2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பௌத்தமத குருவாக அர்ப்பணிக்க வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 27 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

இலங்கையில் 11,777 பௌத்த விகாரைகள் உள்ளதாகவும் இவ்விகாரைகளில் பணியாற்றுவதற்கு பௌத்த பிக்குகள் தேவைப்படுவதால் சிங்கள குடும்பத்திலிருந்து ஒவ்வொருவரை அப்பணிக்குமாறும் பிரதமர் டி.மு.ஜயரட்ன வேண்டுகோள் விடுத்தார்.

புத்தளம் பௌத்த மத்திய நிலையத்தின் 8ஆவது அடவிசி முனி பெரஹர நேற்று சனிக்கிழமை நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இலங்கையில் 5 சமூகங்கள்  வாழ்கின்றன. சிங்களம், தமிழ், முஸ்லிம், பறங்;கியர் மற்றும் மலே சமூகத்தவர். 4 மதங்கள் உள்ளன. பௌத்தம், கிறிஸ்தவம், இந்து, இஸ்லாம் ஆகியன. இம்மதங்கள் எல்லாம் நல்ல மனிதர்களை உருவாக்குவதற்காகவே பாடுபடுகின்றன. அதற்காகத்தான் மதத் தலைவர்கள் தேவைப்படுகின்றனர்.

மதக்கோட்பாடுகளை கடைப்பிடித்து வாழும்போது அவன் தவறுகளின் பக்கம்  செல்லமாட்டான். அவன் தவறுகளின் பக்கம் சென்றால் மீண்டும் மதத் தலங்களுக்கு வருகின்றபோது உபதேசம் அவனுக்கு செய்யப்படுகிறது. அவனுக்கு தொடர்ச்சியாக உபதேசம் செய்யப்படும்போது மனம் ஆறுதல் அடைகின்றது. இதனால் தவறு செய்வதிலிருந்து அவன் தவிர்ந்து கொள்கின்றான். மதத்தை சரியாக பின்பற்றுபவர்கள் தான் சிரேஷ்டத்துவம் மிக்கவர்களாக பரிணமிப்பர்.

சிறிய வயதிலிருந்தே மதத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் பெரியவரானால் அவரிடம் எதனையும் எதிர்பார்க்க முடியாது. இன்று பெரியவர்ளுக்கு மரியாதை செலுத்தும் தன்மை குறைந்து வருகிறது. இதனால் தான் பௌத்த விகாரைகளுக்கு ஒவ்வொரு பிள்ளையை உள்வாங்கவுள்ளோம். இவ்வாறு உள்வாங்கும் குடும்பங்களின் நிலையை கவனத்தில் கொண்டு அக்குடும்பங்களு;ககு சில நலத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

இன்று ஜனாதிபதி நாட்டை அபிவிருத்தி செய்யும் திட்டங்களை முன்னெடுத்துள்ளார். தனிப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதார திட்டங்களை மையப்படுத்தி 10 இலட்சம் வீட்டு பொருளாதார அலகு திட்டத்தை ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் நாம் முயற்சியாளர்களாக மாற வேண்டும். அப்போது தான் எமது வாழ்க்கையிலும் நாட்டிலும் பொருளாதார மேம்பாடுகள் ஏற்படும். சிலர் நன்றாக பணம் சம்பாதிக்கின்றனர். அதனை அவர்களுக்கு செலவு செய்ய தெரிவதில்லை. வீண் கேளிக்கைகளுக்கும் சூதாட்டங்களுக்கும் செலவிடுகின்றனர். நாம் செலவு செய்வதில் இவ்வுலகிலும் நன்மை கிடைப்பதோடு மறுவாழ்வுக்கும் அது நலனை பெற்றுத் தர வேண்டும்.

புத்தளம் நகரமானது முழு உலகுக்கும் முன்மாதிரியாக உள்ளது. சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றதை இன்றைய இந்த நிகழ்வு காட்டுகின்றது என்றும் பிரதமர் டி.மு.ஜயரட்ன கூறினார்.

இந்த நிகழ்வில் அரசியல் மற்றும் ஆண்மீக தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்த விகாரையில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையையும் பிரதமர் திறந்து வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X