2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காணியைக் கையக்கபடுத்த முயற்சித்ததால் அம்பாள் நகரத்தில் பதற்றம்

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்,   

 

இராணுவத்தினரால் விடுக்கப்பட்ட காணிகளில் குடியேறியிருந்த குடும்பங்களை எவ்வித முன்னறிவித்தலும் இன்றி சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ​வௌியேற்ற முயற்சித்த சம்பவமொன்று, கிளிநொச்சி – சாந்தபுரம், அம்பாள் நகர் பகுதியில், இன்று (19) இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சிவில் பாதுகாப்பு உத்திரயோகத்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குறித்த பகுதியில், ஏற்கெனவே மத்திய வகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணிகளில், சுமார் 145  ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள், நீண்ட காலமாகப் பராமரப்பின்றிக் காணப்பட்டன. 

இந்நிலையில், 1983மஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில், பல்வேறு பகுதிகளிலும் இருந்து இடம்பெயர்ந்து வந்த குடும்பங்கள், இந்தக் காணிகளில் மீள்குடியேறின.

இதையடுத்து, 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது, அந்தப் பகுதியிலிருந்து மக்கள் வெளியேறிய நிலையில், குறித்த காணிகளை இராணுவம் கையப்படுத்தி, பின்னர் விடுவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, குறித்த பிரதேசத்தில் காணிகளின்றிக் காணப்படுகின்ற 45க்கும் மேற்பட்ட குடும்பங்கள், மேற்படி பராமரிப்பின்றிக் காணப்பட்ட மத்திய வகுப்புத் திட்டக் காணிகளில் கொட்டில்களை அமைத்து குடியேறியிருந்தனர்.

இந்நிலையில், நேற்று (19) காலை குறித்த காணிக்குள் சென்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் உயர் அதிகாரிகளும், பொதுமக்களின் கொட்டில்களைச் சேதப்படுத்தியதுடன், பொதுமக்கள் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

அத்துடன், இரண்டு அலைபேசிகளையும் மற்றும் வீட்டுப் பாவனைப்பொருட்களையும் கொண்டுச் சென்றுள்ளதாக, பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், பொதுமக்களுக்கும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், அப்பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கியுள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .