2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’மன்னாரில் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் நிறைவு’

Editorial   / 2020 ஜூலை 28 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் தற்போது நிறைவடைந்துள்ளனவெனத் தெரிவித்த மன்னார் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர்  ஜே.ஜெனிற்றன், மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் 76 வாக்களிப்பு நிலையங்களிலும் 15 வாக்கு எண்ணும் நிலையங்களிலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகள் நடைபெறவிருப்பதாகவும் கூறினார்.

அந்த வகையில், இந்த வருடம் வாக்கு எண்ணும்  நிலையமாக புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில், இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், தேர்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகளும் அதே நேரத்தில் அனைத்து விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன என்றார்.

அதே நேரத்தில், மன்னாரை பொறுத்தவரையில் 88 ஆயிரத்த 842 வாக்காளர்களும் இதிலே 5 ஆயிரத்து 807 வாக்காளர்கள் புத்தளம் மாவட்டத்திலே தங்களுடைய வாக்குகளைப் பதிவுசெய்ய இருக்கின்றார்களெனத் தெரிவித்த அவர்,  அவர்களுக்கான வசதிகள் புத்தளம் மாவட்டத்திலே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் 405 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலிலே 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட இருக்கின்றனரெனத் தெரிவித்த அவர்,  மன்னார் மாவட்டதைப் பொறுத்த வரையில் இதுவரை 45 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன எனத் தெரிவித்த அவர், இந்த 45 முறைபாடுகளின் அடிப்படையிலே இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரெனவும் கூறினார்.

அதே போல் 6 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும், அவர் கூறினார்.

“இதில் கூடுதலான முறைப்பாடுகள் சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் வேட்பாளர்கள் இல்லாத வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுதல் போன்ற செயற்படுகளில் பலர் கைது செய்யப்பட்டதுடன், வாகனங்களும் கைப்பற்றப்பட்டன” எனவும், கூறினார்.

மேலும், வன்முறைகள் எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்பதுடன், மூன்று முறைப்படுகள் தொடர்பாக பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறினார்.

மேலும், மன்னார் மாவட்டத்துக்கான  4,196 தபால் மூல வாக்களிப்புகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவித்த அவர், அதே நேரத்தில், மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்கள் இராணுவ முகாம்கள் பொலிஸார் மற்றும் சிவில் நிலையம் போன்றவற்றில் 11 ஆயிரத்து152 தபால் மூல வாக்களிப்புக்களெனவும் கூறினார்.

அதில் 200 தபால் மூல வாக்களிப்புக்கள் மாத்திரம் அடையாளமிடப்படாத நிலை காணப்படுவதாகவும் ஏனைய இடங்களில் தபால் மூல வாக்களிப்புக்கள் சுமூகமான முறையில் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும்  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .