2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிள்ளைகளுக்கு ஃபைசர் மாத்திரம் ஏற்றவும்

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 18 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில், நேற்று (17) முற்பகல் வீடியோ
தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கொவிட்-19 ​தொற்றொழிப்புச் செயலணியின்
வாராந்த கூட்டத்தின் போதே, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

பிள்ளைகளுக்கான தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டம் தொடர்பில் பதிலளித்த
சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல
குணவர்தன, “நாள்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்டுள்ள 12 முதல் 19 வயதுக்கு
இடைப்பட்ட சிறுவர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஏற்றுமாறு,
விசேட சுகாதார நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது” என்றார்.

அத்துடன், “சிகிச்சையக (கிளினிக்) விசேட வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பின்
கீழ், பெற்றோர்களின் அனுமதியுடன், அந்தச் சிகிச்சையகங்களுக்குள் வைத்து
மாத்திரம் மேற்படி சிறுவர்களுக்கான தடுப்பூசியை ஏற்றத் திட்டமிடப்பட்டுள்ளது”
என்று, சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

12 – 15 வயதுக்கிடைப்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்குரிய தடுப்பூசி ஏற்றல்
தொடர்பில், விசேட வைத்திய குழு பதிலளிக்கையில், உலகின் ஏனைய
நாடுகளில்கூட, அதற்கான நடவடிக்கைகள் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை

என்றும் இருப்பினும், 15 – 19 வயதுக்கிடைப்பட்ட அனைத்துச் சிறுவர்களுக்குமான
தடுப்பூசி ஏற்றலுக்குரிய பரிந்துரை கிடைக்கப்பெற்றுள்ளது என்றது. இதன்படி, நாட்டிலுள்ள 15 – 19 வயதுக்கு இடைப்பட்ட அனைத்துச் சிறுவர்களுக்குமான தடுப்பூசி ஏற்றலை விரைவுபடுத்தி முடிக்குமாறும் வைத்தியசாலைகளுக்குள் வைத்து மாத்திரம் அவர்களுக்கான தடுப்பூசி ஏற்றலை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.

விசேட வைத்திய குழுவின் பரிந்துரைக்கமைய, அனைத்துச் சிறுவர்களுக்கும், ஃபைசர் தடுப்பூசியை மாத்திரம் ஏற்றுமாறும், ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார். நாட்டு மக்களுக்கு ஏற்றப்படும் தடுப்பூசிகள் அனைத்தும் தரம்வாய்ந்தவை என்றும் எடுத்துரைத்த விசேட வைத்திய நிபுணர்கள் அதனால், விசேட தடுப்பூசியொன்று கிடைக்கும் வரை காத்திருக்காது, அனைவரும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள முன்வர வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.

கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலைகளில், கொரோனா சிகிச்சை நிலையங்களை
உருவாக்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது. மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், காணிப் பதிவு அலுவலகம் போன்ற அத்தியாவசியச் சேவைகளைப் பொதுமக்களுக்கு வழங்கும் நிறுவனங்களின் பணிகளையும் தொடர்ந்து முன்னெடுக்க அந்நிறுவனங்களின் தலைவர்கள், உரிய தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .