2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சவப்பெட்டிகளை பத்திரமாய் பதுக்கி வைத்துக் கொள்வீர்களா?

Editorial   / 2021 ஓகஸ்ட் 31 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவப்பெட்டிகளை பத்திரமாய் பதுக்கி வைத்துக் கொள்வீர்களா?


சிலருக்கு எவ்வாறுதான் இடித்துரைத்தாலும், எதுவுமே தலைக்கு ஏறப்போவதில்லை. நான் என்ற அகந்தை மனதை விட்டு நீங்காவிடின், என்னதான் கூறினாலும், அவ்வாறானவர்களுக்கு ஏறவே ஏறாது. நமது நாட்டிலுள்ள சில பெருமுதலைகளின் செயற்பாடுகளைப் பார்க்குமிடத்து, வெட்கித் தலைகுனியச் செய்கிறது.

இது கொரோனா காலம். இல்லை இல்லை, “சூப்பர் கொரோனா” காலமிது. வீடுகளிலிருந்து வெளியேறுவதற்கே மக்கள் அஞ்சுகின்றனர். தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும் சட்டரீதியாகவும் சட்டவிரோதமான முறையிலும் வர்த்தகச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படத்தான் செய்கின்றன.

இதில், அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்திக்கொள்ளும் சில பெருமுதலைகள், தான்தோன்றித்தனமாக கண்களை மூடிக்கொண்டு பொருட்களின் விலைகளை கேட்க முடியாதளவுக்கு உயர்த்தி, உச்சி குளிர்ந்துகொண்டிருக்கின்றனர். போதாமைக்கு பதுக்கிவைத்து, செயற்கையான தட்டுப்பாடுகளை உருவாக்கிவிட்டனர்.
 
கொரோனா ஒரு பொதுவான எதிரி, அதிலிருந்து தப்பிக்கவேண்டுமாயின், சுகாதாரத் தரப்பினரால் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றவே வேண்டும். இல்லையேல் கொரோனா கொன்றேவிடும். அவ்வாறானவருக்கு சவப்பெட்டிகளைத் தேடுவதே சிரமான காரியமாக இருக்கிறது.
 
கொரோனாவுக்கு முன்பான காலத்தில், மரண வீடென்றால், ஆகக்குறைந்தது 3 நாள்களுக்கேனும் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் இது, இன, மதங்களுக்கு இடையில் வேறுபடும். ஆனால், வைத்தியசாலைகளிலும் கொரோனா சிகிச்சையளிப்பு நிலையங்களிலும் மரணிப்போர், வீடுகளுக்கு கொண்டுவரப்படாமலே எரியூட்டப்படுகின்றனர் அல்லது புதைக்கப்படுகின்றனர்.

இந்த கொரோனா காலத்தில் பலரும் அரைவயிறும் கால்வயிறும் உண்டு, உயிர்மூச்சை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருக்கின்றனர். பால் தேனீரே பலருக்கு ஒருவேளை உணவாகிறது. ஆனால், சீனிக்கும் பால்மாவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டமையால், பலரும் அந்த கால்வயிற்றையேனும் நிரப்பமுடியாது திண்டாடுகின்றனர்.

இந்நிலையில், பதுக்கிவைக்கப்பட்டிருந்த பல தொன்கள் கைப்பற்றப்படுகின்றன. கொரோனாவினால் மக்களின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் நிலையில், யாருக்காகப் பதுக்கி வைக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

விலையுயர்ந்த, ஜோடனை செய்யப்பட்ட சவப்பெட்டிகளைக் கொள்வனவு செய்யும் காலம் மலையேறி, காட்போட் சவப்பெட்டிகளுக்குள் வைத்து எரியூட்டும் துர்ப்பாக்கியமான நிலைமையொன்று ஏற்பட்டிருக்கும் நிலையில், பதுக்கலில் ஈடுபடும் பெருமுதலைகள், தங்களுடைய வீடுகளில் இருக்கும் அலுமாரிகளைப் போல சவப்பெட்டிகளையும் வாங்கி வைத்துகொள்வார்களா?

ஒவ்வொன்றும் ஒவ்வொன்றோடு பின்னிப்பிணைந்து இருப்பதே வாழ்க்கையாகும். நுகர்வோர் உயிருடன் இல்லையேல் பெருமுதலைகளும் கடல்நீரை குடிக்கவே வேண்டும். கொள்ளை இலாபம், சந்தர்ப்ப சூழ்நிலையைப் பயன்படுத்தி அத்தியாவசியப் பொருட்களை பதுக்கிவைத்து கொள்ளை இலாபமீட்டும் சின்னத்தனமான எண்ணத்தை கைவிட்டு, சாதாரண பொதுமகனைப் பற்றியும் சிந்திக்கவேண்டும்.



“நான்” எனும் அகந்தையுடன் நிற்காமல் “நாம்” என நினைத்தாலேயே பல பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகளைக் காணமுடியும். ஆகையால், சாதாரண மக்களின் வயிற்றில் அடிக்காமல், ஒருவேளை உணவாக, பால் தேனீரையாவது பருகி, வயிற்றை கால், அரைவாசியாக நிரப்பிக்கொள்வதற்கு சகலரும் வழிசமைத்துகொடுக்கவேண்டும் என வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .