அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஷ் டெஸ்ட் தொடரில் பங்குபற்றிவரும் இங்கிலாந்து அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் முடிவில் இரு அணிகளும் போராட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன.
அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, இன்றைய நாள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
முதலாவது விக்கெட்டை 34 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, இரண்டாவது விக்கெட்டுக்காக 121 ஓட்டங்களைப் பகிர்ந்தது. எனினும் 2ஆவது, 3ஆவது, 4ஆவது விக்கெட்டுக்கள் 19 ஓட்ட இடைவெளியில் வீழ்த்தப்பட, அவ்வணி தடுமாறியிருந்தது. 5ஆவது விக்கெட்டுக்காக 83 ஓட்டங்கள் பகிரப்பட்டு அவ்வணி போராடும் நிலையை ஏற்படுத்தியது.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக கிறிஸ் றொஜர்ஸ் 72 ஓட்டங்களையும், ஜோர்ஜ் பெய்லி 53 ஓட்டங்களையும், ஷேன் வொற்சன் 51 ஓட்டங்களையும், மைக்கல் கிளார்க் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஸ்ருவேர்ட் ப்ரோட் 2 விக்கெட்டுக்களையும், கிறேம் ஸ்வான், மொன்ரி பனசர், ஜேம்ஸ் அன்டர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஆஷஷ் தொடரின் முதலாவது போட்டியில் வெற்றிபெற்று அவுஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.