2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரூ. 30,000ஐ செஞ்சிலுவைச் சங்கம் பெற்றுக்கொண்டது

Editorial   / 2018 ஜூன் 11 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்​, நடராசா கிருஸ்ணகுமார்

 

தாமரை கோபுரத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த கிளிநொச்சி மாணவன் கோணேஸ்வரன் நிதர்சனின் சடலத்தை, கிளிநொச்சிக்கு இலவசமாகக் கொண்டு வருவதாகத் தெரிவித்து, பின்னர் முப்பதாயிரம் ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளதாக, உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த எட்டாம் திகதி, கொழும்பு தாமரை கோபுரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவனின் சடலத்தை, கிளிநொச்சி - அக்கராயன் பிரதேசத்தில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு வருவதற்காக, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வாகனத்தை இலவசமாக ஏற்பாடு செய்து தருவதாக , பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர், சற்று தாமத்தித்து மாணவனின் குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்ட பிரதேச சபை உறுப்பினர், வாகனத்துக்கான எரிபொருள் செலவை மாத்திரம் வழங்குமாறு கோரியிருந்தார். இதற்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.

இதன் பின்னர், வாகனம் கொழும்பு சென்று மாணவனின் சடலத்தை ஏற்றிக்கொண்டு, அக்கராயன்குளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வந்து சேர்ந்தப் பின்னர், வாகன கூலியாக முப்பதாயிரம் ரூபாயை வழங்குமாறு கூறி, பணத்தைச் பெற்றுச் சென்றனர்.

வழமையாக கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு இவ்வாறான ஒரு தேவைக்கு வாகனத்தைப் பிடிப்பதாக இருந்தால், இருபதாயிரம் ரூபாய்க்குப் பிடித்திருக்க முடியும் என்றும் இதனை விட தங்களின் நிலைமையை கருத்தில் கொண்டு, பலர் மாணவனின் சடலத்தைக் கொண்டுவருவதற்கு உதவ தயாராக இருந்த நிலையில் இவர்கள் இப்படி நடந்து கொண்டது கவலையளிக்கிறது எனவும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி கிளையின் செயலாளர் சேதுபதியை தொடர்பு கொண்டு வினவிய போது,

“மாணவனின் சடலத்தை கிளிநொச்சிக்குக் கொண்டு வருவற்காக, பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் வாகனத்தை கோரியிருந்தார். அவரிடம் நான் தெளிவாகவே வாகன கூலி முப்பதாயிரம் ரூபாய் எனத் தெரிவித்திருந்தேன். அதனையே நாங்கள் பெற்றுக்கொண்டோம். எங்களுக்கும் மாணவனின் குடும்பத்தினருக்கும் இடையில் எவ்வித தொடர்பாடலும் கிடையாது” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .