2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

‘கடிதத்தை ஒழித்த அதிகாரிகள் குறித்து கவனமெடுக்கப்படும்’

Editorial   / 2018 ஜூன் 11 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

மீள்குடியேற்ற அமைச்சால் அனுப்பப்பட்ட கடிதத்தை ஒழித்து வைத்து, மாவட்டச் செயலாளருக்குகூட காட்டாமல் வைத்திருந்ததால், தமிழர்களுக்கு வீடு கிடைக்காமல் செய்த அதிகாரிகள் மீது கவனமெடுக்கப்படுமென, வட மாகாணசபை உறுப்பினர்
ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா  பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில், இன்று (11) நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, வடமாகாணத்தில் இருந்து  1990ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களுக்கான வீட்டுத்திட்ட செயலணி ஊடாக ஹிச்சிராபுரம், அரபாநகர், மதினாநகர் ஆகிய பிரதேசங்களுக்கு 112 மில்லியன் ரூபாய் செலவில் 140 வீடுகள் வழங்கப்படவுள்ளமை குறித்து, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான ந.சிவசக்தி ஆனந்தன் வினவினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதேச செயலாளர்,

இக்கிராமங்களின் விவரம் தமக்கு அனுப்பப்பட்டதாகவும் தாம் இக் கிராமங்களை தெரிவு செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.

அத்ததுடன், குறித்த கிராமங்களில் பயனாளிகளை தாமே தெரிவு செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த வட மாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம், 

“வட மாகாணத்தில், 1990 டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான விசேட செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. விசேடமாக அந்த செயலணி அமைச்சரவை பத்திரத்திலே வடக்கு மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் என்றே பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

“இச்செயலணி மூலமாக, கடந்த வருடம் சிங்க மக்களுக்கு 100 வீடுகளும் முஸ்லிம்களுக்கு 100 வீடுகளுமாக மொத்தமாக 200 வீடுகள் வழங்கப்பட்டிருந்தன. 2018ஆம் ஆண்டு 342 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 50 வீடுகள் சிங்கள மக்களுக்கும் 292 வீடுகள் முஸ்லிம் மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

“கடந்த 15ஆம் திகதி மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை  சந்தித்து, 1990ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் சிங்கள, முஸ்லிம் மக்கள் மாத்திரம் இடம்பெயரவில்லை. பெருந்தொகையான தமிழ் மக்களும் இடம்பெயர்ந்துள்ளனர்.

“எனவே, சிங்கள மற்றும் முஸ்லிம்களுக்கான  மீள்குடியேற்றம் என்பதை நீக்கி வடக்கு மாகாணத்துக்கான இடம்பெயர்ந்த அனைத்து மக்களையும் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட வேண்டும் என என்னால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு, 15ஆம் திகதி அக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு தமிழர்களையும் இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளாக உள்வாங்குவது என்ற முடிவெடுக்கப்பட்டது.

“17ஆம் திகதி மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரால் வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்ட செயலாளருக்கும் முன்பு இச்செயலணியில் குறிப்பிடப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்கள் என்ற திட்டத்துக்குள் எல்லோரையும் உள்வாங்குமாறு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. இச்செயலணியின் ஊடாக, வீடு மாத்திரமன்றி உட்கட்டுமானம், வாழ்வாதாரம் என்பன உள்ளன.

“17ஆம் திகதி என குறிப்பிடப்பட்ட இக்கடிதம், 18​ஆம் திகதி வவுனியா கச்சேரிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இக்கடிதமானது, வவுனியா கச்சேரியில் இருந்து பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பப்படவில்லை. மேலும் மாவட்ட செயலாளருக்கும் இதை தெரியப்படுத்தப்படவில்லை. இக்கடிதத்தை இத்திட்டத்துக்குப் பொருத்தமான அதிகாரிகள் அப்படியே கச்சேரியிலேயே வைத்திருந்துள்ளனர்.

“1, 2ஆம் திகதிகளில், இது தொடர்பாக மாவட்ட செயலாளருடன் கதைக்கப்பட்டதன் பின்னர், வவுனியா பிரதேச செயலாளருக்கு 1ஆம் திகதியன்று இக்கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது. ஏனைய பிரதேச செயலாளருக்கு கிடைக்கப்பெறவில்லை.

“எனவே, மாவட்ட செயலகத்தால் ஏன் இக்கடிதம் அனுப்பி வைக்கப்படவில்லை என்பதை, 25ஆம் திகதி நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .