2024 மார்ச் 30, சனிக்கிழமை

காணிகள் பதிவுசெய்யப்படுவது குறித்து மக்கள் அச்சம்: ஜனாதிபதிக்கு ஆனந்த சங்கரி கடிதம்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 30 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களின் சொந்தக் காணிகள், நம்பிக்கைச் சொத்தாக அல்லது வேறு விதமாக பொறுப்பேற்றிருக்கும் காணிகள் அத்தனையையும் அரசு பதிவதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது எனவும் இத்திட்டத்தால் தாம் மேலும் பலவற்றை இழக்கலாம் என மக்கள் அஞ்சுகின்றனர் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மக்களின் சொந்தக் காணிகள், நம்பிக்கைச் சொத்தாக அல்லது வேறு விதமாக பொறுப்பேற்றிருக்கும் காணிகள் அத்தனையையும் அரசு பதிவதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் மக்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்பதனை மிக்க வருத்தத்துடன் தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.  

காணி அபிவிருத்தி அமைச்சினால் பி.எஸ்/01/2011 என்னும் இலக்கம் கொண்ட பத்திரம் மூலம் காணி சொந்தக்காரர்களிடமிருந்து காணிகளைப் பதியும் விபரங்களை அவ்வளவு சுலபமாக எவராலும் சேகரிக்கவும் முடியாது.

மக்கள் இத்திட்டத்தை நியாயப்படுத்தவும் முடியவில்லை. அவர்களுக்கு எவ்வித பிரயோசனம் இருப்பதாக அவர்கள் உணரவும் இல்லை. இதை மேலும் அவர்களுக்கு தொந்தரவு தரும் விடயமாகவே மக்கள் கருதுவதோடு இதை அரசாங்கம் வேறு ஒரு நோக்கத்தோடு செய்வதாகவும் நம்புகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் அரசின் பல நடவடிக்கைகள் தமிழ் மக்களின் மனதை குழப்பி அமைதியற்ற வாழ்வை ஏற்படுத்தியது.

இத்திட்டத்தை நாடு முழுவதிலும் செயற்படுத்த அரசு உத்தேசித்திருப்பின் பல ஆண்டுகளாக இடம் பெயராமல் சொந்த வீடுகளில் மக்கள் சுமூகமாக வாழ்ந்த அம்மாவட்டங்களில் முதலில் ஏன் இத்திட்டம் செயற்படுத்தக் கூடாது?

ஆனால், வடக்கு கிழக்கு பகுதிகளில் போரினாலும் அடிக்கடி இடம்பெயர்வினாலும் மக்கள் போதியளவு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.

சிலர் தம் வீடுகளில் இல்லை. சிலர் தம் சொத்துக்கள் அத்தனையோடும் சேர்த்து பல்வேறு ஆவணங்களையும் இழந்துள்ளனர். சிலர் நாட்டை விட்டு வெளியேறியும் உள்ளனர். இன்னும் சிலர் காணாமல் போயுள்ளனர். மரண சாசனம் எதுவும் விட்டுச் செல்லாது இறந்துவிட்டனர். மரணச் சாதனம் எதுவும் விட்டுச் செல்லாது இறந்தவர்களின் உரித்துத்தாரர்கள் சொத்துக்கும் தமக்கும் உரிமை உண்டென அறியாதவர்களாக உள்ளனர்.
சொத்துக்களை விட்டு இறந்தவர்களின் சொத்துக்களுக்கு பலர் உரிமை கோரக் கூடும். இது போல் பல சிக்கல்கள் நிறைந்த பிரச்சினைகளும் உண்டு. சில சொத்துக்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு காணி அமைச்சரால் தீர்வுகாண முடியாது. அத்தகைய பிரச்சினைகளை சிவில் அதிகாரிகளும், இராணுவ அதிகாரிகளும் தலையிடாமல் அப்பிரச்சினைகளை நீதிமன்றங்களில் நீதிபதிகள் தீர்த்து வைக்கட்டும்.

ஏற்கனவே ஏறக்குறைய உடைமைகள் அனைத்தையும் இழந்து நிற்கும் மக்கள் இத்திட்டத்தால் தாம் மேலும் பலவற்றை இழக்கலாம் என அஞ்சுகின்றனர். இத்திட்டம் ஒர் பயன்மிக்கதாக இருக்குமென நான் நம்பவில்லை.  அவரவர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை அவர்களிடம் விட்டுவிட்டால் எவரின் தலையீடுகளுமின்றி அவர்களே தீர்த்துக் கொள்வார். தவறின் நீதிமன்றின் மூலம் அவர்கள் தீர்வு காண்பர்.
 
காணி, நிலம் அற்றவர்கள் காணி பெற விரும்பினால்  அரச காணிகளை அடையாளம் கண்டு அவர்களின் குறைகளை தீர்க்கலாம்.  போதிய அளவு கஷ்டப்பட்டு போதியளவு இழந்துள்ள மக்களை தொந்தரவு செய்ய வேண்டாமென அதிகாரிகளை எச்சரிக்கவும்.

எல்லாவற்றிற்கும் மேலாக தம் உறவுகள் பலரை இழந்தும், தம் அன்புக்குரியவர்கள் என்றோ ஒரு நாள் தம்மிடம் வருவார்கள் என எதிர்பார்த்து நிற்கும் மக்களுக்கு இத்தகைய விடயங்களில் கவனத்தைச் செலுத்தக்கூடிய மனநிலையில் இல்லை. இத்திட்டத்தை கைவிடுமாறு காணி அமைச்சுக்கு ஆலோசனை வழங்கி ஏதாவது காணி சம்பந்தமாக பிரச்சினைகள் எழுந்தால் சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சினைக்குரியது உறுதிக்காணியெனில் நீதிமன்றிற்கும் 'பேமிற்' காணியெனில் அரச அதிபரிடம் செல்லுமாறும் ஆலோசனை வழங்கவும். இக்கட்டத்திலேனும் தாங்கள் தலையிட்டு இத்திட்டம் அமுலாக்கப்படும் வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு போதியளவு துன்பத்தை கொடுத்துவிட்டது. எனவே இத்திட்டத்தை இரத்துச் செய்து மக்களுக்கு மன அமைதியை கொடுக்குமாறு வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளுகின்றேன்.   
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .