2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இயற்கை எய்தினார் மிருதங்க பூபதி

George   / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவில் மிருதங்க பூபதி, ஞானச்சுடரொளி, கலாபூஷணம், யாழ்ப்பாணம் ஸ்ரீ ஆறுமுகம்பிள்ளை சந்தானகிருஷ்ணன் காலமானார். எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்த வல்லமை படைத்த மிருதங்க வாத்தியக் கலைஞர் ஸ்ரீ ஆ.சந்தானகிருஷ்ணன் அவர்கள் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இயற்கை எய்தினார். 

ஈழமணி திருநாட்டின் யாழ்ப்பாணம் மூளாய் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர், தன் தந்தையாரான ஸ்ரீ ஆ.வி. ஆறுமுகம்பிள்ளையிடம் குருகுல முறைப்படி கல்வி கற்றவர். 

அமரர்களான இசை மேதைகள் வலங்கைமான் ஸ்ரீ ஏ.சண்முகசுந்தரம்பிள்ளையும், ஸ்ரீ ஏ.பாலகிருஷ்ணனும் (மூளாய்) இவர்களது சகோதரர்கள் ஆவார்கள். 

காலம் சென்ற சந்தானகிருஷ்ணன் ஓய்வுபெற்ற தொலைத்தொடர்பு பொறியியலாளர் ஆவார். இவர் ஆரம்ப காலத்தில் சங்கீத பூஷணங்கள் ஸ்ரீ எஸ்.கணபதிப்பிள்ளை, ஸ்ரீ பொன் சுந்தரலிங்கம், ஸ்ரீ  எம்.ஏ. குலசீலநாதன், சென்னை பல்கலைக்கழக பேராசிரியை பிரமீளா குருமூர்த்தி எம்.ஏ. ஸ்ரீமதி குலபூஷணி கல்யாணராமன், ஸ்ரீமதி சிவசக்தி (இலண்டன்), ஸ்ரீமதி சத்தியபாமா இராஜலிங்கம் ஆகியோரின் இசை அரங்கேற்றங்களுக்கு மிருதங்கம் வாசித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ ரவிச்சந்திராவின் மிருதங்க அரங்கேற்றத்தில் யாழ். நகர மண்டபத்தில் கஞ்சிரா வாசித்தவர். கொழும்பிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் பிரபலம் பெற்ற நடன மணிகளின் நாட்டிய அரங்கேற்றங்களிலும் மிருதங்கம் வாசித்துள்ளார்.  
ஈழத்திலும், இலங்கையிலும் பல வளரும் கலைஞர்களின் அரங்கேற்றங்களுக்கு மிருதங்கம் வாசித்துள்ளார். கலையில் அவர்கள் காலடி வைத்த வேளையில் இவரின் கலை உதவி உறுதுணையாக இருந்துள்ளது. 

அண்மை காலத்தில் அவுஸ்திரேலியாவின் சிட்னி, பிறிஸ்பேன் ஆகிய நகரங்களில் ஸ்ரீமதிகள் ஆனந்தவல்லி, தமயந்தி, சித்திரா ஆகியோரின் மாணவிகளினது நடன அரங்கேற்றங்களில் மூன்றாவது தலைமுறைக்கும் மிருதங்கம் வாசித்தது பெருமைக்கு உரியது.  

1965-1970 ஆண்டு காலப் பகுதியில் N.C.O.M.S பரீட்சை பிரதம அதிகாரியாக கடமையாற்றிவர். அப்போது பரீட்சைக்குத் தோற்றிய பலர் இன்று புகழ்பூத்த மிருதங்க கலைஞர்களாக திகழ்கின்றார்கள். இவர் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஓமான், ஹொங்கோங், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கச்சேரிகள் செய்துள்ளார். 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினி கூட்டுத்தாபனங்களின் Super grade Artist ஆவார். சென்னை AIR இலும் மிருதங்கம், கஞ்சிரா ஆகிய இரண்டு வாத்தியங்களிலும் கச்சேரி செய்து பங்குபற்றியவர். 

இவருக்கு நல்லை ஆதீனமும், மதுரை ஆதீனமும் இணைந்து மிருதங்க பூபதி, கொழும்பு கப்பித்தாவத்தை தேவஸ்தானம் ஞானச்சுடரொளி, இலங்கை அரசாங்கம் கலாபூஷணம் ஆகிய பட்டங்களையும், பொற்கிழி, தங்கப் பதக்கங்கள், பொன்னாடை வழங்கியும் கௌரவித்துள்ளனர்.

இவரது சஷ்டியப் பூர்த்தி நிமிர்த்தமாக கொழும்பு கம்பன் கழகம் லயசங்கமம் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து மிருதங்கம் வாசிக்க வைத்து பொன்னாடை போர்த்தியும், யாழ். இசை வோளாளர் சங்கமும், கச்சேரி செய்ய வைத்து பொன்னாடை போர்த்தியும் கௌரவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் சிட்னி கலாபவனம் கலா திலகம் என்னும் விருதையும், சிட்னி கம்பன் கழகம் சான்றோர் விருது வழங்கியும் கௌரவித்துள்ளது. 

இவர் சென்னை இசை விழாக்களில் மியூசிக் அகாடமி, அண்ணாமலை மன்றம், ரசிக ரஞ்சன சபா, ஸ்ரீ பார்த்தசாரதி சபா, கிருஷ்ணகான சபா, வாணிமஹால் மற்றும் பல சபாக்களிலும் மிருதங்கம், கஞ்சிரா ஆகிய இரு வாத்தியங்களும் வாசித்துள்ளார்.  

இசைமேதைகளான சித்தூர் சுப்பிரமணியபிள்ளை, வைணிக வித்துவான் எம்.ஏ.கல்யாண கிருஷ்ண பாகவதர், ரி.கே. ரங்காச்சாரி, மஹாராஜபுரம் சந்தானம், கே.பி. சுந்தராம்பாள், எம்.எல். வசந்தகுமாரி, ராதா ஜெயலஷ்மி, டொக்டர் பாலமுரளிகிருஷ்ணா, டொக்டர் கே.ஜே. ஜேசுதாஸ், ஓ.எஸ். தியாகராஜன், சேஷகோபாலன், மண்டலின் சிறிநிவாஸ், சந்தானகோபாலன், சஞ்சய் சுப்பிரமணியம், உன்னிகிருஷ்ணன், சீர்காழி எஸ். கோவிந்தராஜன், சுதா ரகுநாதன், பம்பாய் ஜெயஸ்ரீ, நித்தியஸ்ரீ, ரி.வி. ச! ங்சரநாராயணன், ஹைதராபாத் சகோதரிகள், வயலின் மேதைகள் டி.என். கிருஷணன், சுப்பிரமணியம், எல். சுப்பிரமணியம், கணேஷ்-குமரேஸ், வேணுகானவித்துவான்களான டொக்டர். ரமணி, ஷஷாங் ஆகியோருக்கும் வாசித்துள்ளார்.  

இவர் இந்தியாவின் சிரேஸ்ட மிருதங்க வித்துவான்களான ரி.கே.மூர்த்தி, பாலக்காட்டு ரகு, உமையாள்புரம் சிவராமன், வேலூர் ராமபத்ரன!, அமரர் தஞ்சை உபேந்திரன், குருவாயூர் துரை, ஸ்ரீமுஷ்ணும் ராஜாராவ், திருச்சி சங்கரன், திருவாரூர் பக்தவத்சலம் மற்றும் இளைய தலைமுறை வித்துவான்களுடனும் இணைந்து கஞ்சிரா வாசித்ததை நினைவு கூர்ந்து மகிழ்ந்ததோடு, பெரும் பாக்கியமாகக் கருதினார். 

இசை ஆளுமை கொண்ட காலம் சென்ற சந்தானகிருஷ்ணன் அவுஸ்திரேலியாவில் எம்மத்தியில் வாழ்ந்து மறைந்தது இசை உலகத்துக்கு ஒரு பேரிழப்பாகும்.

இவரின் இறுதி நிகழ்வுகளின் விவரம்:

Viewing: On Date 15th Feb 2016 (Monday)
Time between 06:00 PM to 08:00 PM
At Guardian Funerals, 1 First Avenue, Blacktown, NSW 2148, Australia.
 
Last ride and Cremation: On Date 17th Feb 2016 (Wednesday)
Time between 02:00 PM to 04:00 PM
At Pinegrove Memorial Park, “North Chapel”,
Eucalyptus Drive (OFF Kington Street), Minchinbury, NSW 2770, Australia.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .