2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மின் வணிகத்தின் அடிப்படைகள்

அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 ஜூலை 06 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில வருடங்களுக்குள், அதீத முக்கியத்துவம் வாய்ந்த துறையாக மின் வணிகம் வளர்ச்சியடைந்து வருகிறது.  

குறிப்பாக, கொரோ​னா வைரஸ் பரவுகை காலப்பகுதி, மின் வணிக வாய்ப்புகளுக்கு, எப்போதுமில்லாத சந்தை வாய்ப்புகளைத் திறந்து விட்டதுடன், ஏராளமான புதிய வாடிக்கையாளர்களையும் மின் வணிகத்துக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தது.  

இதுவரை காலமும், மின்வணிகத்தின் மீது சந்தேகக் கண்ணோடிருந்தவர்கள் கூட, தவிர்க்க முடியாமல் மின்வணிகத்தின் செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டு, தற்போது அதன் ஓர் அங்கமாக மாறிப்போயிருக்கிறார்கள்.  

ஆடம்பரப் பொருள்களிலிருந்து, அத்தியாவசிய பொருள்கள் வரை அனைத்துமே மின்வணிகத்தில் கிடைக்கக் கூடியதாகி விட்டன. இந்தச் சூழ்நிலையும் மின் வணிகத்துக்கு ஏதுவாக அமைந்திருக்கிறது.  

வாடிக்கையாளர்களின் நேரமின்மை என்கிற ஒரு கருவை மூலதனமாகக் கொண்டு இயங்கும் இவ்வகை மின் வணிகங்கள், தனித்து மனிதர்களின் தேவைகளுக்கான பொருள்களை மாத்திரம் வழங்குவதில்லை. அவர்களது தேவைகளையும் விருப்பங்களையும் உருவாக்கக்கூடிய பொருள்கள், சேவைகளையும் வழங்குவதிலும் வெற்றி காண்பவையாக இருக்கின்றன.   

இதனால்தான், கொரோனா வைரஸ் பரவுகைக் காலத்தில் மிகப்பெருமளவிலான புதிய வாடிக்கையாளர்களை, மின்வணிகத்தால் தன் பக்கம் ஈர்க்க முடிந்திருக்கிறது   
இன்றைய நிலையில், இலத்திரனியல் வணிகச் சந்தையானது தன்னகத்தே எவ்விதமான தடைகளையும் கொண்டிராத முற்றிலும் ஒரு திறந்த சந்தையாகவே (Open Market) இருக்கிறது. இந்தச் சந்தையில் வாடிக்கையாளர்களைத் தம்வசபடுத்திக்கொள்ளும் சந்தைப்படுத்தல் திறன் கொண்ட எவருமே இங்கு ராஜாதான்.   

இவ்வாறு தொழிற்படும் மின் வணிகத்தில், ஒரு தனிநபராகவும் நிறுவனமாகவும் வெற்றிக்கொள்வதற்கு, அடிப்படையாக உள்ள விதிகள் தொடர்பிலும் அறிந்திருக்க வேண்டியது அவசியமல்லவா?   

கொள்வனவாளர்கள் சந்தையை உருவாக்குபவர்கள் அல்ல  

மின் வணிகத்தைப் பொறுத்தவரையில், கொள்வனவாளர்கள் சந்தையை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. சந்தை வாய்ப்பைக் கொண்டிராத பொருள்களையும் சந்தை வாய்ப்பைக் கொண்ட பொருள்களை மிக எளிமையாகக் கொள்வனவாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலையையே, மின் வணிகச் சந்தை செய்கிறது.  

பாரம்பரிய வணிக முறையில், கொள்வனவாளர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது விநியோகச் சங்கிலியாகும் (supply chain). அதாவது, உற்பத்தியாளரிடமிருந்து பொருள்களை, வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்க்கும் வரையில், உற்பத்திப் பொருள்கள் மீது சேர்க்கப்படும் மேலதிக செலவுகள், உற்பத்தி பொருள்களினதும் சேவைகளினதும் விலைகளை அதிகபடுத்துவதாகும்.   

ஆனால், இணையச் சந்தையில் உற்பத்தியாளர் கூட, விற்பனையாளராக இருக்கலாம். வாடிக்கையாளரை நேரடியாகச் சந்தித்துக் கொள்ளக்கூடிய மின்சந்தையில், உற்பத்தியாளரே விற்பனையாளராக இருக்கலாம். இதன் விளைவாக, செலவினங்கள் குறைக்கப்பட்டு, சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. இதுவே, கொள்வனவாளர்களையும் உருவாக்கும்.  

 எனவே, மின் வணிகத்தில் தனியே கொள்வனவாளர்கள் மாத்திரமே சந்தையை உருவாக்குபவர்களாக இருப்பதில்லை. மாறாக, முதலீட்டுக்கு வருமான மதிப்பீட்டைக் கொண்ட எந்தவொரு பொருள்களுக்கும் சேவைகளுக்கும் கூட, வணிக வாய்ப்பை உருவாக்குபவையாக அமையும்.  

மின் வணிகத்தின் செயற்பாடுகளைக் கருத்தில் கொள்ளுதல்  

மின் வணிகம் என்பது, உங்களது இணையத் தளத்துக்கான பார்வையாளர்களை அதிகபடுத்துவதோ, அது சார்ந்த விளம்பரங்கள் மூலம் இணையத்தின் பார்வையிடலை (Webssite Traffic) அதிகப்படுத்தி, அதன் நிலையை உயர்த்துவதோ அல்ல.   

மாறாக, உங்கள் இணையத் தளத்தில் பார்வையாளர்கள், வாடிக்கையாளர்கள் செலவிடும் நேரத்துக்கேற்ப, அவர்கள் வர்த்தகப் பரிமாற்றத்தில் ஈடுபட வைப்பதும், அதன் தொடர்ச்சியாக அவர்களை மீளவும் இணையத்தளத்துக்கு வருகைதர வைத்தலும் அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளுவதுமே ஆகும்.  

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பாரம்பரிய வணிகமுறையிலும் பார்க்க, இணைய வர்த்தகத்தில் உள்ள நன்மையே, நீங்கள் விளம்பரம் என்கிற பெயரில் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்குமான பெறுபேற்றை அறிந்துக்கொள்ள முடிவதாகும்.   

எனவே, மின் வணிகத்தில் பார்வையாளர் அதிகரிப்புக்கு நீங்கள் செலவு செய்வதைப் பார்க்கிலும், வாடிக்கையாளர்களை எப்படி உருவாக்கிகொள்ள முடியும் என்பதுடன், வாடிக்கையாளர்களை எப்படித் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதன் அடிப்படையில் செயற்படுவது அவசியமாகும். இதுவே, கட்டற்ற திறந்த சந்தையில், இலாபகரமான வணிக முயற்சியாளராக உங்களை நிலைநிறுத்திக்கொள்ள உதவும்.  

வாடிக்கையாளர் உறவே முக்கியமானது  

எத்தகைய வணிகமுறையாக இருந்தாலும் சரி, வாடிக்கையாளர்களுடன் மிகச்சிறந்த உறவைப் பராமரித்தல் என்பது முக்கியமானது. ஆனால், மின் வணிகத்தில் இது மேலும் ஒருபடி முக்கியமானதாக இருக்கிறது. குறிப்பாக, மின் வணிகத்தில் பெரும்பாலும் விற்பனையாளர்களும் கொள்வனவாளர்களும் சந்தித்துக்கொள்ளுவதே இல்லை. எனவே, ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளாமலே இடம்பெறும் வர்த்தகத்தில், ஒருவரின் உணர்வுகளையும் கருத்துகளையும் புரிந்துக்கொண்டு, வர்த்தக உறவைப் பலப்படுத்துவது என்பது சாதாரண காரியமல்ல.   

பெரும்பாலான மின் வணிகங்கள் அடிவாங்கும் இடமாகவும் இதுதான் இருக்கிறது. காரணம், சேவைக்கு முந்தியதும் சேவைக்குப் பிந்திய வாடிக்கையாளர் உறவைப் பலப்படுத்தத் தவறுவதன் விளைவாகவே, பெரும்பாலான மின் வணிகங்கள் போட்டித்தன்மைமிக்க சந்தையிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.   

சந்தையில் எவ்வளவு பெரிய நிறுவனமாக வளர்ந்தாலும், வாடிக்கையாளர் உறவு என்பதை மிக உயர்ந்தளவில் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. இல்லையெனில், அதுவே உங்களது வணிகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் காரணியாக மாறிவிடும்.  

வெளிநாடுகளில் இணைய வர்த்தகம் தவிர்க்க முடியாததாக மாறியுள்ள நிலையில், வாடிக்கையாளர் உறவைத் திறமையாகக் கையாள மட்டும் ஆண்டொன்றுக்கு 36 பில்லியன் அமெரிக்க டொலர்களை இணைய நிறுவனங்கள் செலவு செய்வதாக Forbes இணையத்தளம் குறிப்பிடுகிறது. இது ஒன்றே, வாடிக்கையாளர் உறவு இந்நவீனமயப்படுத்தப்பட்ட வணிகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்கு உதாரணமாக உள்ளது.  

இணைய இடைத்தரகர்கள் தொடர்பில் அவதானமாக இருத்தல்  

இணையப்பரப்பில் வர்த்தகத்தின் வெற்றியே, இடைத்தரகர்கள் (Cybermediary) அல்லது விநியோக சங்கிலியின் பயன்பாடு குறைவாக இருப்பதே ஆகும். எனவே, வணிக செயற்பாடுகளை இலகுவாக்குகிறோம் என்பதன் பெயரில், மீண்டும் பாரம்பரிய வணிகம்போல, இடைத்தரகர்களை அதிகப்படுத்திக் கொள்ளக்கூடாது. மின்வணிகத்தில் இடைத்தரகர்களின் செயல்பாடுகளும் பொறிமுறைகளும் சற்றே வித்தியாசமானதாக இருக்கும்.   

உதாரணமாக, இணையத்தில் கொள்வனவாளரும் விற்பனையாளரும் வர்த்தகத்தைத் தனித்து முடித்துக்கொள்ள முடியாது. வாடிக்கையாளர் குறித்த விற்பனையாளரிடம் பொருளை வாங்க விரும்பின், அதற்கான பணத்தைச் செலுத்த வேண்டும். அதை நேரடிப் பணமாகச் செலுத்த முடியாது.  

எனவே, அதற்காக இணையப் பணத்தை (அட்டைகள் அல்லது பணவைப்புக் கணக்குகள்) பயன்படுத்த முடியும். இதன்போது, தவிர்க்க முடியாத வகையில் இணையப் பணம் என்கிற போர்வையில், இடைத்தரகர்கள் உருவாகுகிறார்கள். அதுபோல, வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்த எடுப்பில் செலுத்துவதில்லை.  

அதைச் செலுத்துவதற்கு, விற்பனையாளர்கள் பாதுகாப்பான கொடுப்பனவு முறையைக் கொண்டிருக்க வேண்டும். இதையும் வேறு தரப்பினரிடமிருந்து பெற்று, வழங்குவார்களாயின், அவ்வாறும் இடைத் தரகர்கள் உருவாகுவார்கள்.   

இவ்வாறாக, பாரம்பரிய வணிகத்திலிருந்து வேறுபட்ட முறையில் இடைத்தரகர்கள் மின்வணிகத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்கள். இவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும்.  

 இவர்களால் மோசடிகள் இடம்பெறக்கூடும் என்பதுமட்டுமல்லாது,  இவர்களுக்குச் செலுத்தும் அனைத்துக் கட்டணங்களுமே பொருள்கள், சேவைகளின் பெறுதியுடன் சேர்க்கப்பட்டு, இறுதியில் வாடிக்கையாளர்களையே வந்தடையும்.  

மேலே கூறிய அனைத்துமே, மின் வணிகத்தில் இன்றியமையாத வகையில் கவனிக்க வேண்டிய அல்லது கவனிக்கப்பட வேண்டிய விதிகளாகும். கால மாற்றத்துக்கு ஏற்ப, வணிகத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தவிர்க்கமுடியாமல் ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழலில், அத்தகைய மாற்றங்களில் நம்மைத் தொலைத்துக்கொள்ளாமல் எப்படி நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருப்பதும், நடைமுறைப்படுத்துவதும் அவசியமாகிறது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .