2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மௌனித்த உழைப்பாளர் தினம்

Editorial   / 2021 மே 03 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

உரிமைக்குரல்கள் ஒலிக்காது மௌனித்த உழைப்பாளர் தினம்

வருடம் முழுதும், ‘மாடாய் உழைத்து ஓடாய்த் தேயும்’ தொழிலாளர்கள், தங்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்காக, உரத்துக் குரல்கொடுக்கும் தினமான உழைப்பாளர் தினம் (மே 1), இந்த வருடம் உரிமைக்குரல் இன்றி மௌனமாய் முடிந்துவிட்டது.

பலரின் உயிரைப் பலியெடுத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், உரிமைக் குரல்களையும் மௌனிக்கச் செய்துவிட்டது. எனினும், நவீன தொழில்நுட்ப வசதிகளின் உறுதுணையுடன் சில கட்சிகள், தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுத்தனர்.

சிக்காகோ தியாகிகளின் தியாக தினமான ‘மே தினம்’ உழைப்பாளிகளின் ஆற்றலின் தேவையை உணர்த்தவும் போற்றவும் வேண்டிய தொழிலாளர்களின் எழுச்சிமிக்க மே 1ஆம் நாள், உண்மையான நோக்கத்திலிருந்து தலைகுப்புற விழுந்துவிட்டது. 

அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் ஏற்கெனவே, ஏற்பாடு செய்திருந்த பேரணிகள், கூட்டங்கள் யாவற்றையும், அரசாங்கத்தின் அறிவிப்பால் தவிர்த்துவிட்டன. அவ்வாறு தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு முன்கூட்டியே சிந்தித்திருந்தால், ‘பிலவ கொத்தணி’ உருவாக்கி இருக்காது. சிந்தித்தமையால் ‘மே தினக் கொத்தணி’ உருவாகாமல் தவிர்க்கப்பட்டது.

மேதினக் கொண்டாட்டங்கள் இம்முறையும் தவிர்க்கப்பட்டன. எமது நாட்டைப் பொறுத்தவரையில் இது முதற்றடவையல்ல. 1965ஆம் ஆண்டு  அரசாங்கம் மேதினத்தைத் தடை செய்தது. 1987ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று புறக்கோட்டையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதலை அடுத்து, மே தினக் கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டன.

2018 ஆம் ஆண்டு மே 1 ஆம் திகதி, வெசாக் போயா தினம் என்பதால், மகாநாயக்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஆறு நாள்களுக்குப் பின்னரே, மே தினக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தொழிலாளர்களின் தினத்தில் இவ்வாறு பல, முன், பின் ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டன. இலங்கையைப் பொறுத்தவரையிலும், கடந்த மூன்று ஆண்டுகளாக, மே 1 மௌனித்தது.

நாடு முகம்கொடுத்துக் கொண்டிருக்கும் மிக இக்கட்டான நெருக்கடிமிக்க சூழலில், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுப்பது, அவ்வளவுக்கு உசிதமானது அல்ல. எனினும், அவ்வப்போது அறிவிக்கப்பட்ட தொழிற்சங்கப் போராட்டங்கள், ஓரிரு மணிநேரத்துக்குள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

கொந்தளித்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸைக் காரணம் காட்டி, தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் விட்டுவிடக்கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து, சாதகமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இலங்கையை பொறுத்தவரையில், தொழிலாளர்களின் பாடு, பெரும் திண்டாட்டமாகவே உள்ளது. பெரும் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் அரசாங்கத்துக்கு, அழுத்தம் கொடுப்பதென்பது இயலாத காரியமாகும். வீட்டுகளுக்குள் முடங்கவேண்டிய கட்டாயத்திலேயே அனைவரும் உள்ளனர். அதைச் சாதகமாகப் பயன்படுத்தி, தொழிலாளர்களைத் தொடர்ந்தும் வஞ்சிக்காது, அவர்களையும் ஏறெடுத்துப் பார்க்கவேண்டும் என்பதே, எங்களது வலியுறுத்தலாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .