2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கழித்துக் கூட்டிப் பார்த்தால் பற்றாக்குறையே விஞ்சி நிற்கிறது

Editorial   / 2022 ஒக்டோபர் 31 , பி.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கழித்துக் கூட்டிப் பார்த்தால் பற்றாக்குறையே விஞ்சி நிற்கிறது

பொருட்களின் விலைகளும் சேவைகளின் கட்டணங்களும், கிடுகிடுவென எகிறியதால் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இடைக்கிடையே பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டாலும், அதன் இலாபத்தை நுகர்வோரால் நுகர்ந்துகூடப் பார்க்கமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலைகள் குறைந்தபோதும் ஏனைய சேவைகளின் கட்டணங்கள் குறைக்கப்படவில்லை. கோதுமை மாவின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டபோது, ஒரு சில ஹோட்டல்களில் பராட்டா, முட்டை பராட்டா மற்றும் ரொட்டி வகைகளின் விலைகள் ஓரளவுக்கு குறைக்கப்பட்டுள்ளன. இன்னும் சிலர், மொத்த வர்த்தகர்கள் தான் குறைத்துள்ளனர் என மழுப்பலாகப் பதிலளிக்கின்றனர்.

பொருட்களின் விலை குறைப்பு அறிவிப்பு வெளியான அடுத்த நொடியிலேயே, நாட்டின் சகல பாகங்களிலும் விலைகளை குறைக்கமுடியாது. ஏனெனில் கூடியவிலையில் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் கையிருப்பில் இருக்கும். விலை குறைக்கப்பட்டாலும் அந்தப் பொருட்கள் தூரப் பிரதேசங்களுக்குச் சென்றடைந்து இருக்காது. எனினும், அவ்வாறு சாக்குப் போக்குகளை நீண்ட நாட்களுக்குக் கூறிக்கொண்டிருக்க முடியாது.

விலை அதிகரிக்கக்கூடுமென எதிர்வுகூறப்பட்டதும் பொருட்களை பதுக்கிவைத்து, விலை அதிகரிக்கப்படும் வரையிலும் காத்திருக்கும் ஒருசில பெரும் முதலைகள், விலை குறைந்தவுடனேயே நுகர்வோருக்கு கொடுக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும். இல்லையேல் மாற்று நடவடிக்கைகளை மக்கள் நாடிவிடுவர்.

விலைகள் அதிரிக்கப்பட்டமையால் பிஸ்கட்டுக்கள் உண்பதை பலரும் கைவிட்டுள்ளனர். இதனால் ஒவ்வொரு கடைகளிலும் பிஸ்கட்டுகள் தேங்கிக் கிடந்தன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

வியாபார யுக்தி எனும் போர்வைக்குள் சென்று, இரண்டுடொரு பிஸ்கட்டுகளை குறைத்துவிட்டு விலைகளை குறைத்தாலும் பெரும்பாலானவர்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கின்றனர். ஆக, பிஸ்கட்டுகள் விலை போகவில்லை. இதேபோன்ற நிலைமை, சில பொருட்களுக்கு ஏற்பட்டால், வர்த்தகர்களுக்கே பெரும் பாதிப்பு ஏற்படும்.

இதற்கிடையே சமூகப் பாதுகாப்பு வரி, சமூகத்தை பள்ளத்துக்குள் தள்ளிக்கொண்டே செல்கின்றது. ஒவ்வொரு சேவைகளின் கட்டணங்களும் அதிகரித்துள்ளன. மின்சாரம், தண்ணீர் கட்டணங்கள் அதிகரித்துள்ளன. இதற்கிடையிலே தபால் நிலையங்கள் ஊடாக செலுத்தப்படும் நீர் மற்றும் மின்சார பட்டியல்களுக்காக அறவிடப்படும் சேவை கட்டணம் 20 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் அலுவலகங்களுக்கான தினசரி செலவினம் அதிகரித்தமையும் சேவை கட்டணத்தை அதிகரிப்பதற்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது. இவையும் பொதுமகன் மீதே சுமத்தப்படுகின்றது.

ஒருபக்கம் விலைகள் ஓரளவுக்கு குறைந்தாலும் மறுபுறத்தில் சேவைகளின் கட்டண அதிகரிப்பால், விலைகுறைப்பின் எவ்விதமான பிரயோசனமும் மக்களுக்கு கிடைக்கவில்லை. நா​ளுக்கு நாள் சுமையே அதிகரித்துச் செல்கிறது. செலவுகளும் எகிறியே செல்கின்றன.

ஆகையால், குறைக்கப்படும் விலையை, அதிகரித்த விலையுடன் கழித்து, சேவைகளின் கட்டணங்களை கூட்டிப் பார்த்தால் பற்றாக்குறையே விஞ்சி நிற்கிறது. இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்குமாயின் மக்களால் வாழ்க்கையை கொண்டுநடத்த முடியாத துர்ப்பாக்கிய நிலைமையே ஏற்படும் என்பதை மீண்டுமொருதடவை ஞாபகமூட்டுகின்றோம். (31.10.2022)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X