2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுகின்றார்’

எம். றொசாந்த்   / 2019 மார்ச் 07 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா வடக்கு பிரதேச சபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை தவிசாளர் மீறி தன்னிச்சையாக செயற்படுவதனை வன்மையாக கண்டிப்பதாக சபை உறுப்பினர்கள் பத்து பேர் ஒன்றிணைந்து அறிக்கை ஒன்றினை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வவுனியா வடக்கு பிரதேச சபையினால் இன்று (07) அம்மாச்சி உணவகம் (வன்னி அறுசுவையகம்) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சென்ற மாதம் நடைபெற்ற மாதாந்த சபை அமர்வில் இன்றைய  நிகழ்வு தொடர்பில் சுமார் 30 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டு இறுதியில் பிரதம விருந்தினர்களாக மாவட்ட அரசாங்க அதிபரையும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளரையும் அழைப்பது என தீர்மானிக்கப்பட்டு சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இன்றைய நிகழ்விற்கு முன்னாள் ஜனாதிபதியை அழைப்பது என தவிசாளரால் எமக்கு தெரிவிக்கவில்லை.

நேற்று (06) எமக்கு அனுப்பிவைக்கப்பட்ட அழைப்பிதழில் ஊடாகவே அறிந்து கொண்டோம். அதனால் இன்றைய நிகழ்வை புறக்கணித்துள்ளோம்.

அத்தோடு இன்றைய தினம் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடந்த மாத சபை அமர்வு கூட்டறிக்கையில் முன்னால் ஜனாதிபதியை அழைப்பது எனவும் சபை நிதியிலிருந்து 30 ஆயிரம் ரூபாய் அதன் செலவீனங்களுக்காக ஒதுக்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பாக தகவல்கள் திரிவுபடுத்தப்பட்டு அறிக்கையிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் சபை அமர்வுகளின் ஆரம்பத்தில் அம்மாச்சி உணவகம் என்றே எமக்கு தவிசாளரால் அறிமுகப்படுத்தப்பட்டு பல மாதாந்த அறிக்கைகளிலும் எழுத்து மூலமாக எழுதப்பட்டும் இருக்கின்றது. இந்நிலையில் திடீரென அதன் பெயர்பலகை மாற்றம் பெற்றதனையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தொடர்ச்சியாக தவிசாளர் அவர்கள் முன்னால் வவுனியா மாவட்ட வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றார். ஆகவே அவரின் ஆலோசனையின் அடிப்படையிலேயே அம்மாச்சி உணவகம் பெயர் பலகை மாற்றப்பட்டுள்ளது என்பதனை தெரிவித்துக்கொள்வதோடு வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அத்தோடு வருகின்ற 14ஆம் திகதி நடைபெறவுள்ள சபை அமர்வில் இன்று (07) நடைபெற்ற நிகழ்வு தொடர்பில் சரியான பதிலை தவிசாளர் அவர்கள் எமக்கு வழங்கவேண்டும், அவ்வாறு தவறும் பட்சத்தில் சபை அமர்வை புறக்கணிக்கவும் தீர்மானித்துள்ளோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .