2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இங்கிலாந்து – பாக். போட்டியில் ஆட்டநிர்ணய சதிக் குற்றச்சாட்டு; பாகிஸ்தான் வீரர்களிடம் விசாரணை

Super User   / 2010 ஓகஸ்ட் 29 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகியதை அடுத்து, பாகிஸ்தான் வீரர்களிடம் ஸ்கொட்லாண்ட் யார்ட் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் அணி முகாமையாளர் யவார் சயீட் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

இப்போட்டியில் வேண்டுமென்றே 'நோபோல்' வீசுவதற்கு பாகிஸ்தான் வீரர்களுக்குப் பணம் வழங்கப்பட்டதாக 'நியூஸ் ஒவ் த வேர்ல்ட்'  பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி வீரர்கள் நோபோல் வீசுவதை உறுதிப்படுத்துவதற்காக 150,000 ஸ்ரேலிங் பவுண் பணம் பெற முன்வந்த ஒருவருடனான கலந்துரையாடலை சூதாட்ட முகவர்கள் போல் நடித்த தனது நிருபர் இரகசியமாக ஒளிப்பதிவு செய்துள்ளதாகவும் அவ்வீடியோ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் மேற்படி பத்திரிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக 35 வயதான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களான மொஹமட் அமிர், மொஹமட் ஆஸிக் ஆகியோரிடம் வேண்டுமென்றே நோபோல் வீசுமாறு அந்நபர் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இவ்விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வீரர்களோ அதிகாரிகளோ கைது செய்யப்படவில்லை எனவும் இப்போட்டியின் நான்காவது நாளான இன்றைய ஆட்டம் தொடர்ந்து நடைபெறும் எனவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் தெரிவித்துள்ளது.

இவ்விடயத்தை ஐ.சி.சி. பாரதூரமாகக் கருதுவதாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐ.சி.சி. புலனாய்வாளர்கள் துபாயிலுள்ள தலைமையகத்திலிருந்து வந்துகொண்டிருப்பதாகவும் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X