2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குடிநீருக்கு தட்டுப்பாடு: 25 குடும்பங்கள் பாதிப்பு

Editorial   / 2019 மார்ச் 21 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட எருவிட்டான் கிராம மக்கள் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக குடிநீர் வசதி இன்றி பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

குறித்த பிரச்சினை தொடர்பில் நானாட்டான் பிரதேச செயலாளர் மற்றும் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

குறித்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 25 குடும்பங்கள் வரை இவ்வாறு பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர்.

மேலும், எருவிட்டான் கிராமத்தில் உள்ள நீர்த்தாங்கி பழுதடைந்த நிலையில், காணப்படுவதோடு, நீர் குழாய்களும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. மேலும், குறித்த தாங்கிக்கான மின் மோட்டர் பழுதடைந்து பல மாதங்களாகின்றது.

இதனால் குடி நீரை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில், அக்கிராம மக்கள் பல்வேறு சௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

தற்போதைய காலநிலை மாற்றத்துக்கு அமைய கடும் வெப்ப நிலை நிலவுகின்றது. இதனால் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் போதிய நீர் வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது குறித்த கிராமத்தில் உள்ள சிறு பிள்ளைகளுக்கு தொற்று நோய் ஏற்படும் நிலை காணப்படுகின்றது. எனவே குறித்த பிரச்சினை தொடர்பாக நானாட்டான் பிரதேச செயலாளர் மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதியை வினவிய போது,

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் வட்டாரங்களினூடாக மூடி நீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஏற்கெனவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதற்கமைவாக, கடுமையாக நீர் பாதிப்புகுள்ளான கிராமங்கள் பலவற்றுக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் ஊடாக நீர் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த கிராமத்தின் நீர் பிரச்சினை தொடர்பாக கடந்த இரு நாள்களுக்கு முன் எழுத்து மூலம் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அக்கிராமத்தைச் சேர்ந்த எவரும் வந்து கதைக்கவில்லை.

குறித்த கிராமத்துக்கு அவசர நிலையை கருத்தில் கொண்டு குடி நீரை வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .