2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யாழில் மூவாயிரம் பேர் டெங்குநோயால் பாதிப்பு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 29 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடத்தில் மாத்திரம் மூவாயிரம் பேர் டெங்குநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வடபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வந்த டெங்குநோய் ஒழிப்பு நடவடிக்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பெரும்பாலான நாடுகளில் இந்த டெங்குநோய் தாக்கமானது அதிகமாகவே இருந்து வருகிறது.

இலங்கையில் டெங்குநோய் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டபோதிலும், எதிர்வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தென்மேற்கு பருவமழையால் இந்த நோய்த் தாக்கம் மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைக் கருத்திற்கொண்டே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
இந்த வருடத்தில் யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோயால் 2 பேர் மாத்திரம் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடத்தில் டெங்குநோய்த் தாக்கம் காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தவிர, மலேரியா காய்ச்சலும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு மலேரியா காய்ச்சல் அதிகமாக ஏற்பட்டுள்ளது.  இவர்கள் யாழ். மாவட்டத்திற்கான போக்குவரத்தை மேற்கொள்வதன் மூலமும் மீள்குடியேறுவதன் மூலமும் இக்காய்ச்சல் ஏனைய மக்களுக்கும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது.

இலங்கையில் நுளம்பினால் ஐந்து வகையான நோய்கள் பரவுகின்றன. டெங்கு, மலேரியா, யானைக்கால்நோய், சிக்கன்குனியா, யப்பான் மூளைக் காய்ச்சல் என்பன ஏற்படுகின்றது. எனினும,; யாழ். மாவட்டத்தில் டெங்கு, மலேரியா என்பவற்றின் தாக்கமே அதிகமாக காணப்படுகின்றன. இவையும் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .