2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அன்னத்துடன் ஓரினச் சேர்க்கை உறவில் இருந்த வாத்துக்கு நினைவுச் சின்னம்

Editorial   / 2018 பெப்ரவரி 20 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்பான வாழ்க்கைத்துணை மற்றும் அக்கறையுள்ள தந்தையாக வாழ்ந்து ஓரினசேர்க்கை சமூகத்தின் சின்னமாகத் திகழ்ந்த நியூசிலாந்தைச் சேர்ந்த வாத்துக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

40 வயதான தோமஸ் என்ற வாத்து, அண்மையில் இறந்து போனது. அதனுடைய வாழ்க்கை துணை அருகிலேயே அதன் உடலும் புதைக்கப்பட்டது. இது பற்றி, வெலிங்க்டன் பறவைகள் மறுவாழ்வு அறக்கட்டளையின் தலைவர் க்ரைக் ஷெப்பர்ட் கூறுகையில், “இந்த மறுவாழ்வு மையத்தில்தான் ​தோமஸ் தனது கடைசி காலத்தைக் கழித்தது. அது பெரும்பங்கு வாழ்க்கையை கழித்த இடத்திலேயே புதைக்கப்பட்டுள்ளது.

தோமஸின் ஆரம்ப காலத்தை பொறுத்த மட்டில், 1990ஆம் ஆண்டு கருப்பு அன்னப்பறவை ஒன்று, நியூசிலாந்தின் கபிடி கடற்கரையின் சிறிய நகரத்தில் உள்ள வைமனு நீர்பரப்பிற்கு பறந்து வந்தது. அதற்கு ஹென்ரிட்டா என பெயரிடப்பட்டது. பின்பு அதன் சிறகுகள் சேதமடைந்ததால், மற்ற அன்னப் பறவைகளுடன் பறக்க முடியாமல் போக, தனிமையில் வாடியது. அப்போதுதான் தோமஸ் வாத்து அங்கு வந்தது.

அவை இரண்டும் இணைபிரியா உறவுகளாக மாறின. ஹென்ரிட்டாவை தோமஸ் பாதுகாத்து வந்தது. 18 வருடங்கள் இந்த இரு பறவைகளுமே ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், ஒரு புதிய பெண் அன்னப் பறவை அங்கு வந்தது. பின்னர் தோமஸை விடுத்து, இந்த புதிய பெண் அன்னப் பறவையுடன் ஹென்ரிட்டா அதிகமாக தென்பட்டது.

இரண்டுமே பெண் பறவைகள் என்று நினைத்திருந்த பட்சத்தில், அந்த புதிய அன்னப் பறவை முட்டையிட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹென்ரிட்டா ஒரு ஆண் பறவை என அப்போதுதான் தெரிய வந்தது. முதிர்ச்சியடைந்த அன்னப் பறவைகளின் பாலினத்தை கண்டறிவது கடினமான ஒன்று என்பதாலேயே இந்த குழப்பம். தோமஸ் வாத்தும் ஹென்ரிட்டா அன்னமும் 18 ஆண்டுகள் ஒரு பால் சேர்க்கையாளர்களாக உறவில் இருந்துள்ளமை அப்போதுதான் எமக்கு தெரிய வந்தது” என்றார்.

பின்னர் தொடர்ந்த அவர், “பின்பு, ஹென்ரிட்டா என்ற அந்த பறவையின் பெயரை ஹென்ரி என மாற்றி அமைத்தனர். முட்டையிட்ட புதிய பெண் அன்னப் பறவைக்கு ஹென்ரிட்டா என்று பெயர் சூட்டப்பட்டது. தன்னுடன் 18 ஆண்டுகளாக இருந்த துணை தன்னை விட்டு சென்றது தோமசுக்கு சற்றும் பிடிக்கவில்லை. இதனால் மிகுந்த கோபமடைந்த தோமஸ், மற்ற அன்னப் பறவைகளைத் தாக்க ஆரம்பித்தது.

ஆனால் குஞ்சுகள் பொறிக்கப்பட்ட பிறகு, முழுமையாக மாறிய அது, தன்னுடைய சொந்த குழந்தைகளைப் போல அவற்றை பாதுகாத்தது" என்று தெரிவித்தார்.

மேலும், “ஹென்ரியும் ஹென்ரிட்டாவும் அடுத்த ஆறு ஆண்டுகாலத்தில் 68 அன்னப் பறவை குஞ்சுகளை பொறித்தன. அவர்களுடனே வாழ்ந்து வந்த தோமஸ் வாத்து, அக்குஞ்சுகளை வளர்க்க உதவியது. எப்படி பறக்க வேண்டும், எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அவற்றுக்கு கற்றுத் தந்தது” என்றும் மேற்படி பறவைகள் மறுவாழ்வு மையத்தின் பாதுகாவலர்கள் தெரிவிக்கின்றார்கள்.

அதேவேளை, இரு வேறு இனங்கள் சேர்ந்து இவ்வாறு குஞ்சுகளை வளர்ப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த வாத்து பற்றி மேலும் அறிகையில், 2009ஆம் ஆண்டு கருப்பு அன்னப்பறவையான ஹென்ரி உயிரிழக்க, ஹென்ரிட்டாவும் வேறு ஒரு பறவையோடு பறந்து போனதால், மீண்டும் தனிமைக்கு தள்ளப்பட்ட தோமஸ், அங்குள்ள பெண் வாத்து ஒன்றுடன் இணைந்து 10 குஞ்சுகளை பெற்றெடுத்ததாம்.

நாளடைவில் கண்பார்வைத் திறன் குறைந்து, முற்றிலும் பார்வையை இழந்த தோமஸ், 2013ஆம் ஆண்டு தான், வெலிங்க்டன் பறவைகள் மறுவாழ்வு அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்குதான் தன் கடைசி நாட்களை கழித்ததாம் தோமஸ் வாத்து.

பூச்சிகள் முதல் பாலூட்டிகள் வரை, விலங்குகளுக்கு இடையே ஓரினச்சேர்க்கை வாழ்க்கைமுறை என்பது பொதுவான ஒன்றே. ஆனால் ஒரு சில விலங்குகள் மட்டுமே, தன் வாழ்நாள் முழுவதும் ஓரினச் சேர்க்கை இணையுடன் வாழும்.

ஹென்ரி மற்றும் ஹென்ரிட்டாவுடன் சேர்ந்து அவற்றின் குஞ்சுகளை வளர்த்த தோமஸைப் பார்த்து பல சுற்றுலா வாசிகள் வியந்துள்ளனர். தோமஸ் உயிரிழந்த செய்தி அறிந்தபலர், அதற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். கனடா, நெதர்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களிடமிருந்தும், இரங்கல் தெரிவிக்கப்பட்டதாம்.

அந்த வகையில் ஹென்ரி அன்னப்பறவை புதைக்கப்பட்ட இடத்திற்கு பக்கத்திலேயே தோமசின் உடலும் புதைக்கப்பட்டு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .