2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

10 பேரை வேட்டையாடிய சிறுத்தை கொல்லப்பட்டது

Editorial   / 2018 ஜூன் 21 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - அம்பாள்குளம் கிராமத்தில், இன்று (21) காலை 7 மணி முதல் பிற்பகல் 12.30 மணிவரையான காலப்பகுதியில், வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் உட்பட பத்து பேரைத் தாக்கிக் காயப்படுத்திய சிறுத்தையொன்று, பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயத்துக்குப் பின்புறமாகவுள்ள மக்கள் குடியிருப்புப் பகுதியில், இன்று (21) காலை 7 மணியளவில், ஆட்களற்ற காணிக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, மாடு கட்டுவதற்குச் சென்ற ஒருவரையும் மற்றொருவரையும் தாக்கியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிக்கு அறிக்கப்பட்டதை அடுத்து, வெறுங்கையுடன் ஸ்தலத்துக்கு வந்த அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்குமிடையே, கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இதன்போது, யாழ்ப்பாணத்தில் இருந்து வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர் வருவாரென அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து. பிற்பகல் 11 மணியளவில், வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர்கள் உட்பட சில அதிகாரிகள் வருகைதந்தனர். இதற்கிடையில், குறித்த சிறுத்தை, அப்பகுதியைச் சேர்ந்தவர்களில் 8 பேரைத் தாக்கியிருந்தது. பின்னர், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரையும் சிறுத்தை தாக்கியது.

இதையடுத்து, உரிய நேரத்துக்கு திணைக்கள அதிகாரிகள் வந்து நடவடிக்கை எடுக்கவில்லையென, அங்கிருந்த பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இதனால், அவ்விடத்திலிருந்த அதிகாரிகள், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.

பின்னர், பொதுமக்கள் அனைவரும், சிறுத்தை மறைந்திருந்த பற்றைக்குள், பொல்லுகளுடன் சென்று சுற்றிவளைத்து, சிறுத்தையைப் பொல்லால் தாக்கிக் கொன்றனர். சம்பவ இடத்தில், கிளிநொச்சி பொலிஸார் மற்றும் கிராம அலுவலர் உட்பட பலர் இருந்தனர்.

சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள், கிளிநொச்சி மாவட்ட வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .