2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மேய்ச்சல் நிலங்களில் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை:மட்டு. அரச அதிபர்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார்)

விவசாய நிலங்களுக்கு அருகில் கால்நடை வளர்ப்போருக்கும் கால்நடை வளர்ப்புக்கென ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் நிலங்களில் விவசாயம் செய்வோருக்கும் எதிராக வழக்கு தொடரப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

இன்று காலை வவுனதீவு பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற பெரும்போக செய்கையில் ஈடுபடுவோருடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கால்நடை வளர்ப்போர், விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் பலர்  இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த விவசாயிகள்,

விவசாயம் செய்வோர் தமது கால்நடைகளை அப்பகுதியில் மேயவிடுவதால் தமது விவசாய நடவடிக்கை கடுமையாக பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தனர். இதன் காரணமாக, தாம் செய்யும் நெற்செய்கை அரைகுறை விளைச்சலுக்கு அறுவடைசெய்யும் நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.

இதன் காரணமாக, தாம் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்வதாகக் கூறிய விவசாயிகள்,  பெரும்போக நெற்செய்கையில் தாம் ஈடுபவது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த கால்நடை வளர்ப்போர், தமக்கென ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் நிலங்களில் அத்துமீறிய விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக தமது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,
உடனடியாக கால் நடை மேய்ச்சல் தரையினை வரைவுசெய்து பெரும்போக செய்கைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு  நடவடிக்கையெடுப்பதாக கூறினார்.

கால்நடை மேய்ச்சல் தரையினை அளவீடு செய்ய நிலஅளவீடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அது மிகவிரைவில் படிப்படியாக அபிவிருத்தி செய்யப்படும். மேய்ச்சல் தரையில் விவசாயிகள் அத்துமீறி விவசாயம் செய்தால் அது சட்டவிரோத நடவடிக்கையாகக் கருதப்பட்டு வழக்குத் தொடரப்படும்.

அத்துடன், கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் தமது கால்நடைகளை தமது நில ஒதுக்கீட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். மாறாக விவசாய காணிகளில் இது மேய்ச்சலுக்கு செல்லுமானால் கட்டாக்காலி விலங்குகள் சட்டத்தின் கீழ்  கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு தொடரப்படும் என தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .