருத்தி செய்தல், சுற்றுலாத் தளங்கள் பற்றிய விவரங்களை வெளியிடங்களுக்குத் தெரியப்படுத்துதல், அது பற்றிய தகவல்களை உருவாக்குவதற்கான திறன்களை விருத்தி செய்தல், சுற்றுலாத்துறைக்குத் தேவையான திறன்களை இனங்கண்டு விருத்தி செய்து, அவற்றை மாவட்ட மட்டத் திட்டமிடல் செயற்பாடுகளுடன் ஒருங்கிணைத்தல், அரச, தனியார் சுற்றுலாத்துறை பங்குதாரர்களை ஒருங்கிணைக்கத் தேவையான திறன்களை விருத்தி செய்தல் ஆகியவை மூலம், புதிய மாதிரிகளை உருவாக்கி தேசிய ரீதியாக அமல்படுத்துவதற்கு அமைச்சுக்கு பரிந்துரை செய்தல் நடைபெறும்.  

 உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமானது, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, பொலநறுவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வறிய நிலையிலுள்ள ஆண்கள், பெண்கள், வலது குறைந்தோரைத் தொழிலாளர்களாக, உற்பத்தியாளர்களாக, முயற்சியாண்மையாளர்களாக சுற்றுலாத்துறையில் உள்வாங்குவதை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படுகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .