2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நிதியியல் அறிவு அவசியமா?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

உண்மையில், நமது கல்வியறிவு விகிதமானது, நமது நிதியியல் சார்ந்த விடயங்களைச் சார்ந்தோ நிதிசார் தேவைகளை முழுமைபெறச் செய்வதாகவோ அமைந்திருக்க வேண்டியதில்லை. ஆனாலும், அதிகரித்த கல்வியறிவு விகிதமானது, நாளாந்த நமது நிதியியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவோ அல்லது அடிப்படையான நிதியியல்சார் விடயங்களைப் பூர்த்தி செய்துகொள்ள உதவுவதாகவோ அமைந்திருக்க வேண்டியது அவசியமாகும். உதாரணமாக, கல்வியறிவு அதிகம் கொண்ட நம்மில் பலருக்கே, காசோலைகளை எப்படி நிரப்புவது, அதனை எப்படி வங்கியில் வைப்பிலிடுவது, பண வைப்பு மற்றும் பணம் மீளப்பெறல் இயந்திரங்களை எப்படி இயக்குவது, வங்கிக் கூற்றுகளை எவ்வாறு ஆய்வுசெய்வது, நிதிச் செயற்பாடுகளைத் திட்டமிடுவது  என்பதில் பலத்த குழப்பங்களும் சந்தேகங்களும் உள்ளன. படித்தவர்கள் நிலையே இவ்வாறிருக்க, சாதாரணப் பொதுமக்களின் நிலை என்னவாக உள்ளதெனச் சிந்தித்துப் பாருங்கள். 

தென்னாசியாவிலேயே, இலங்கையின் கல்வியறிவு விகிதமானது, ஏனைய அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் கல்வியறிவு விகிதத்துக்கு மிக நெருக்கமான போட்டித்தன்மை வழங்கும் நிலையிலேயே உள்ளது. குறிப்பாக, இலங்கையில் முதிர்ச்சி அடைந்தவர்களின் கல்வியறிவு விகிதமானது, 2018ஆம் ஆண்டின் பிரகாரம் 92 சதவீதமாக உள்ளது. ஆனாலும், ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்கிற பழமொழிக்கு ஏற்றாற் போல, இந்தக் கல்வியறிவு விகிதமானது, மக்களின் நிதியியல் சார்ந்த அறிவு விகிதத்தில் எவ்விதப் பயனையும் கொண்டிராத ஒன்றாகவே உள்ளது.  

2018ஆம் ஆண்டு ஆய்வுகளின்படி, இலங்கையின் நிதியியல்சார் அறிவு விகிதமானது, 35 சதவீதமாகவுள்ளது. 92 சதவீதமான கல்வியறிவைக் கொண்டிருக்கும் நாம், நிதியியல் சார் அறிவில் 35 சதவீதமாக இருப்பது நமது கல்வியறிவுக்கும் நடைமுறை வாழ்வியல்சார் விடயங்களுக்கும் இடையிலான இடைவெளியைத் தெள்ளத்தெளிவாகக் காட்டி நிற்கின்றது. 

நிதிசார் அறிவென்பதை, பணம் எவ்வாறு செயற்படுகின்றதென அறிந்து கொள்வதாக வரையறுத்துக்கொள்ள முடியும். இதனுள், எவ்வாறு பணத்தை உழைத்துக்கொள்வது, முதலீடுகளை எவ்வாறு செய்வது, செலவீனங்களைக் கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளுவது, எவ்வாறு சேமித்துக்கொள்வது போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும்.எனவே, தனிநபரொருவர் நிதியியல் சார் அறிவைப் பொருத்தமான வகையில் கொண்டிருக்கும்போது, அவர் தனது நிதி நலன்களைத் தானே சமாளித்துக் கொள்ளக்கூடியதாக இருப்பதுடன், அதுசார் வரிச் சுமைகள் தொடர்பான அறிவையும் தனது வருமானத்துக்கேற்ப செலவுகளைத் திட்டமிட்டுக் கொள்ளக்கூடிய திறனையும் கொண்டிருப்பவராக இருப்பார்கள்.  

தெற்காசியாவில், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, இலங்கை போன்ற நாடொன்றில் மக்களுக்கும் வங்கிகளுக்கும் இடையிலான இடைவெளியானது, மிகக் குறைவாகும். உதாரணமாக, இந்தியா போன்ற நாடொன்றில், பல கிராமங்களில் பொருத்தமான வங்கி வசதிகளைக் கொண்ட வங்கிகளற்ற நிலையே காணப்படுகின்றது. ஆனாலும், இலங்கை போன்ற நாடொன்றில், மிகப்பெரிய முன்னேற்றகரமான நிலையுள்ள போதிலும், நிதியியல்சார் அறிவில் நம்மவர்கள் மிகவும் பின்தங்கி யநிலையிலுள்ளமை ஆச்சரியத்தைத் தரக்கூடிய தரவாக அமைந்துள்ளது. பெரும்பாலான நிதியியல் செயற்பாடுகள், வங்கிகளுடன் பின்னிப் பிணைந்திருப்பதால், நமது அடிப்படையான நிதியியல் செயற்பாடுகள் அனைத்துமே அங்கிருந்துதான் ஆரம்பிக்கின்றன. எனவே, இலங்கை போன்ற நாடொன்றில், வங்கிகளுடன் மிக நெருக்கமான உறவை நாம் கொண்டிருக்கின்ற போதிலும், அவை சார்ந்த அடிப்படையான விடயங்களில்கூட நாம் கவனம் செலுத்தவில்லை என்பதே உண்மையாகவுள்ளது. 

நிதியியல் ரீதியான படிப்பினையானது, கல்விக் கூடங்களிலிருந்து ஆரம்பிப்பது என்பது பொருத்தமானதாகாது. மாறாக, அவை ஒவ்வொரு வீட்டிலும் அல்லது குடும்பங்களிலிருந்துமே ஆரம்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான், அவை மேலும் அர்த்தமுடையதாக அமையும். ஆனால், அவை நடைமுறைக்குச் சாத்தியமற்றே உள்ளன. இதற்குப் பிரதான காரணம், இலங்கையின் பெரும்பாலான குடும்பங்கள், பொருத்தமான நிதி ஆதாரங்களைக் கொண்டிருப்பதில்லை. எனவே, அத்தகைய குடும்பங்கள், நிதிசார் பராமரிப்புகளை மேற்கொள்ளவோ அதற்கு முக்கியத்துவம் வழங்கவோ முற்படுவதில்லை. மாறாக, அத்தகைய குடும்பங்கள், நாளாந்த நிதியியல் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதையே  பிரதானமானதாகக் கொண்டிருக்கின்றன. இதுதான், பெரும்பாலான நடுத்தர வருமானத்தைக் கொண்ட குடும்பங்களின் நிலையாகவும் இருப்பதால், நம்மவர்களின் நிதியியல்சார் அறிவு விகிதத்தில் தளம்பல் காணக் காரணமாகவுள்ளது. 

இன்றைய இலங்கையில், பெரும்பாலும் நகரத்தை நோக்கி பறந்துகொண்டிருப்பவர்களும் நகரத்தில் வாழ்பவர்களும், நிதியியல் ரீதியான அடிப்படை அறிவைக் கொண்டிருக்கிறார்கள். இவர்களால், நிதிசார்ந்து வெளியிடப்படும் கவர்ச்சிகரமான விளம்பரங்களில் பெரும்பாலானவற்றின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ளக் கூடியதாகவும் உள்ளது. ஆனால், இவர்களில் பெரும்பாலானவர்களுக்கே கடனட்டையின் செயற்பாடுகள், வங்கியின் குறுங்கால மற்றும் நீண்டகால கடன்களுக்கு எவ்வாறு வட்டி விகிதம் அறிவிடப்படுகின்றது என்பது போன்ற பல்வேறு விடயங்களில், இன்னமும் தெளிவற்ற நிலையே காணப்படுகின்றது. இவை அனைத்துமே, நாம் இன்னமும் நிதியியல்சார் கல்வியறிவு விகிதத்தில் வளர்ச்சியடைய வேண்டும் என்பதையும் இது நம்மைச் சுற்றியிருக்கும் நிதி நிறுவனங்களுக்கும் ஏதுவாக அமைந்துள்ளது. 

இலங்கையின் நகரங்களைத் தவிர்த்து, கிராமப்புறங்களில் இந்த நிலை மிக மோசமாக இருக்கின்றது. இதற்குப் பிரதான காரணம், கிராமங்களில் நிதியியல்சார் விடயங்கள், வீட்டின் தலைவர்களைச் சுற்றியே வியாபித்திருப்பதாகும். பெரும்பாலும், உழைக்கும் தரப்பாக ஆண்களிருப்பதுடன், அவர்கள் பெரும்பாலான நிதியியல் செயற்பாடுகளையும் நிதிசார் நெருக்கடிகளையும் குடும்பத்தில் பகிர்ந்துகொள்ளாத நிலையும் காணப்படுகின்றது. இதன் விளைவால், குடும்பங்களில் நிதியியல்சார் தகவல் பரிமாற்றம் குறைவடைகிறது. அத்துடன், பெண்கள் அடியோடு இது தொடர்பான புரிதலைக் கொண்டிராத நிலை ஏற்படுகிறது. இதன்காரணமாக, கிராமப்புறங்களில் சட்டத்துக்குப் புறம்பான நிதியியல்சார் செயற்பாடுகள், நேரத்துக்கு நேரம் புல்லுருவியாகத் தோன்றி, மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொண்டுள்ளது. பணம் சார்ந்த கவர்ச்சியும் அதனை மிக விரைவாக உழைத்துக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலும், அதனுடன் சேர்ந்ததாக நிதியியல் சார்பாகப் போதிய அறிவின்மையும், இந்தச் சட்டத்துக்குப் புறம்பான நிதியியல் செயற்பாடுகள் வெற்றிபெறவும், அதனூடாக மக்கள் தமது உழைப்பை இழக்கவும் காரணமாகி இருக்கிறது. 

இத்தகைய நிலையிலிருந்து நாம் மீளவும் நமது நிதியியல்சார் கல்வியறிவு விகிதத்தை அதிகரித்துக் கொள்ளவும், நாம் நிறைய விடயங்களை நமது குடும்பங்களிலிருந்தும் கல்வியியல் ரீதியாகவும் மாற்றவேண்டியது அவசியமாகிறது. குடும்பங்களைப் பொறுத்தவரை, பெண்களுக்கு நிதியியல் சார்ந்த சுதந்திரத்தை  வழங்குவது அவசியமாகிறது. தற்போதைய காலகட்டத்தில், ஆண்களுக்கு சமமாகப் பெண்களும் வீட்டின் தலைமைப் பொறுப்பைக் கையாளும் நிலையுள்ளது. எனவே, அவர்கள் நிதியியல் ரீதியான சுதந்திரத்தைக் கொண்டிருப்பதுடன், நிதிசார் அடிப்படை அறிவைப் பெற்றிருப்பதையும் உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும்.
அத்துடன், பெரும்பாலான கிராமப்புறங்களிலும் சரி நகர்ப்புறங்களிலும் சரி, நாட்கூலியை நம்பியே வாழ்க்கையைக் கொண்டு நடத்தும் குடும்பங்கள் இருக்கின்றன. இத்தகைய குடும்பங்களில், ஒரு நாள் வருமானம் இல்லாதுபோகின்ற போது, அவர்களுக்கான உணவைக்கூட அவர்கள் குறித்த நாளில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே, நாளாந்த வருமானத்தை நம்பியுள்ள குடும்பங்களில்கூட, இந்த நிதியியல் ஒழுக்கத்தை (Financial Discipline) கொண்டுவருகின்ற வகையில், இலங்கை அரசாங்கமும் இலங்கை வங்கியும், பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். இது, நாட்டின் பொருளாதாரத்துக்கும் ஒருவகையில் உதவுவதாக அமைந்திருப்பதுடன், சிறு குடும்பங்களின் பொருளாதார நலனைப் பாதுகாப்பதாகவும் அமையும். 

2016ஆம் ஆண்டின் இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் பிரகாரம், இலங்கை மக்களின் சராசரிக் கடனின் உச்ச வரம்பு, 196.00 ரூபாயெனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது, தனித்து வடக்கு - கிழக்கு பகுதிகளாகப் பார்க்கின்ற போது, இன்னும் அதிகமாகவிருக்க வாய்ப்புள்ளது. போர் காரணமாக, பல்வேறு வகையில் நிதியியல் இழப்புகளைச் சந்தித்துள்ள நம்மவர்கள், நிதியியல் ரீதியான ஒழுக்கநிலையில் இன்னமும் பின்தங்கியவர்களாகவே இருக்கின்றார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக, நுண்ணியல் நிதிக்கடனில் சிக்கியுள்ளவர்களின் நிலையே போதுமானது. எனவே, இந்த நிலையிலிருந்து மீண்டுவர, நமது இளம் சந்ததியினராவது கல்வியறிவு விகிதத்துடன், நிதியியல் சார் அறிவு விகிதத்தையும் அதிகரித்துக்கொள்வது  அவசியமாகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X