2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மு.கா. குழம்பியுள்ளது:கோ.கருணாகரம்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 03 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

முஸ்லிம் காங்கிரஸின் பேச்சு வன்மையாலோ, மொழி வளத்தாலோ, வாதத்திறமையாலோ முஸ்லிம் மக்களோ தமிழ் மக்களோ அல்லது ஒட்டுமொத்த நாட்டு மக்களோ குழம்பவில்லை. அவர்கள் மிகவும் தெளிவான சிந்தனையுடன் உள்ளார்கள். ஆனால், மு.கா. குழம்பிப்போயுள்ளது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ்,  கிழக்கு மாகாணசபை தொடர்பிலும் ஆட்சி அமைப்பு தொடர்பிலும் அண்மைக்காலமாக வெளியிட்டுவரும் கருத்துக்கள் சம்பந்தமாக நேற்றையதினம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அந்த  அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் இதுவரை தமது பேச்சு வன்மையாலும் வாதத்திறமையாலும் முஸ்லிம் மக்களை மட்டுமே குழப்பிவந்தனர். தற்போது முழு நாட்டு மக்களையும் குழப்ப முயற்சிக்கின்றார்கள். கிழக்கு மாகாணசபை ஆட்சி அமைப்பு தொடர்பாக அண்மைக்காலமாக அவர்களால் வெளியிடப்படும் அறிக்கைகளை நோக்கும்போது இவ்வாறுதான் எண்ணத் தோன்றுகின்றது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து போட்டியிட்டு பின்பு அதிலிருந்து பிரிந்து பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து அமைச்சர் பதவிகளுடன் அரசின் பங்காளிகளாகியது.
அவ்வாறே மாகாணசபைத் தேர்தலிலும் அரசுடன் இணையாது தனியாக போட்டியிட்டு – அரசை விமர்சித்து – தேர்தலின் பின் அரசுடன் இணைந்து மாகாணசபையில் ஆட்சி அமைத்தது. பின்னர் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது தேர்தல் நடைபெறுவதற்கு ஒருவாரகாலத்துக்குள் பொதுஜன ஐக்கிய முன்னணியில் இருந்து விலகுவதாகவும் இதன் காரணமாக மத்திய அரசில் வகித்த அமைச்சுப் பதவிகளை துறப்பதாகவும் அறிவித்தது. இவை யாவும் முஸ்லிம்; காங்கிரஸின் தனிப்பட்ட விடயம். இதில் குறை நிறை காண்பதோ விமர்சிப்பதோ எனது நோக்கமல்ல.
முஸ்லிம் காங்கிரஸ், கிழக்கு மாகாணசபையில்  ஆட்சி அமைக்கும்போது பொதுஜன ஜக்கிய முன்னணியுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்வதாகவும் அதன்படி இரண்டரை வருடகால பங்கீடு அடிப்படையில் முதலமைச்சர் பதவி பேணப்படவேண்டும் என்பதாகவும் அக்காலத்தில் பேசப்பட்டது. ஆனால், ஜனாதிபதித் தேர்தலுக்கு சற்று முன்னரான காலப்பகுதியில் இவ்வொப்பந்தம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் வினாவெழுப்பிய வேளை அப்போதைய ஆட்சியாளர்களால் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டதாகவும் ஒரு கொசுறுத் தகவல். இவை எல்லாம் எமக்கு அப்பாற்பட்டது.

நாம் இப்போது பிரச்சினையாக பார்ப்பது என்னவெனில் கிழக்கு மாகாணசபை ஆட்சி தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் முன்வைக்கும் வாதம்தான். இரண்டரை வருட காலப்பகிர்வுடனான முதலமைச்சர் விவகாரமும் அது  தொடர்பான ஒப்பந்தமும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும் உரிய விவகாரம். அவர்களது கூற்றுப்படி பொதுஜன ஐக்கிய முன்னணியில் இருந்து அவர்கள் விலகியபோதே அவ்வொப்பந்தமும் வலுவிழந்துவிட்டது.

வலுவிழந்த ஒப்பந்த அமுலாக்கம் தொடர்பாக அதில் ஒரு தரப்பாக அல்லாத தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனோ வாதிடுவது எவ்வகையிலும் பொருத்தமானது அல்ல என்பதுடன், அரசியல் தார்மீக ஒழுக்கத்துக்கும் ஒவ்வாதது. தற்போதைய ஜனாதிபதி  பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் எவ்வித சம்பந்தமும் அற்றவர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மட்டுமே.

எமது சந்தேகம் தற்போது முஸ்லிம் காங்கிரஸ் எங்கு இருக்கின்றது? பொதுஜன ஐக்கிய முன்னணியுடனா? அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனா? அல்லது தனியாகவா? ஏனெனில் பொதுஜன ஐக்கிய முன்னணியில் இருந்த வேளை மத்திய, மாகாண அமைச்சுப் பதவிகளையும் துறந்தார்கள். ஆனால், தற்போது பொதுஜன ஐக்கிய முன்னணில் இருந்து பிரிந்த குழுவினருடன் இணைந்து மத்தியில் மாற்றத்தை விரும்பும் குழுவினராகவும் மாகாணத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு முண்டு கொடுப்பவர்களாகவுமே உள்ளார்கள். இந்த நிலைமைகளே இவர்கள் தொடர்பாக இவ்வாறு என்னை சிந்திக்கத் தூண்டியது.

இவர்கள் ஒன்றை மட்டும் தெளிவாக உணரவேண்டும். உங்களது பேச்சு வன்மையாலோ, மொழி வளத்தாலோ, வாதத் திறமையாலோ முஸ்லிம் மக்களோ தமிழ் மக்களோ அல்லது ஒட்டுமொத்த நாட்டு மக்களோ குழம்பவில்லை. அவர்கள் மிகவும் தெளிவான சிந்தனையுடனே உள்ளார்கள். நீங்களே உங்களுக்குள் குழம்பிக்கொள்கின்றீர்கள்' என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .