2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி: இலங்கையுடன் மோதுகிறது

Super User   / 2011 மார்ச் 30 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தெரிவாகியுள்ளது.

இன்று நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான அரையிறுதிப் போட்டியில் 29  ஓட்டங்களால் வென்றதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி சனிக்கிழமை மும்பையில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து இந்திய அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று மொஹாலியில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 260 ஓட்டங்களைப் பெற்றது.

முதல் விக்கெட்டுக்காக வீரேந்தர் ஷேவாக்கும் சச்சின் டெண்டுல்கரும் 48 ஓட்டங்களைப் பெற்றனர். ஷேவாக் 25 பந்துகளில் 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதன்பின் சச்சின் டெண்டுல்கரும் கௌதம் காம்பீரும் இரண்டாவது விக்கெட்டுக்காக 68 ஓட்டங்களைப் பெற்றனர்.

காம்பீர் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாட வந்து வீரட் கோலி (9) யுவராஜ் (0) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தழந்தனர்.

தனது 100 ஆவது சர்வதேச சதத்தை எதிர்பார்த்திருந்த டெண்டுல்கர்  85 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அணித் தலைவர் டோனி 25 ஓட்டங்களுடன் வெளியேறிய பின்னர் ஹர்பஜன் சிங் 12 ஓட்டங்களுடனும் ஸஹீர்கான் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களைப் பெற்றார்.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் வஹாப் ரியாஸ் 46 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் சயீட் அஜ்மல் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 231 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் முஹமட் ஹாபிஸ் 43 ஓட்டங்களைப் பெற்றார். கம்ரன் அக்மல் (19 ஓட்டங்களுடனும்  அஸாத் ஷபீக் (30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

26 ஆவது ஓவரில் அனுபவமிக்க வீரரான யூனிஸ்கான் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது பாகிஸ்தான்அணி 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

உமர் அக்மல் 24 பந்துகளில் 2 சிக்ஸர் உட்பட 29 ஓட்டங்களைப்பெற்று ஆட்டமிழந்தார்.  மற்றொரு சிரேஷ்ட வீரரான அப்துல் ரஸாக் 3 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

 42 ஆவது ஓவரில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 184 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது அணித்தலைவர் அவ்ரிடி 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அத்துடன் பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு மறைந்தது.

கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணிக்கு 30 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ஒரு விக்கெட் கைவசமிருந்தது. ஆனால் அவ்வணி ஒரு ஓட்டத்தை மாத்திரமே பெற்றது. ஸஹீர்கான் வீசிய அந்த ஓவரின் 5 ஆவது பந்தில் மிஸ்ப உல் ஹக் 56 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் வீரட் கோலியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இந்திய பந்துவீச்சாளர்களில் ஸஹீர்கான், ஆஷிஸ் நெஹ்ரா, யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங், முனாவ் பட்டேல்ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சச்சின் டெண்டுல்கர் இப்போட்டியின் சிறப்பாட்டக்காராக தெரிவானார்

இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூஸுப் ரஸா கிலானி ஆகியோர் உட்பட பல வி.ஐ.பிகள் இப்போட்டியை நேரில் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா, இலங்கை ஆகிய இரு அணிகளும் 3 ஆவது தடவையாக உலகக்கிண்ண  இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளன. இந்தியா 1983 ஆம் ஆண்டிலும் இலங்கை 1996 ஆம் ஆண்டிலும் சம்பியனாகியிருந்தன.

இலங்கையும் இந்தியாவும் உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் மோதவுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.


 


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .