2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கழிவகற்றுவதற்கு தேசத்துக்கு முக்கியமான தீர்வை வழங்கும் INSEE Ecocycle

Gavitha   / 2020 நவம்பர் 16 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாவித்த இலத்திரனியல் மற்றும் மின்னுபகரண சாதனங்களை நிலைபேறான வகையில் கழிவகற்றிக் கொள்வதற்கு பொருத்தமான தீர்வுத் திட்டமொன்றை INSEE குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான INSEE Ecocycle லங்கா பிரைவட் லிமிடெட் முன்வந்துள்ளது.

இலத்திரனியல், மின்னுபகரணக் கழிவுகள் அதிகரித்துச் செல்கின்றமை, அவற்றை திறந்த வெளியில் எரித்தல் அல்லது பொருத்தமற்ற வகையிலான கழிவகற்றல் முறைகளினூடாக சூழலுக்கும் மனித சுகாதாரத்துக்கும் பெருமளவு ஆபத்து ஏற்பட்டுள்ளதையும் நாட்டின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை எய்துவதற்கு சவால்களை ஏற்படுத்துவதாக அமைந்திருப்பதையும் INSEE Ecocycle புரிந்து கொண்டுள்ளது.

பழுதடைந்த மின்சார, இலத்திரனியல் சாதனங்களை முறையற்ற வகையில் கழிவகற்றுவதால் எழக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த INSEE Ecocycle தன்னை தயார்ப்படுத்தியுள்ளது. பிளாஸ்டிக், இரும்பு, இறப்பர், வயர், அச்சிடப்பட்ட மின்சுற்றுப் பலகைகள் போன்ற பொருள்களின் தன்மைக்கமைய அவற்றை பிரித்து வேறாக்கும் நடவடிக்கைகளை நிறுவனம் மேற்கொள்வதுடன், அதற்காக கட்டுநாயக்கவில் நவீன வசதிகள் படைத்த இலத்திரனியல் கழிவு பிரித்தகற்றும் தொழிற்சாலையை செயற்படுத்தி வருகின்றது. இவ்வாறு பிரித்தெடுப்பின் பின்னர் எஞ்சியிருக்கும் பாகங்கள் புத்தளத்திலுள்ள INSEE சீமெந்து kiln க்கு அல்லது முறையான பங்காண்மைகளினூடாக மீள்சுழற்சி பங்காளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஜப்பானின் Ousei Kankyo Shoji Co. Ltd உடனான INSEE சீமெந்தின் பங்காண்மையின் பிரகாரம், மின்னுபகரண கழிவுகளை மீள்சுழற்சிக்குட்படுத்தி சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் புகழ்பெற்றுத் திகழ்வதுடன், இந்நிறுவனத்துடனான பங்காண்மையின் பிரகாரம், பிரித்தெடுக்கப்பட்ட சகல மின்சுற்று பலகைகளும் மீள்பதப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்படும். நாட்டின் நிலைபேறாண்மை, சர்வதேச கூட்டாண்மைக்கான நீண்ட கால பங்காண்மையை செயற்படுத்துவதாக இந்த  உடன்படிக்கை அமைந்துள்ளது.  

பதப்படுத்தப்பட்ட முதல் தொகுதி இலத்திரனியல், மின்னுபகரண கழிவுகளை Ousei Kankyo க்கு ஏற்றுமதி செய்யும் நிகழ்வு வைபவ ரீதியாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, மத்திய சூழல் அதிகாரசபை தவிசாளர் சிறிபால அமரசிங்க, மத்திய சூழல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பி.பி. ஹேமந்த ஜயசிங்க, தபால் மாஅதிபர் ரஞ்சித் ஆரியரட்ன, முதலீட்டு சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் (வலயங்கள்) எம்.கே.டி. லோரன்ஸ், மத்திய சூழல் அதிகாரசபையின் இரசாயனங்கள் மற்றும் அபாயகரமான கழிவு முகாமைத்துவ அலகின் பணிப்பாளர் அஜித் வீரசுந்தர மற்றும் INSEE சீமெந்தின் தவிசாளர் நந்தன ஏக்கநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில் INSEE Ecocycle இன் பணிப்பாளர் சஞ்ஜீவ சூளகுமார கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் இலத்திரனியல் மற்றும் மின்சாதன கழிவுகளால் எழக்கூடிய பாரதூரமான பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கும் வகையில், மேல் மற்றும் வட மேல் மாகாண சபைகளினால் திரட்டப்படும் கழிவுகளுக்கு எமது பங்களிப்பை வழங்கியுள்ளோம். ஏனைய மாகாணங்களிலிருந்தும் இலத்திரனியல் மற்றும் மின்சாதன கழிவுகளை திரட்டுவதற்கு உதவிகளை வழங்க INSEE Ecocycle திட்டமிட்டுள்ளது.

தேசிய மட்டத்தில் கழிவு முகாமைத்துவம் மற்றும் கழிவகற்றல் தேவைகளை நிவர்த்தி செய்வதில் INSEE தொடர்ச்சியாக பங்களிப்பு வழங்கி வருவதுடன், இதில் பழுதடைந்த பால் மா, பறிமுதல் செய்யப்பட்ட கொக்கேன் போன்றனவும் அடங்குகின்றன. e-கழிவகற்றும் சேவைகளிலும் நிறுவனம் தன்னை ஈடுபடுத்தியுள்ளதுடன், அதனூடாக சூழலுக்கு e-கழிவுகள் சுமையாக மாறுவதை தவிர்க்க பங்களிப்பு வழங்குகின்றது.” என்றார்.

சுமார் இரண்டு தசாப்த காலமாக, INSEE Ecocycle இனால் அதன் சுழற்சி முறை பொருளாதார அடிப்படையிலான தீர்வான சீமெந்து சூளை இணைப்பதப்படுத்தலினூடாக நிலைபேறான கழிவு முகாமைத்துவ செயற்பாடுகள் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றன. 

2003 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட INSEE Ecocycle, 297mt டயர் கழிவு இணைப் பதப்படுத்தலினூடாக, இலங்கையில் பொறுப்பு வாய்ந்த கழிவு முகாமைத்துவ தீர்வுகளை அறிமுகம் செய்திருந்தது. கழிவை ஏற்படுத்துபவர் கட்டணம் செலுத்துவது எனும் கொள்கையை உள்நாட்டு நிறுவனங்கள் மத்தியில் படிப்படியாக அறிமுகம் செய்து வரும் Ecocycle, தனது இணைப் பதப்படுத்தல் ஆற்றல்களை விரிவாக்கம் செய்து, ஆபத்தான மற்றும் ஆபத்தில்லாத தொழிற்துறைசார் கழிவுகளை அகற்றும் வகையில் தனது இணை பதப்படுத்தல் நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்திருந்தது.

நிலைபேறான கழிவு முகாமைத்துவத்துக்கான கேள்வி துரிதமாக அதிகரித்ததன் காரணமாக Ecocycle துரிதமாக விரிவாக்கப்பட்டிருந்தது. 3 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான மூலோபாய முதலீட்டைப் பயன்படுத்தி, INSEE Ecocycle தனது வருடாந்த இணை பதப்படுத்தல் திறனை 100,000 மெட்ரிக் டொன்களால் அதிகரித்திருந்ததுடன், 1,000,000 மெட்ரிக் டொன்கள் எனும் மொத்த இணை பதப்படுத்தப்பட்ட அளவை இலக்காகக் கொண்டுள்ளது.

மேலும், 2020 ஆம் ஆண்டில் Ecocycle இனால் சகல வசதிகளும் படைத்த Resource Recovery Centre அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இதில் நவீன வசதிகள் காணப்படுவதுடன், பசுமையான சுழற்சி பொருளாதாரத்தை நோக்கிய தீர்வுகளை வழங்கி, கழிவு நீக்கப்பட்டு வளங்கள் வினைத்திறனானதும் நிலைபேறானதுமான வழியில் பயன்படுத்தப்படுகின்றமையால் INSEE Ecocycle க்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல் கல்லாக அமைந்துள்ளது. 

இலங்கையில் காணப்படும் தொழிற்துறைகளுக்கு முன்னணி கழிவு முகாமைத்துவ தீர்வுகள் வழங்குநராக Ecocycle திகழ்கின்றது. தற்போது INSEE Ecocycle இனால் 1000 க்கும் அதிகமான நிறுவனங்களுக்கு தொழிற்துறைசார் கழிவுகளை நிர்வகித்துக் கொள்ள தீர்வுகள் வழங்கப்படுகின்றன.

INSEE Ecocycle இன் முன் பதப்படுத்தல் மற்றும் இணை பதப்படுத்தல் வசதிகளினூடாக, சகல ஒழுங்குபடுத்தல் தொழில்நுட்ப நியமங்களும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், கழிவு முகாமைத்துவத்துக்காக உலகளாவிய ரீதியில் பின்பற்றப்படுகின்றது. காணிகளை நிரப்புவதற்கு பதிலாக அல்லது எரியூட்டுவதற்கு பதிலாக இது ஒரு சிறந்த தெரிவாக கருதப்படுவதுடன், சூழலுக்கு எவ்விதமான வெளியீடுகளுமற்ற பரிபூரண தீர்வாக அமைந்துள்ளது. இந்த தீர்வுகளை வழங்குவதற்கு அவசியமான அனைத்து அனுமதிகளையும் (சூழல் பாதுகாப்பு அனுமதி மற்றும் திட்டமிடப்பட்ட கழிவு முகாமைத்துவ அனுமதி) தரச் சான்றிதழ்களையும் (ISO 9001, ISO 14001, ISO 17025 மற்றும் ISO 450001 போன்றன) INSEE Ecocycle பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .