2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஜ.ம.முன்னணியின் எதிர்கால முன்னெடுப்புகளை கொழும்பு மாவட்ட மாநாடு தீர்மானிக்கும் : மனோ கணேசன்

Super User   / 2011 ஜூன் 13 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதிர்வரும் சனிக்கிழமை ஜுன் 18 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட மாநாடு, மேல் மாகாணத்தில் தமது கட்சியின் எதிர்கால அரசியல் முன்னெடுப்புகளை தீர்மானிக்கும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது:

'மேல் மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் பெரும்பான்மை கட்சிகளால் வெறும் வாக்கு வங்கிகளாக பயன்படுத்தப்பட்ட காலகட்டத்திலே எமது கட்சி மேல் மாகாண மக்கள் முன்னணியாக உருவாக்கப்பட்டது. எமது உருவாக்கத்தின் பின்னர் மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் அடையாளம் ஏற்பட்டது.

இந்த அரசியல் அடையாளத்தின் மூலமாகவே போர் நடைபெற்ற காலகட்டத்திலே கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்கவும், போராடவும், சர்வதேச கவனத்தை திருப்பியதன் மூலம் அவற்றை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரவும் எங்களால் முடிந்தது. இந்நிலையில் ஜனநாயக மக்கள் முன்னணியாக அரசியல் விரிவாக்கம் பெற்ற எமது கட்சி மலையகத்திலும், மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை பெற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் நாம் இன்று ஒரு தேசிய கட்சியாக வளர்ச்சியடைந்துள்ளோம்.
 
கடந்த தேர்தலின்போது ஏற்பட்ட திட்டமிடல் குளறுபடிகள் காரணமாகவும், எமது கட்சியின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி நிலைப்பாடுகளுக்கு எதிராக  அரசாங்கத்துடன் இணைந்துகொண்டதன் காரணமாகவும் ஏற்பட்டுள்ள நிலைமையை சீர் செய்வதற்காக தற்சமயம் கட்சி தலைவர் என்ற முறையில் கொழும்பு மாவட்ட நடவடிக்கைகளை நான் நேரடியாக எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளேன்.

எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் கொழும்பு மாவட்டத்தில் நமது கட்சி முதன் நிலை கட்சியாக போட்டியிடும். கொழும்பை அடுத்துள்ள கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலும் நாம் அதிகூடிய கவனங்களை செலுத்த தொடங்கியுள்ளோம்.

இந்த பின்னணியில் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கொழும்பு மாவட்ட மாநாட்டில் வடகொழும்பு, மத்திய கொழும்பு, கொழும்பு கிழக்கு, கொழும்பு மேற்கு, பொரளை, கொலொன்னாவை, அவிசாவளை, தெகிவளை, இரத்மலானை, மொரட்டுவை ஆகிய தொகுதிகளிலிருந்து பேராளர்கள் கலந்துகொள்வார்கள். எமது கட்சியுடன் பொது உடன்பாட்டுடன் இருக்கின்ற தோழமை கட்சி தலைவர்களும் கலந்துகொள்வார்கள். இம்மாநாட்டிற்கு முழுமையான ஒத்துழைப்பை தரும்படி தலைநகர தமிழ் பேசும் மக்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X