2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கருணா குழுவினர் பிடித்துச் சென்ற மகனை மீட்க உதவுங்கள்: ஆணைக்குழுவிடம் தாய் கோரிக்கை

Super User   / 2011 மார்ச் 25 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

"கருணா குழுவினைச் சேர்ந்த 4 பேரால் கடந்த 29 செப்டம்பர் 2008 ஆம் ஆண்டு காலை 5.30 மணியளவில் எனது வீட்டிலிருந்து பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட எனது மகன் இதுவரை விடுவிக்கப்படவில்லை. எனது மகன் தொடர்பில் ஒருமுறை திருக்கோவிலிலுள்ள கருணாகுழு அலுவலகத்தின் பொறுப்பாளரான பாரதியிடம் நான் கேட்டேன். என்னுடைய மகனை அவர்கள் அழைத்து வந்ததை ஒப்புக் கொண்டார். தயவு செய்து எனது மகனை மீட்டுத் தருவதற்கு உதவுங்கள்" 

இவ்வாறு திருக்கோவில் விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த காசிப்பிள்ளை மரகதமணி என்பவர் இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் வேண்டுகோளொன்றினை முன்வைத்தார்.

தனது மகன் கடத்தப்பட்ட விடயம் தொடர்பாக ஆணைக்குழு முன்னிலையில் மேற்படி காசிப்பிள்ளை மரகதமணி மேலும் தெரிவிக்கையில்,

"எனது மகனைக் கடத்தியவர்களிடம் அவரை எங்கே அழைத்துக் கொண்டு போகிறீர்கள் எனக் கேட்டேன். எனது மகன் தொடர்பில் சில பிரச்சினைகள் உள்ளதாகவும் அவை தொடர்பில் விசாரணை செய்து விட்டு விடுவிப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.

எனது மகன் அழைத்துச் செல்லப்படுவதை நான் தடுத்தேன். அப்போது அவர்கள் என்னைத் தள்ளி விட்டு வானத்தை நோக்கித் துப்பாக்கியால் மூன்று தடவை சுட்டனர். பிறகு எனது மகனை முச்சக்கர வாகனமொன்றில் அழைத்துச் சென்றார்கள்.

எனது மகன் 1985 ஆம் ஆண்டு பிறந்தவர். இந்த சம்பவம் நடைபெற்றபோது அவருக்கு 23 வயது.

எனது மகனுடன் இன்னும் இரண்டு பேரையும் பிடித்துச் சென்றார்கள். அவர்களில் ஒருவர் எனது பக்கத்து வீட்டுப் பையன். அவர் தம்மைப் பிடித்துச் சென்றவர்கள் கருணா குழுவினர்தான் என அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து நான் திருக்கோவிலிலுள்ள கருணா குழுவினரின் அலுவலகத்துக்கு ஒவ்வொரு நாளும் சென்று எனது மகன் குறித்து விசாரித்து வந்தேன். அப்போது 'உங்கள் மகனிடம் இன்னும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. முடிந்தவுடன் அனுப்பி விடுவோம்' என்று அவர்கள் எனக்குப் பதிலளித்தார்கள்.

கருணா குழுவினரின் திருக்கோவில் அலுவலத்துக்கு பாரதிதான் பொறுப்பாக இருந்தார். அவரின் கீழ் இயங்கிய சீலன், ஜுட்டு போன்றோர்தான் எனது மகனைப் பிடித்துக் கொண்டு சென்றார்கள்.

ஒரு முறை பாரதியைச் சந்திக்க கருணா அலுவலகம் சென்றேன். அங்கு எனது மகனைப் பிடித்துச் சென்ற சீலனும் அங்கிருந்தார். நான் பாரதியிடம் சென்று 'எனது மகன் எங்கே, எனது மகனைப் பிடித்துக் கொண்டு வந்த சீலனும் இங்கேதானே இருக்கிறார் விசாரித்துச் சொல்லுங்கள்' எனக் கேட்டேன். அதற்கு பாரதி 'சீலனிடம் கேளுங்கள்' என்றார். நான் சீலனிடம் 'எனது மகன் எங்கே' எனக் கேட்டேன். 'உனது மகனைப் பிடித்துக் கொண்டு வரச் சொன்னார்கள், நான் பிடித்துக் கொடுத்து விட்டேன். மேலதிக தகவல்களை அண்ணனிடம் (பாரதியிடம்) கேள்' என்று சீலன் பதிலளித்தார்.

பிறகு எனது மகனை ஆமியிடம் (ராணுவத்தினரிடம்) ஒப்படைத்து விட்டதாக பாரதி என்னிடம் கூறினார். அப்போது நான் பாரதியிடம் 'எனது கணவரும் 1990 களில் இறந்து விட்டார். எனக்கு ஒரேயொரு மகன்தான். யாரும் எனக்கு உதவிக்கு இல்லை. எனது மகனை விட்டு விடுங்கள்' என்றேன்.

பாரதி இன்னும் உயிருடன்தான் இருக்கிறார். அவரை ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் என்று சொல்வார்கள். அவருடைய முழுப் பெயர் இனிய பாரதி!

எனது மகன் விடயமாக 2010 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம 02 ஆம் திகதி நல்லிணக்க ஆணைக்குழுவினருக்கு நான் கடிதமொன்றினையும் அனுப்பி வைத்தேன். ஆனால், அதற்கு இதுவரை ஒரு பதிலும் எனக்குக் கிடைக்கவில்லை. தயவு செய்து எனது மகனை மீட்டுத் தாருங்கள்" என்றார்.


You May Also Like

  Comments - 0

  • mam.fowz Saturday, 26 March 2011 01:57 PM

    கருணா யார் ? எகேஇலங்கை போலீஸ் ....என்ன சட்டம் இதுதான் ம /சிந்தனை .....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .