2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் வங்கிகளிடம் கோரிக்கை

Editorial   / 2020 மே 19 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மத்திய வங்கியினால் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட கடன் மீளச் செலுத்தல் சலுகைக் கால வசதியை பெற்றுக் கொண்ட நபர்களின் தகவல்களை அனுப்புமாறு கொள்ளுமாறு சகல வங்கிகளையும் இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் கோரியுள்ளது.

கொவிட்-19 தொற்றுப்பரவல் காரணமாக, ஒன்று முதல் ஆறு மாத கால வரையான கடன் மீளச் செலுத்தும் சலுகைக்கால வசதியை கடன் வகையை (மூலதனம் மற்றும் வட்டி) பொறுத்து வழங்குமாறு வணிக வங்கிகள், விசேட வங்கிகள் மற்றும் லீசிங் கம்பனிகளுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்தது.

தனிநபர்களால் உபயோகிக்கப்படும் குறிப்பிட்ட வாகனங்களுக்காக லீசிங் மாதாந்த கொடுப்பனவுகளை ஆறு மாத காலப்பகுதிக்கும், தனியார் துறையின் நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களின் பிரத்தியேக கடன்கள் இந்த மாத இறுதி வரையும், 1 மில்லியன் ரூபாய்க்கு குறைந்த சகல பிரத்தியேக கடன்கள் மற்றும் லீசிங் வாடகைகள் போன்றவற்றை மூன்று மாத காலப்பகுதிக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்கள், சுற்றுலா, ஆடைத்தொழிற்துறை, பெருந்தோட்டங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள், சரக்கு கையாளல் நிறுவனங்கள் போன்றவற்றின் கடன்களை மீளச் செலுத்துவது ஆறுமாத காலப்பகுதிக்கு இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

மோசமான CRIB பதிவு காரணமாக கடன் மீளச் செலுத்தலுக்கான சலுகைக் கால கோரலுக்கான விண்ணப்பத்தை நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் நிராகரிக்கக்கூடாது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகள் தொடர்பில் அறிக்கையிடும் விதிமுறைகளை பேணுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதனூடாக வங்கிகிகள் கடன் புள்ளிகள் மற்றும் கடன் பெறுநர்களின் CRIB அறிக்கைகளில் அவை தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் அமைந்திருக்கும் என தெரிவித்துள்ளது.

இந்த அறிவித்தல் வங்கிகளுக்கு கடந்த புதன் கிழமை கிடைத்திருந்ததாகவும், இந்த கடன் சலுகைக் காலத்தை பெற்றவர்களின் விவரங்கள் வேறுபடுத்தி காண்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வணிக வங்கியொன்றின் முகாமையாளர் தெரிவித்தார்.

இந்த கோரிக்கைகள் கிடைத்து 45 தினங்களுக்குள் அதனை நிறைவேற்ற வேண்டும் என்பதுடன், இக்காலப்பகுதியில் விண்ணப்பதாரிகளிடமிருந்து கடன் அறவிடலை மேற்கொள்ளக்கூடாது எனவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கடன் மீளச் செலுத்தல் சலுகைக் கால வசதியை பெற்றுக் கொண்டவர்களின் தகவல்களை இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வை திணைக்களம் மற்றும் வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் திணைக்களத்துக்கு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் ஐந்து தினங்களுக்குள் இந்த மாதம் முதல் அறிவிக்கப்பட வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .