2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மீள்குடியோருக்கு அடிப்படை வசதிகளை செய்துகொடுக்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்டவர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்காத காரணத்தால், அவர்கள் மீண்டும் இடம்பெயரும் நிலையேற்பட்டுள்ளது. இதை கருத்திற்கொண்டு அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு புதிய மீள்குடியேற்ற அமைச்சருக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

நேற்று புதன்கிழமை அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,                      

'மட்டக்களப்பு  மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து 1986, 1987, 1989, 1990, 2007ஆம் ஆண்டுகளில் யுத்தம் காரணமாக பலர் இடம்பெயர்ந்தனர். இவர்களில் குறிப்பிட்ட இடங்களை சேர்ந்த பலர் மீள்குடியமர்த்தப்பட்டனர். இம்மக்களில் கணிசமானோர் கடந்த அரசாங்கக் காலத்தில்  மீள்குடியமர்த்தப்பட்டபோது, மீள்குடியமர விருப்பம் தெரிவிக்கக்கூடிய சூழல் இருக்கவில்லை. இருந்தபோதிலும்,   பல குடும்பங்கள்  மீள்குடியமர்த்தப்பட்டனர்.

மீள்குடியமர்த்தப்பட்ட இடங்களில் இவர்களுக்கான அடிப்படை தேவைகளான நிரந்தர வீட்டு வசதி, குடிநீர், போக்குவரத்து, தொழில்வாய்ப்பு, உணவு, கல்வி, வீதி அமைப்பு, சுகாதாரம் ஏனைய வாழ்வாதார வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. இதன் காரணமாக பல மீள்குடியமர்த்தப்பட்ட குடும்பங்கள் மீண்டும் இடம்பெயர்ந்தனர்.

கடந்த காலங்களில் இடம்பெயர்ந்து உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் வசித்துவந்த பலர் அப்பகுதியிலேயே  தங்களுக்கான  தேவைகளான போக்குவரத்து, தொழில், சுகாதார கல்வி வசதிகள் போன்ற விடயங்கள் பூர்த்தி செய்யக்கூடிய வண்ணம் இருந்ததன. இதன்; காரணமாக சொந்த இடங்களில் மீள்குடியமர செல்லும்போது வாய்ப்பு வசதிகள் பூர்த்தி செய்யப்படாததால் மீள்;குடியமர்ந்த பலர் மீண்டும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு திரும்பிவிட்டனர்.

1) ஏறாவூர்ப்பற்று (செங்கலடி) பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஏறாவூர் 4ஆம் குறிச்சியில் 1990ஆம் ஆண்டு யுத்தத்தின்போது பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தனர். இவர்கள் வீடுகள் உடைக்கப்பட்டன. இவர்கள் சொந்த இடங்களில் மீள்;குடியமர்த்தப்பட்டபோதும் இவர்களுக்கான வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இவர்களுக்கு காணி உறுதிகளும் வாக்காளர் இடாப்புகளும் உண்டு. பெரியபுல்லுமலையில் மாந்தோட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களில் ஐந்து குடும்பங்களுக்கு மாத்திரம் வீட்டு வசதி வழங்கப்பட்டுள்ளது. மிகுதியானோருக்கும் வழங்கப்படவேண்டும். மேலும் கித்துள், வெலிக்காகண்டி, கோப்பாவெளி, சர்வோதயநகர் ஆகிய கிராமத்தவர்களும் 2002ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சுமார் 11 மாதங்களுக்கு பின்னர் குடியமர்ந்தவர்கள். இவர்களுக்கும் முழுமையான வீட்டு வசதிகள் இதுவரை செய்துகொடுக்கப்படவில்லை.

2) மண்முனை வடக்கு (மட்டக்களப்பு) பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வலையிறவு கிராமத்தில் 1987இல் இராணுவ முகாம் அமைக்கப்பட்டதால் இடம்பெயர்ந்து 2009இல் இராணுவ முகாம் அகற்றப்பட்ட பின் வீட்டு வசதிகள் செய்துகொடுக்கப்படாத சுமார் 20 குடும்பங்கள் சொந்த இடத்தில் உறவினர் நண்பர்களுடன் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களுக்கும் காணி உறுதிகள், வாக்காளர் இடாப்பு என்பன உண்டு.

3) மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச செயலாளர் பிரிவில் உன்னிச்சை 8ஆம் கட்டையில் 1990ஆம் ஆண்டில் சுமார் 50 குடும்பங்களுக்கு மேல் இடம்பெயர்ந்தனர். இவ்விடத்தில் இருந்த வீடுகள் உடைக்கப்பட்டு இராணுவ முகாம் அமைக்கப்பட்டது. இப்போது இராணுவ முகாம்  அகற்றப்பட்ட பின்னர் சிலருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியோர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் குடிசைகளிலும் வாழ்ந்துவருகின்றனர். இவர்களுக்கும் காணி உறுதிகளும் வாக்காளர் இடாப்புக்களும் உண்டு.

இப்பிரதேச செயலாளர் பிரிவில் 1985ஆம் ஆண்டிற்கு முன் இடம்பெற்ற இனக்கலவரத்தின்போது சிப்பிமடு கிராமத்தில் வாழ்ந்த பெரும்பான்மையினத்தவர்கள், பாவற்கொடிச்சேனை கிராமத்தில் வாழ்ந்த  முஸ்லிம்கள் இடம்பெயர்ந்தனர். இவர்களில் ஒரு சிலரை தவிர பலர் காடுவெட்டி சேனை செய்தவர்கள்.  இவர்களில் பலருக்கு வாக்காளர் இடாப்பும் காணி அனுமதிப்பத்திரமும் இருக்கவில்லை. அனுமதிப்பத்திரம் இருந்த சிலர் குறிப்பிட்ட காணிகளை தமிழ் மக்களுக்கு விற்றுவிட்டனர். வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ள, அனுமதிப்பத்திரமும் உள்ள ஒருசிலரே மீள்குடியமர்ந்துள்ளனர். வாக்காளர் இடாப்பில் பெயர் அற்றவர்களும் காணியை விற்றவர்களும் அவர்களது உறவினர்களும் என பலர் மீள்குடியேறி வருகின்றனர். இப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மேற்குறிப்பிட்ட பலருக்கு மாவட்டத்தின் வேறு இடங்களில் காணிகளும் வீடுகளும் கடந்த காலத்தில் வழங்கப்பட்டுள்ளன.

4) மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலாளர் பிரிவில் கச்சைக்கொடி சுவாமிமலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் கெவிளியாமடு கிராமத்தில் 1986ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் 104 குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. கடந்த இரண்டு வருடகாலத்தில் 18 குடும்பங்கள்வரையில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரூபாய் ஒரு இலட்சம் பெறுமதியான வீடுகள் மாத்திரம் வழங்கப்பட்டபோதும் ஏனைய 86 குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்படவில்லை. இவர்கள் களுதாவளை, தேத்தாத்தீவு போன்ற கிராமங்களில் வாழ்கின்றனர். 1986ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் இந்த 86 குடும்பங்களுக்கு இருந்தும் இவர்களுக்கான வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவில்லை.

5)மாவட்டத்தின் பல தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ளவர்களில் 1986, 1990, 2002ஆம் ஆண்டுகளில் இடம்பெயர்ந்த பலரும் இந்தியாவிலிருந்து மீள்குடியமர்ந்த பலரும் வன்னியிலிருந்து மீள்குடியமர்ந்த பல குடும்பங்களும் சொந்த மாவட்டத்திற்குள் இடம்பெயர்ந்த மீள்குடியேறிய பலரும் என அநேகர் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமான வீட்டு வசதிகள் இன்றுவரை செய்துகெடுக்கப்படவில்லை.

6)மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்ணளவாக 19500 விதவைகள் உள்ளனர். சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அண்ணளவாக 850 விதவைகள் சொந்தமாக வீடற்ற நிலையில் காணப்படுகின்றனர்.

7)கடந்த காலங்களில் வறுமை காரணமாகவும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாகவும் வீடுகள் பாதிக்கப்பட்டவர்களும் அதிகமாக உள்ளனர்.ஷ

8)கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலாளர் பிரிவில் வடமுனை, ஊத்துச்சேனை கருங்காளியடிச்சேனை ஆகிய கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து மீள்குடியேறிய பலர் உள்ளனர். இவர்களுக்கான வீடமைப்பு திட்டங்களும் உருவாக்கப்படவேண்டும.;

9)கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலாளர் பிரிவில் 1987, 1990ஆம் ஆண்டுகளில் தோணிதாட்டமடு, ஒமடியாமடு, வாகரையூணியன்கொளணி, கேணிநகர் போன்ற கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களுக்கும் 1983 தொடக்கம் 2002வரை பல தடவைகள் இடம்பெயர்ந்த புணானைமேற்கு பகுதியில் உள்ள நான்கு கிராம மக்களுக்கும் இதுவரை நிரந்தர வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவில்லை.

10)போரதீவுப்பற்று (வெல்லாவெளி) பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இறாணமடு கிராமத்தில் இடம்பெயர்ந்து மீள்;குடியேறியவர்களுக்கும் 1990இல் மண்டூர். பாலமுணை கிராமத்தில் இராணுவமுகாம், பொலிஸ்முகாம் போன்றவை அமைக்கப்பட்டதால் வீடுகள் அழிவிற்குள்ளான 28 பேருக்கும் இன்னும் வீட்டு வசதிகள் செய்யப்படவில்லை.

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் வீட்டு வசதிகளுக்காக ஏங்குகையில் அரசியல் பலம் மிக்கவர்களால் சிலருக்கு வேறு இடங்களில் காணிகளும் வீடுகளும் வழங்கப்பட்டுள்ளதுடன் அநீதியான முறையில் சிலருக்கு மீள்குடியமர்வுக்கான  கொடுப்பனவை வழங்கவும் முற்படுவதில் நியாயம் இருக்கமுடியாது என்பதனையும் குறிப்பிட விரும்புகின்றேன். குறித்த உதவிகள் வழங்கப்படும்போது கட்சி சார்ந்த உதவி தவிர்த்து பொதுவான விதி முறையினை நடைமுறைப்படுத்துமாறு மிக அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .