2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நட்டஈடுகள் வழங்கப்படும்’

Editorial   / 2019 ஜனவரி 05 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்எ.ன்.நிபோஜன்  

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நட்டஈடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென, விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள  அமைச்சர் எம். ஹரிஸ் தெரிவித்தார்.

அத்துடன், முப்பது வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்  வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களுக்கு உதவுவது அனைவரதும் கடமையாகுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சிக்கு இன்று விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் எம். ஹரிஸ் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது வெள்ள அனர்த்தம் காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயம், கால்நடைகள், நீர்ப்பாசனம், போன்ற துறைகளில் ஏற்பட்ட அழிவுகள், அதனால் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளால்  அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர்,  வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நட்டஈடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும், குறிப்பாக நெல் வயல்கள் முழுமையாக அழிந்திருந்தால் 40 ஆயிரம் ரூபாய் காப்புறுதி சபையால் வழங்கப்படுமெனவும்  அதற்கான மதிப்பீடுகள் சரியாக மேற்கொள்ளப்படல் வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு, கால்நடைகள் இறந்திருந்தாலும்  அதற்கான கொடுப்பனவும் வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அதிகம் பொறுப்பு சொல்ல வேண்டியது தங்களுடைய அமைச்செனத் தெரிவித்த அவர், எனவே பாதிக்கப்பட்ட குளங்களை புனரமைப்பது,  குறித்த கவனம் செலுத்தப்படுமெனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு இரண்டு வார காலத்துக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை கிடைப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்

மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து அமைச்சர் உள்ளடங்கிய குழுவினர், வெள்ளத்தால் அழிவடைந்த  நெல் வயல்களை பார்வையிடுவதற்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு, கிளிநொச்சி  பன்னங்கண்டி மற்றும் முரசுமோட்டை பிரதேசங்களுக்கும் சென்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X