-எஸ்.றொசேரியன் லெம்பேட்
இலங்கையின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்றைய தினம் (4) காலை, மன்னாரில் இருந்து கொழும்புக்கான பாத யாத்திரையை, மன்னாரைச் சேர்ந்த 'சாக்கு சாமியார்' என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பர் கிருஸ்ணன் டயஸ் என்பவர் ஆரம்பித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, எம் நாட்டு மக்களிடம் இன மத ஒற்றுமை, மக்கள் மத்தியில் சாந்தி சமாதானம் நிலவவும் குறிப்பாக, கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக தொடர்ச்சியாக தங்களை அர்ப்பணித்து வரும் சுகாதார தரப்பினர், ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு படையினர் உட்பட அனைவரும் உடல் உள நலம் வேண்டியும், இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டும் பாதயாத்திரை மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை (4) காலை 11 மணியளவில், மன்னார் மாவட்டச் செயலகத்திலிருந்து தனது பாத யாத்திரையை, அவர் ஆரம்பித்தார்.
குறித்த பாதயாத்திரையானது, சுமார் 40 நாள்கள் இடம்பெறும். நாளொன்றுக்கு, சுமார் 10 கிலோமீற்றர் தூரம் வரை பாத யாத்திரிகையை மேற்கொள்வார். இதன்போது, செல்லும் வழிகளில் உள்ள முக்கிய மதஸ்தலங்களை தரிசித்து செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஒரு முக்கிய பௌத்த மதத் தளத்தை அடைந்து, அங்கு தனது பாதயாத்திரையை நிறைவு செய்ய இருப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.