2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்னுயிரை மாய்ப்பது கோழைத்தனமான முடிவாகும்

Editorial   / 2021 ஜூலை 12 , மு.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்னுயிரை மாய்ப்பது கோழைத்தனமான முடிவாகும்

ஒருவர், தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ளும் உரிமையைக் கொண்டிருக்கவில்லை என்பதை முதலில் சகலரும் விளங்கிக் கொள்ளவேண்டும். அதேபோல, அடுத்தவரின் உயிரையும் பலவந்தமாகப் பறித்துவிடக்கூடாது. ஆனால், இவையிரண்டும் சாதாரணமாக பரவலாகவே இடம்பெற்றுவருகின்றன.

சிலநேரங்களில், தற்செயலாக ஒருவரின் உயிர் பறிக்கப்பட்டுவிடும். இதுவும் கூட, ஒருசில நிமிடங்கள் நிதானம் தவறியதால் ஏற்பட்ட விபரீதமாகவே இருக்கும். அங்கு நிதானத்துடன் இருந்திருந்தால், உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்.

இன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்று தோற்றுப்போவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. “இவனைப் பார்த்தாவது திருந்த வேண்டும்” என்பதற்காகவே, தண்டப்பணத்துடன் கூடிய கடும் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை, சமூக வேலைகளுடன் சம்பந்தப்பட்டவைகளாகவே இருக்கும்.

தன்னுயிரை மாய்த்துக்கொள்வதிலிருந்து ஒவ்வொருவரையும் தடுக்கவேண்டுமாயின், சிறுவயதிலிலிருந்தே தோல்விகளிலிருந்து வெற்றிப்படிக்காக தட்டிக்கொடுக்கவேண்டும். சிறு சிறு தோல்விகளால் துவண்டுபோவோர் வாழ்க்கையின் வெறுமைக்கே சென்றுவிடுவர். சின்னச் சின்ன விடயங்களில் தொடர் வெற்றிகண்டதன் பின்னர், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிடின், மனச்சோர்வு அடைந்துவிடுவர்.

​தோல்வியும் வெற்றியும் கலந்தே இருக்கவேண்டுமென்ற தத்துவத்தைக் கற்றுக் கொடுக்கவேண்டும். அதனூடாகவே, ஒருவழியில்லையெனின் மற்றுமொரு நல்ல வழியிருக்கும். என்பதைப் பலரும் புரிந்துகொள்வர். இல்லையேல், பயணித்துக் கொண்டிருந்த வழியில் சிறு தடங்கல் ஏற்பட்டுவிட்டாலும் தட்டுத்தடுமாறித் திக்குத்தெரியாமல் போய்விடுவர்.

அதுவே, தன்னுயிரை மாய்த்துக் கொள்வதற்கான தூண்டிலாக அமைந்துவிடும். ஆக, ஒருவழியில்லை, பலவழிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றியடையலாம். ​தோல்வியும் வெற்றியும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை கற்றுக்கொடுத்தால், இன்னுயிரை மாய்த்தலுக்கு இடமேயிருக்காது.

வாழ்க்கையைக் கொண்டுநடத்துவதில் கடும் சிரமங்களை ஒவ்வொருவரும் எதிர்கொண்டுவருகின்றனர். இதில், குடும்பச் சுமை பெருஞ்சுமையாகும். அதிலிருந்து தலை தூக்குவதற்கு திட்டமிடல் முக்கியமானது. வரவுக்கேற்ற செலவைத் திட்டமிடல், இல்லையேல் செலவைக் குறைத்தல், இன்றேல் வருமானத்துக்கான வழிவகைளைத் தேடிக்கொள்ளலாகும்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கை ஒட்டுமொத்த தற்கொலை வீதத்தை 70 சதவீதமாகக் குறைத்துள்ளதென இலங்கை மருத்துவ சங்கத்தின் தரவுகளில் தெரிவிக்கப்படுகின்றது. தன்னுயிரை மாய்த்துக்கொள்வதற்கு பல வழிகளைப் பலரும் தேடுவர், அதிலும் ‘வலியில்லாத வழி’க்கே முக்கியத்துவம் கொடுப்பர்.

கிராமப்புறங்களிலேயே ஆகக் கூடுதலானோர், தன்னுயிரை மாய்த்துக்கொள்கின்றனர். அதற்கு அபாயகரமான பூச்சி கொல்லிகள் பிரதான காரணியாக இருந்தன. எனினும், அரசாங்கம் விதிமுறைகளைத் தொடர்ச்சியாக இறுக்கியமையால், அங்கு குறைந்துள்ளன.

இந்நிலையில், நீர்நிலைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் குதிப்​போரை மீட்பதற்காகக் குதிக்கும் மீட்பர்களும் உயிரிழக்கும் சம்பவங்கள் பல உள்ளன. தன்னுயிரைத் துச்சமென எண்ணுவதால் மற்றுமோர் உயிரையும் பறிக்கவேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமையொன்று ஏற்பட்டுவிடுகிறது.

வலியில்லாத வாழ்க்கை சுவாரஸ்யமற்றது. வ(லி)(ழி)கள் கூடிய வாழ்க்கையே அர்த்தபுருஷ்டியானதாக அமையும். ஆகையால், பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் உள்ளன. அவற்றைத் தேடிப் பயணிப்போமாயின். கோழைத்தனமான முடிவுகளை எடுப்பதிலிருந்து விலகிச்செல்லாம். இவ்வாறு தன்னுயிரை மாய்க்க எடுக்கும் முடிவு, மூடர்களால் எடுக்கப்படும் முடிவாகும் என்பதை நினைவூட்டுகின்றோம். (12.07.2021)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .