2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘அடிப்படைவாதத்தை ஈரான் நிராகரித்தது’

Gopikrishna Kanagalingam   / 2017 மே 21 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானின் ஜனாதிபதியாக மேலும் 4 ஆண்டுகளுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஹஸன் றௌஹானி, திறந்த ஈரானை வழங்குவதாகவும் மக்களுக்கான சுதந்திரங்களை வழங்கவுள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் வாக்கெடுப்பில், ஜனாதிபதி றௌஹானியும், கடும்போக்காளராகக் காணப்பட்ட இப்ராஹிம் றைஸி மற்றும் முஸ்தபா மிர் சலிம், முஸ்தபா ஹஷெமிதாபா போன்றவர்களும் போட்டியிட்டனர்.
நேற்று அறிவிக்கப்பட்ட முடிவுகளின், ஜனாதிபதி றெளஹானிக்கு, 57 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கப்பெற்றதோடு, அவரது போட்டியாளரான றைஸிக்கு, 38 சதவீதமான வாக்குகளே கிடைக்கப்பெற்றன.

வெற்றி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி றௌஹானி, “தேர்தலின் போது, எங்கள் தேசத்தின் செய்தி, தெளிவானது: வன்முறையையும் அடிப்படைவாதத்தையும் நிராகரித்து, உலகத்துடனான கலந்துரையாடலின் பாதையை, ஈரானிய தேசம் தேர்ந்தெடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “தேர்தல் தற்போது முடிந்துவிட்டது. இந்தத் தேசத்தின் ஜனாதிபதி நான். என்னையும் எனது கொள்கைகளையும் எதிர்ப்பவர்கள் உட்பட, ஒவ்வோர் ஈரானியனினதும் உதவி எனக்குத் தேவை” என்று குறிப்பிட்டதோடு, முன்னாள் ஜனாதிபதி மொஹமட் கட்டமிக்கும் நன்றி தெரிவித்தார். இதன்மூலம், முன்னாள் ஜனாதிபதி கட்டமியின் பெயரைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட நீதிமன்றத் தடையை, அவர் மீறினார் என்று கருதப்படுகிறது.

ஈரானின் ஜனாதிபதிப் பதவி, மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட ஒன்றாகவே காணப்படுகிறது. ஜனாதிபதிக்கு மேல், உயர்நிலைத் தலைவர் காணப்படுகிறார். ஆனால், றௌஹானியின் வெற்றி, அடுத்த உயர்நிலைத் தலைவராகவும், மிதவாதப் போக்குடைய ஒருவர் வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .