2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தலை இல்லாமல் உயிர் வாழும் அதிசய கோழி

Editorial   / 2018 ஏப்ரல் 01 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்தின் ராட்சபுரி மாகாணத்தில், தலை வெட்டப்பட்ட கோழி ஒன்று, ஒரு வாரத்துக்கும் மேலாக உயிர் வாழ்ந்து வரும் அதிசய சம்பவம், உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தலைவெட்டப்பட்ட இந்த கோழி, உடலை அங்குமிங்கும் அசைத்து நடந்து திரிந்து, பார்ப்ப​வரை ஆச்சரியத்துக்குள்ளாக்குகின்றது. 

கடந்த வாரம் ‘தலை இல்லாத கோழி’ என்ற தலைப்பில் புகைப் படங்களும் வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின. பலரும் இதை நம்ப மறுத்தார்கள். ஆனால் இந்த சம்பவம் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது..

இது குறித்து இதன் பாதுகாவளரும், கால்நடை மருத்துவருமான சுபகதீ அருண் தோங் பேசுகையில், “கோழியின் தலை எப்படி வெட்டப்பட்டது என்று தெரியவில்லை. புத்த துறவிகள் கோயிலுக்கு அருகே இதனைப் பார்த்ததாகச் சொன்னார்கள். தலையே இல்லை என்றாலும் மரணத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து, வாழ நினைக்கும் இந்தக் கோழிக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்தேன். அதனால் கோழியை பத்திரமாகக் கவனித்துக் கொள்கிறேன். ஊசி மூலம் திரவ உணவை, தொண்டை வழியே செலுத்துகிறேன். கோழி தன் விருப்பம்போல் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் பாதுகாக்க தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

கேட்பவரை ஆச்சரியப்படுத்தும் இதுபோன்ற ஒரு சம்பவம் இதற்கு முன்னரும் கூட நிகழ்ந்துள்ளது. அதாவது, 1945ஆம் ஆண்டு மைக் என்ற தலை இல்லாத கோழி, 18 மாதங்கள் வரை உயிருடன் இருந்திருக்கிறது. திடீரென ஒருநாள் இந்தக் கோழியின் உரிமையாளர் லோயிட் ஓல்சென் யூட்டா பல்கலைக்கழகத்துக்கு கோழியைக் கொண்டுவந்தார். கோழிப் பண்ணை ஒன்றை நடத்தி வந்த அவர், தினமும் கோழிகளை வெட்டுவார். அப்படியொருநாள், சுமார் 50 கோழிகள் வரையிலும் வெட்டிக்கொண்டிருந்த அவர், தான் வெட்டிய கோழிகளில் ஒன்று, மட்டும் தலை வெட்டிய பிறகும் உயிருடன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். நடந்துகொண்டிருந்த கோழியை ஒரு பெட்டியில் வைத்துவிட்டு, அது சிறிது நேரத்தில் இறந்துவிடும் என்று நினைத்தார்.

ஆனால் அந்தக் கோழியோ, அப்போதும் உயிருடன் இருந்தது. வாழத் துடிக்கும் ஒரு கோழியின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு, ஊசி மூலம், தொண்டைப் பகுதியை தினமும் சுத்தம் செய்து, திரவ உணவை செலுத்தி வருவதாகக் கூறினார். கால்நடை ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். கோழியை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள். ஆராய்ச்சியின் முடிவில், கோழியின் தலை தனித்துவமானது என்றும், குறிப்பிட்ட கோணத்தில் தலையை வெட்டும்போது முகம், முன்னந்தலை பாதிக்கப்பட்டாலும் பின்னந்தலையில் மூளை இருக்கும் பகுதி பாதிப்புக்குள்ளாக வில்லையென்பதால், கோழி சுவாசிக்க, நடக்க, சாப்பிட முடிகிறது என்று அறிவித்தார்கள். தலை இல்லாமல் கோழி உயிருடன் இருப்பது உண்மைதான் என்ற சான்றிதழையும் வழங்கினார்கள். 

அதன் பிறகு லாயிட் ஓல்சன் தலை இல்லாத மைக்குடன் அமெரிக்கா முழுவதும் பயணம் செய்தார். புகழ் பெற்றார். இருப்பினும், திடீரென்று ஒருநாள் கோழியின் தொண்டையை சுத்தம் செய்ய முடியாமல் போனது. இதனால் தொண்டைப் பகுதியில் அடைப்பு ஏற்பட்டு, 18 மாதங்களுக்குப் பிறகு ‘மிராக்கிள் மைக்’ என்ற அந்த கோழி இறந்துபோனது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .