2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘சிறுவர் இல்லங்களற்ற சமூகத்தை உருவாக்குவோம்’

Editorial   / 2017 ஒக்டோபர் 05 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.என். நிபோஜன், நடராசா கிருஸ்ணகுமார்

“எப்பொழுது எங்கள் சமூகம் சிறுவர் இல்லங்களற்ற சமூகமாக மாற்றம் பெறுகிறதோ அப்போதுதான் எங்கள் சிறுவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டு ஆரோக்கியமான நல்ல சிறுவர்களுக்கான சூழலையும் ஏற்படுத்த முடியும்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எங்களுடை சமூகக் கட்டமைப்பு, எங்கள் சிறுவர்கள் மீது பிரயோகிக்கப்படுகின்ற அநீதிகளை வெளியில் கொண்டு செல்லத் தடையாக இருக்கிறது. இதனால் பெரும்பாலான சிறுவர் துஷ்பிரயோகங்கள் வெளியில் தெரியாமலே மறைக்கப்படுகின்றன. இந்நிலைமைகள் கூட சிறார்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கிறது.

அண்மையில், வித்தியாவின் கொலை வழக்கில் நீதி கிடைத்திருக்கிறது. ஆனால் பல விடயங்களுக்கு நீதி இல்லை. வித்தியா தொடர்பில் சமூகத்துக்கு இருந்து விழிப்புணர்வே நீதி கிடைக்க காரணமாக இருந்திருக்கிறது. இவ்வாறே ஒவ்வொரு விடயத்திலும் சமூகத்துக்கு விழிப்புணர்வு அவசியம் அப்போதே சிறுவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் பல சிறுவர் இல்லங்கள் உருவாகின. அதனை தடுக்க முடியாதிருந்தது. நான் சிறுவர் இல்லங்களுக்கு எதிரானவன். சிறுவர்கள், சிறுவர் இல்லங்களில் வளர்க்கப்படக் கூடாது. இதனையே சிறுவர் உளவியலாளர்களும் யுனிசெப் போன்ற நிறுவனங்களும் வலியுத்துகின்றன.  சிறுவர்களை பராமரிக்கும் பொறுப்பை எங்கள் சமூகம் ஏற்க வேண்டும். ஆனால், எங்கள் மண்ணில் புதிது புதிதாக சிறுவர் இல்லங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது ஆரோக்கியமான சூழலில்லை. கிளிநொச்சியில், கல்விபுலத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஒரு சிலர், வறுமையில் வாழும் பெற்றோர்களிடம் சென்று, அவர்களின் பிள்ளைகளை சிறுவர் இல்லங்களுக்கு அனுப்புமாறு பிரசாரம் செய்து வருகின்றனர். பெற்றோர்களின் அரவணைப்பிலும் அன்பிலும் வளர்க்கப்பட வேண்டிய சிறுவர்களை ஆசை காட்டி சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கும் சம்பவங்களை நாம் இங்கு காண்கின்றோம். இது கவலைக்குரிய விடயம். சிறுவர் இல்லங்கள் குறைந்து கொண்டு சென்று ஒரு கட்டத்தில் சிறுவர் இல்லங்கள் அற்ற சமூகமாக நாம் மாறவேண்டும் அப்போதுதான் சிறுவர்கள் சரியாகவும் பாதுகாப்பாகவும் வளர்க்கப்பட்டுள்ளார் என்று அர்த்தப்படும்.

தொழில் துறைகளை ஆரம்பித்து, மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி, அவர்களின் வறுமையை நீக்க, அதன் மூலம் நிறைவானதொரு சமூகத்தை உருவாக்கி, சிறார்களுக்கு பாதுகாப்பான நிலைமையை ஏற்படுத்துவதனை விடுத்து சிறுவர் இல்லங்களை உருவாக்குவதில் அக்கறை செலுத்துகின்றனர். இதற்கு அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களும் நிர்வாக அதிகாரிகளும் துணை போகின்றனர். இது வேதனையான விடயம். எனவே, சிறுவர் இல்லங்கள் அற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் சிறுவர்கள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் வீட்டுச் சூழலில் வளர்க்கப்படவேண்டும் அதுவே அவர்களை எதிர்காலத்தில் நல்ல  பிரஜைகளாக  மாற்றும்” எனக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .