2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'பொய்யான வாக்குறுதி வழங்கும் அரசியல்வாதி நானில்லை': அமீர் அலி

Sudharshini   / 2016 ஜூலை 27 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வடிவேல் சக்திவேல்

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றும் அரசியல்வாதி நானில்லை. உங்களுக்காக ஏதாவது அபிவிருத்திகளை நான் செய்ய முயற்சிக்கின்ற போது, அதனை தடுக்கின்ற சக்திகள் அதிகமுண்டு. எனவே, அரசியலையும் தாண்டி மனிதநேயத்துடன் எல்லா இனத்தவருக்கும் சேவை செய்வதே எனது அபிலாஷையாகும். அது வெறுமனே வாக்குகளை முன்னிலைப்படுத்தும் நோக்காக இருக்காது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

வந்தாறுமூலை பிரதேச மக்களை செவ்வாய்கிழமை (26)  சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்த பின்னர், உரை நிகழ்த்திய போதேஅவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்..

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'மக்கள் மனங்களில் இந்த நல்லாட்சி பற்றிய பலத்த எதிர்பார்ப்பு இருக்கின்றது. நல்லாட்சியை கொண்டுவந்த பங்காளர்கள் என்ற வகையில் அந்த எதிர்பார்ப்பில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், எந்த விடயத்துக்கும் ஒரு கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனை நாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். கடந்த அரசாங்கம் பாரிய கடன்சுமையை இந்த அரசின் மீது சுமத்திவிட்டே சென்றுள்ளது. அதனை அடைக்கின்ற பொறுப்பு இந்த நல்லாட்சிக்கே உள்ளது. எனவே, சில விடயங்களில் தாமதம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத விடயமாகும்' என்றார்.

'தேர்தல் காலங்களில் உங்கள் முன்வந்து பொய்யான வாக்குறுதிகளை வழங்கிவிட்டு, அதன் பின்னர் அடுத்த தேர்தல் வரைக்கும் கண்டு கொள்ளாமல் இருக்கின்ற அரசியல் மரபு பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், நான் வித்தியாசமான அரசியல்வாதி. என்னால் செய்ய முடியாத எதனையும் நான் செய்து தருவேன் என்று பொய்யாக ஒத்துக்கொள்வதில்லை. செய்ய முடிந்தவற்றை செய்து கொடுக்காமல் விட்டதுமில்லை. அந்த வகையில் என்னால் முடிந்த அபிவிருத்திப் பணிகளை இந்த பிரதேசங்களில் எதிர்காலத்தில் நான் செய்து தருவேன்.

உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி கற்க வையுங்கள். அப்போதுதான் உங்கள் பிரச்சினைகளை தைரியமாக முன்வைக்க முடியும். உங்களது வறுமை உங்களது பிள்ளைகளின் கல்வியை பாதிக்காமல் இருக்கட்டும்' என கூறினார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .