2024 மார்ச் 19, செவ்வாய்க்கிழமை

12 மில்லியன் மணித்தியால பணி நேரத்தைப் பாதுகாப்பாகக் கடந்த கொழும்பு துறைமுக நகரம்

J.A. George   / 2020 டிசெம்பர் 02 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீனவர் வாழ்வாதார மேம்பாட்டுச் செயற்திட்டத்துக்கு ரூ. 550 மில்லியன்

உள்நாட்டுச் சேவைகள் மற்றும் விநியோகங்களுக்கு முன்னுரிமை

1,500 உள்நாட்டு விநியோகஸ்தர்களுக்கு முறையான பயிற்சி

8,000 இலங்கையர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு

கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டம், 2014 முதல் 2019ஆம் ஆண்டு இறுதி வரையில், எவ்விதமான விபத்துக்களுமின்றி 12 மில்லியன் மணித்தியாலங்கள் பணி நேரத்தை, வெற்றிகரமாக கடந்துள்ளது.

கொழும்புத் துறைமுக நகரத்தால், வெளியிடப்பட்ட 2018 - 2019 சமூகப் பொறுப்புணர்வு அறிக்கையில், இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை, கொழும்புத் துறைமுக நகர இணையத்தளத்தில், உத்தியோகபூர்வமாக  இன்று (02) வெளியிடப்பட்டுள்ளது. கொழும்புத் துறைமுக நகரம் மற்றும் அந்த வேலைத்திட்டத்தின் தாய் நிறுவனமான China Communications Construction Company (CCCC) நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள முதலாவது சமூகப் பொறுப்புணர்வு அறிக்கை  இதுவாகும்.

2014 செப்டெம்பர் முதல் 2019 நவம்பர் வரையான காலப்பகுதியை உள்ளடக்கியவாறு, சமூகங்கள், ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பூமி மீது நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டை இந்த அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது.

இவ்வறிக்கையின் சிங்களம் மற்றும் தமிழ்ப் பிரதிகளை, http://www.portcitycolombo.lk என்ற இணையத் தளத்திலிருந்து, எந்தவொரு நபரும் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

ஆரோக்கியமான வேலைத்திட்டம்

இலங்கையின் தேசிய உற்பத்திகள் மற்றும் விநியோகங்களுக்கு முன்னுரிமை அளித்து, தேசிய விநியோகஸ்தர்களுடன் நீண்டகாலத் தொடர்புகளைப் பேணிக்கொள்ளும் நோக்கில், இந்த வேலைத்திட்டத்துக்கான நிர்மாணப் பணிகளுக்குத் தேவையான கொள்வனவுகள் அனைத்தும், உள்நாட்டு விநியோகஸ்தர்களிடம் இருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டன.

சுமார் 1,500 விநியோகஸ்தர்களுக்கு முறையான பயிற்சிகளைப் பெற்றுக்கொடுத்து, அவர்களுக்குத் தரமான சான்றிதழ்களைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம், விநியோகத்துறைக்கு மேலும் வலுச்சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பாரிய வேலைத்திட்டங்கள் மற்றும் நிர்மாணப் பணிகளுக்காக, உள்நாட்டுத் திட்டமிடல் நிபுணர்களிடமிருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்வதோடு, நேரடியாக இலங்கையர்கள் 8,000க்கும் அதிகமானோருக்குப் பயனளிக்கும் வகையில், வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கவும், நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வாழ்வாதாரம் மற்றும் இணைந்த செயற்றிட்டங்கள்

இச்செயற்திட்டத்தின் மூலமாக சமூக அபிவிருத்தியை ஊக்குவித்து, உள்நாட்டில் வாழ்வாதாரம் சார்ந்த தேவைகள் மற்றும் மேம்பாட்டை கண்காணித்து உள்நாட்டு சமூகத்திற்கு கண்கூடான நன்மைகளை வழங்குவதே கொழும்பு துறைமுக நகரத்தின் நோக்கமாகும்.

நீர்கொழும்பிலுள்ள மீனவர்களின் கஷ்டமான வாழ்வியல் நிலைமைகள் தொடர்பான ஆழமான விபரங்களைத் திரட்டிய பின்னர், இலங்கை அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற ஸ்தாபனங்களுடன் ஒன்றிணைந்து மீனவர் வாழ்வாதார மேம்பாட்டுச் செயற்திட்டத்திற்காக ரூபாய் 550 மில்லியன் தொகையை நிதியுதவியாக வழங்கும் திட்டத்தை நிறுவனம் முன்வைத்துள்ளது.

நீர்கொழும்பிலுள்ள கிட்டத்தட்ட 15,450 மீனவர்களுக்கு காப்புறுதி வழங்கப்பட்டுள்ளதுடன், மீனவர் சமூகங்களுக்கு 35 மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்து 6,000 பேருக்கு சேவைகளையும் நிறுவனம் வழங்கியுள்ளது.

நிதியுதவிகளை வழங்குவதற்காக நீர்கொழும்பு முதல் வத்தளை வரையில் 77 மீன்பிடி சங்கங்களுக்கு மொத்தமாக ரூபாய் 154 மில்லியன் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடற்கரையில் மண்ணரிப்பு சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில், கடற்கரைப் பிரதேசங்களை மறுசீரமைத்து, நீர்த்தடுப்பணைகளை நிர்மாணிப்பதற்கும் ரூபா 300 மில்லியன் தொகையை நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் ஆகியவற்றின் பங்குடமையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் என்ற தொனிப்பொருளுடன் ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கு ரண் பூமி பேரணியை கொழும்பு துறைமுக நகரம் அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளது.

நாடெங்கிலும் 9 மாகாணங்கள், 25 மாவட்டங்கள் மற்றும் 1,500 கிராமங்களை உள்ளடக்கியவாறு இந்த 40 நாள் பிரசாரமானது 10 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களை ஈர்த்துள்ளது.  

பாடசாலை உபயோகப் பொருட்களை நன்கொடையாக வழங்கி, சிறப்பான கல்வியை வழங்குவதற்காகவும், கற்பித்தல் மற்றும் கற்றல் வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் கல்வி அமைச்சுடன் இணைந்து Hope செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்பள்ளிகளின் துணை வசதிகளை மேம்படுத்தல், உலக பல்கலைக்கழக விவாத சுற்றுப்போட்டியை ஏற்பாடு செய்தல், கொழும்பு துறைமுக நகர செயற்திட்டத்தின் வெகுசன ஊடக பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு சிறுவர்களை தெரிவு செய்தல் மற்றும் உள்நாட்டில் இளைஞர்,யுவதிகளை வலுவூட்டுவதற்காக NSBM Green University Town பல்கலைக்கழகத்துடன் பங்குடமையை ஏற்படுத்தல் அடங்கலாக பல்வேறு செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், உள்நாட்டில் இயற்கைப் பேரழிவுகளின் போது மீட்பு நடவடிக்கைகளில் பங்கேற்றல் Nāgānanda International Institute for Buddhist Studies (NIIBS) பௌத்த கற்கை நிலையத்துக்கு, சீனக் கலாசார புத்தகங்களை நன்கொடையளித்தல் அடங்கலாக பொது நலன்புரி ஸ்தாபனங்களுக்கு நிதியுதவி அளித்தல் போன்ற நன்கொடையளிப்பு நடவடிக்கைகளையும் நிறுவனம் தீவிரமாக முன்னெடுத்துள்ளது.  

ஒருங்கிணைந்த செயற்றிட்டம்

பொறியியலாளர் முதல் நிர்வாகி வரை உயர் திறனும், சிறந்த அனுபவமும் கொண்ட ஊழியர்களை நிறுவனம் அறிவுபூர்வமாக வளர்த்தெடுத்துள்ளது. வேலைத்தள செயன்முறை விளக்கங்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பயிலுனர்களுக்கிடையில் இடைத்தொடர்பு, நுண்ணறிவு அடிப்படையிலான அறிவுப் போட்டிகள் அடங்கலாக வருடாந்த பணியாளர் பயிற்சித் திட்டங்களை தீவிரமாக ஊக்குவிப்பதிலும் கொழும்பு துறைமுக நகரம் ஈடுபட்டுள்ளது. 2019 ஒக்டோபரின் முடிவில் 620 பேரின் பங்குபற்றலுடன், 16 பயிற்சி நிகழ்வுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பாதீட்டில் பயிற்சிக்கான 37 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பான செயற்திட்டம்

நிர்மாண நடவடிக்கைகளின் போது காயம் அல்லது சேதாரம் மூலமான ஆபத்துக்களைக் குறைக்கும் வகையில் செயற்திட்டம் தொடர்பான அனைத்து செயற்பாடுகளிலும் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை கொழும்புத் துறைமுக நகர செயற்திட்டம் மிகவும் கவனமாக முன்னெடுத்துள்ளது.

4,224 பேரின் பங்குபற்றலுடன் 192க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பயிற்சி அமர்வுகளை இச்செயற்திட்டம் ஏற்பாடு செய்துள்ளதுடன், எவ்விதமான விபத்துக்களுமின்றி, 2014 முதல் 2019ஆம் ஆண்டு வரையில், அண்ணளவாக 12 மில்லியன் மணித்தியாலங்கள் பணி நேரத்தை வெற்றிகரமாகக் கடந்துள்ளது.

சூழலுக்குத் தீங்கிளைக்காத செயற்றிட்டம் 

இச்செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது உள்நாட்டு பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்து, சூழலை மேம்படுத்தி, மாசடைதலைக் குறைத்து, வளங்களைப் பாதுகாத்து, நிலைபேறு சார்ந்த அபிவிருத்தி எண்ணக்கருவை கடைப்பிடித்து, பல்வேறு விருதுகளையும், பாராட்டுக்களையும் நிறுவனம் பெற்றுள்ளது.

ஆபிரிக்கா, ஆசிய பசுபிக் மற்றும் மத்திய கிழக்கு (AAPME) International Federationof Landscape Architects (IFLA) Awards  விருதுகளில் கௌரவ பெயர் நியமனம், 2018 Yuan Ye Urban Design Awards  நிகழ்வில் தங்க விருது, Singapore Institute ofLandscape Architects ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட Singapore Landscape Architecture Awards 2017 நிகழ்வில் வெள்ளி விருது எனப் பல்வேறு விருதுகளும், பாராட்டுகளும் இதில் அடங்கியுள்ளன.

”இலங்கை மக்களுடன் இணைந்து பணியாற்றுவதே எமது நோக்கம்' என்று CCCC இன் பணிப்பாளர் சபைத் தலைவரான லியு ஷிதாஓ, குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 'கொழும்பு துறைமுக நகர செயற்றிட்டமானது, இணை-பேச்சுவார்த்தை, இணை-கட்டுமானம் மற்றும் பகிர்வு ஆகியவற்றைக் கடைப்பிடிக்கும் 'Belt and Road' கட்டுமான வேலைத்திட்டத்தின் கீழ் சீன-இலங்கை நடைமுறை பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பின் பிரதான செயற்திட்டங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. இலங்கை மக்களுடன் ஒன்றிணைந்து பொதுவான வளர்ச்சிக்கான நலன்கள், விதி மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றுடனான சமூகங்களைக் கட்டியெழுப்புவதை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை மக்களுடன் இணைந்து பணியாற்றுவதே எமது நோக்கம்' என்று கூறியுள்ளார்.

'நிலைபேறு சார்ந்த அபிவிருத்திக்கான கருப்பொருளை நடைமுறைப்படுத்தல், தனது வர்த்தக சமூகப் பொறுப்புணர்வை சிறப்பாக நிறைவேற்றுதல், ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தியை விஸ்தரிப்பதற்கு அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுதல் ஆகியவற்றை CCCC தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதுடன், சூழலுக்கு தீங்கின்றிய புத்தாக்கமான பசுமை அபிவிருத்தி மற்றும் பரஸ்பர நம்பிக்கையை அபிவிருத்தி செய்வதன் மூலமாக இலங்கையின் நீண்ட கால நிலையான அபிவிருத்தி வளங்கொழிப்பதற்கு உதவுவதில் சமூகங்கள் ஒத்துழைத்துச் செயற்பட இடமளிக்கும்' என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

தெற்காசியாவில் உலகத்தரம் வாய்ந்த நகரமாகவும், மிகவும் வலுவான பொருளாதார மையமாகவும் கொழும்பு துறைமுக நகரத்தைக் கட்டியெழுப்புவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டுக்கு ஏற்ப தலைசிறந்த உட்கட்டமைப்பு, காணிப் பெறுமதி மேம்பாடு, நகர அபிவிருத்தியை ஊக்குவித்தல் மற்றும் நிலையான தொழில்வாய்ப்புகளை வழங்குதல் அடங்கலாக இலங்கையில் பொருளாதார மற்றும் சமூகப் பயன்களை CCCC உறுதி செய்யும்.

அதன் அங்குரார்ப்பண வர்த்தக சமூகப் பொறுப்புணர்வு அறிக்கையில் விபரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கருத்து ஒருங்கிணைப்பு, முறைமை நிறுவல் மற்றும் நடைமுறை வழிகாட்டல் அடங்கலாக தனது பணியாளர்கள் மத்தியில் அன்றாடப் பணியில் சமூகப் பொறுப்புணர்வு என்ற கருப்பொருளை கொழும்பு துறைமுக நகர செயற்திட்டம் ஒருங்கிணைத்துள்ளது.

இந்த அறிக்கையின் ஆங்கிலப் பதிப்பை வெளியிடும் நிகழ்வு, 2020 ஜனவரி 13ஆம் திகதியன்று இடம்பெற்றது. இலங்கைக்கான சீனத் தூதுவரான Cheng Xueyuan, நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காமினி லொக்குகே, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளரான கலாநிதி பிரியாத்பந்து விக்கிரம ஆகியோர் இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

CCCCஇன் பிரசார தலைவர் லயூ யான்China u;arbour Engineering Company  இன் பிரதி முதல்வரான ஹுவாங் யோங்யே மற்றும் CuEC Port City Colombo (Pvt) Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளரான ஜியாங் ஹவ்லியாங் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

சமூகப் பொறுப்புணர்வு தொடர்பில் CHEC Port City Colombo (Pvt) Ltdஇன் வழிகாட்டல், சமூகப் பொறுப்புணர்வு தொடர்பில் GB/T 36000-2015 இன் வழிகாட்டல், General Administration of Quality Supervisionஇனால் விநியோகிக்கப்பட்டுள்ள சமூகப் பொறுப்புணர்வு அறிக்கையிடல் தொடர்பான GB/T 36001-2015 இன் வழிகாட்டல் Global Sustainability Standards Board (GSSB)இனால் விநியோகிக்கப்பட்ட GRI Sustainability Reporting Standards (GRI Standards) ஆகிய வழிகாட்டல்களைப் பின்பற்றி இந்த அறிக்கை திரட்டப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான விவரங்கள்

கொழும்பின் தற்போதைய வர்த்தக மைய மாவட்டத்தின் விஸ்தரிப்பாக 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் ஆரம்ப முதலீட்டுடன் நிர்மாணிக்கப்பட்ட புத்தம்புதிய நகர அபிவிருத்தியாக கொழும்பு துறைமுக நகரம் மாறியுள்ளதுடன், பூர்த்தி செய்யப்படும் சமயத்தில் ஒட்டுமொத்தமாக 15 பில்லியன் அமெரிக்க டொலர் தொகை முதலீட்டை ஈர்க்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

269 ஹெக்டேயர் விஸ்தீரணத்தைக் கொண்டுள்ளதுடன், தற்போதைய வர்த்தக மைய மாவட்டத்துடன் இணைந்ததாக கடலிலிருந்து நிலத்தை மீளப்பெறும் ஒரு செயற்திட்டமாக அமைந்துள்ளது.

நிதியியல் மாவட்டம், மத்திய பூங்கா வாழ்விடம், சர்வதேச தீவு, கப்பல் தொகுதி மற்றும் தீவக வாழ்விடம் என 5 சூழல் கொண்ட ஒரு செயற்திட்டமாக கொழும்பு துறைமுக நகரம் அமைந்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர செயற்திட்டமானது பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் 5.7 மில்லியன் சதுர மீற்றர் விஸ்தீரணம் கொண்ட கட்டட வசதியைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், A  தர வகுப்பு அலுவலகங்கள், மருத்துவ வசதிகள், கல்வி வசதிகள், ஒருங்கிணைக்கப்பட்ட உல்லாச விடுதி, கப்பல் தொகுதி, சில்லறை வர்த்தக மையங்கள், ஹோட்டல்கள், ஏனைய வாழ்க்கைமுறை செயற்றிட்டங்கiளைப் பொறுத்த வரையில் மிகச் சிறந்த வடிவமைப்புக்கள் பலவற்றைக் கொண்டிருக்கும்.

அதிநவீன நிலைபேற்றியல் கொண்ட நகர வடிவமைப்பு மற்றும் திறன் நகர கருப்பொருட்களைப் பயன்படுத்தும் கொழும்பு துறைமுக நகரமானது தெற்காசியாவின் மையமாக மாறவுள்ளது.

CHEC Port City Colombo (Pvt) Ltdநிறுவனம் தொடர்பான விபரங்கள்

China Harbour Engineering Company (CHEC) இன் கீழ் இயங்கி வருகின்ற CHEC Port City Colombo (Pvt) Ltdஆனது  China Communications Construction Company Limited (CCCC) அங்கமாகும். 2006 ஆம் ஆண்டில் கூட்டிணைப்புச் செய்யப்பட்ட CCCC ஆனது ஹொங்கொங் மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தைகளில் நிரற்படுத்தப்பட்டுள்ளதுடன், 145 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் தற்போது 120,000 பேருக்கும் மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டுள்ளது.

துறைமுக வடிவமைப்பு மற்றும் நிர்மாணம், வீதி மற்றும் பாலங்களின் வடிவமைப்பு மற்றும் நிர்மாணம், தூர்வாரல் மற்றும் கொள்கலன் பாரந்தூக்கி மற்றும் கனரக இயந்திரங்களின் உற்பத்தியில் உலகளாவில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாக CCCC திகழ்ந்து வருகின்றது. இதை விட, கட்டட நிர்மாணிப்பில் முன்னணி வகிக்கும் செயற்பாட்டாளராகவும், அசைவற்ற ஆதன இருப்பு முதலீடு மற்றும் நிர்மாணத்தில் பாரிய தொழிற்பாட்டாளராகவும் CCCC திகழ்ந்து வருகின்றது.

2017 டிசம்பரில் முடிவடைந்த நிதியாண்டில் 183 பில்லியன் அமெரிக்க டொலர் மொத்த சொத்துக்களுடன், 79.4 பில்லியன் வருமானத்தை CCCC பதிவாக்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் Fortune 500 நிறுவனங்கள் பட்டியலில் 91 ஆவது ஸ்தானத்தை எட்டிய CCCC, 2018 ஆம் ENR Top International Contractor என்ற உச்ச சர்வதேச ஒப்பந்தகாரர் பட்டியலில் 3 ஆவது ஸ்தானத்தைத் தனதாக்கியுள்ளது.

உலகிலுள்ள மிகப் பாரிய கொள்கலன் இறங்குதுறைகள் மற்றும் கடலுக்கு மேலான பாலங்களை எடுத்துக் கொண்டால் 10 இற்கு 5 என்ற வீதத்தில் அவற்றை வடிவமைத்துள்ள பெருமை CCCC இனையே சாரும். 1998 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் அபிவிருத்திச் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ள CCCC தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, வெளிச்சுற்று நெடுஞ்சாலை, ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தளை சர்வதேச விமான நிலையம், கொழும்பு தெற்கு கொள்கலன் இறங்குதுறை மற்றும் ஏனைய பல பாரிய உட்கட்டமைப்பு செயற்திட்டங்கள் போன்ற பிரம்மாண்டமான செயற்திட்டங்களை நிர்மாணித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X