2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மடு, பெரிய பண்டிவிரிச்சான் மக்கள் கண்டனம்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் கிராம மக்கள், இன்று (01) காலை கண்டன ஊர்வலம் மேற்கொண்டதோடு, மாவட்டச் செயலாளருக்கு மகஜர் கையளிக்கும் வகையில், மடு உதவி பிரதேசச் செயலாளரிடம் மகஜர் கையளித்துள்ளனர்.

மடு பிரதேச செயலகத்துக்கு முன்பாக கடந்த மாதம் 25ஆம் திகதி குழுவொன்றால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்துக்கு எதிராக மேற்படி ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது. 

சுமார் 30 வருடமாக மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள 'கோவில் மோட்டை' பகுதியில் 27 குடும்பங்கள் விவசாய செய்கையை மேற்கொண்டு வந்த நிலையில், அம்மக்களின் பராமரிப்பில் இருந்த 50 ஏக்கருக்கும் மேற்பட்ட காணியை, அமைப்பொன்றுக்கு வழங்குவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்து, கடந்த மாதம் 25ஆம் திகதி குழுவொன்றால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு, பின்னர் அப்போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், குறித்த குழுவினரின் செயற்பாட்டை கண்டித்து, பெரிய பண்டி விரிச்சான் கிராம மக்கள், இன்று காலை கண்டன ஊர்வலத்தை முன்னெடுத்து, மடு பிரதேசச் செயலகத்தைச் சென்றடைந்தனர்.

பின்னர் தமது பிரச்சினைகளை மடு உதவி பிரதேசச் செயலாளரிடம் தெரியப்படுத்தி, மாவட்டச் செயலாளருக்கு கையளிக்கும் வகையில் மகஜரை கையளித்தனர்.

அம்மகஜரில், “மடு பிரதேச செயலகத்துக்கு முன்பாக கடந்த மாதம் 25 ஆம் திகதி சிறு குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம்,  பெரிய பண்டிவிரிச்சான் கிராம மக்கள் மத்தியில் குழப்பங்களையும் பிரிவினைகளையும் ஏற்படுத்தியுள்ளன. 

“இக்காணியை மடுப்பரிபாலகருக்கு வழங்க வேண்டும் எனக் கேட்டு நிற்கின்றோம். எதிர்வரும் காலங்களில் தனிப்பட்ட குழுவினருக்கு அக்காணி பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் எமது கிராம மக்கள் மத்தியில் பாரிய குழப்பங்களும், பிரிவினைகளும் ஏற்படும்.

“எனவே, எமது கிராமத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சிறு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை எமது கிராம மக்கள் சார்பாகக் கண்டிக்கின்றோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X