2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மதங்கியிடம் கேளுங்கள்!

Editorial   / 2019 ஜனவரி 11 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வணக்கம்,   

எனது பெயர் அசோக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தற்போது எனக்கு 35 வயதாகிறது. பெற்றோரின் எதிர்ப்புக்கு மத்தியில், நான் எனது காதலியைக் கரம்பிடித்தேன். என்னிலும்பார்க்க எனது மனைவி ஐந்து வயதில் மூத்தவள் என்பதே, பெற்றோரின் எதிர்ப்புக்குக் காரணம். திருமணம் முடித்து மூன்று வருடங்கள் கடந்தவிட்டாலும்கூட, பெற்றோர் எம்மை ஏற்றுக்கொள்ளவில்லை. எம்மிருவருக்கும் இன்னும் குழந்தைப் பாக்கியமும் இல்லை.

அதனைக் கூறியே எனது பெற்றோர் மற்றும் உறவினர்கள், எனது மனைவியைக் காயப்படுத்துகின்றனர். இதனால் எனது மனைவி மிகவும் மனமுடைந்துவிட்டார். எனது மனைவிக்கு வயது அதிகம் என்பதாலேயே, அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று, எனது பெற்றோர் வசைபாடுகின்றனர். இதனால் நாமிருவரும் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றோம். இதற்குத் தீர்வுதான் என்ன?  

மதங்கி;  

சகோதரரே, உங்களது பிரச்சினை என்னவென்பதைப் புரிந்துகொண்டோம். முதலில் உங்களது மனைவியைத் தேற்றுங்கள். முடிந்த மட்டிலும் அவருக்கு ஆறுதல்களைக் கூறுங்கள். குழந்தைப் பாக்கியம் தள்ளிப்போவதற்கு, வயது ஒரு தடையல்ல. வயதான காலத்தில், நோய், நொடிகளால் பீடிக்கப்படும்போது, ஒருவரை ஒருவர் நன்கு கவனத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, சமவயதுத் திருமணத்துக்கு, அநேகமான பெற்றோர் விரும்புவதில்லை.   

குறிப்பாக, ஓர் ஆண், முதுமையை எட்டும்போது, அவரை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்வ தற்காகவே, வயது குறைந்த பெண்களை ஆண்களுக்குத் திருமணம் செய்து வைப்பர். ஓர் ஆண், முதுமையை எட்டும்போது, அவரது மனைவிக்கு வயது குறைவாக இருக்கும். இதனால் மனைவியால், அந்த ஆணை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ள முடியும். சம வயதை ஒத்த பெண்ணாக இருந்தால், அவரும் முதுமையை அடையும்போது, நோய்நொடியால் பாதி க்கப்படுவார். எனவே, நோய், நொடியால் பாதிக்கப்பட்ட இருவராலும் ஒருவரை, ஒருவர் பார்த்துக்கொள்ள முடியாது.  

இதற்காகவே ஆரம்ப காலங்களில், 25 வயது ஆணுக்கு 18 வயது பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள். ஆணாதிக்கமிக்க இந்தச் சமூகத்தில், தீர்மானம் எடுப்பவர்கள் ஆண்களே என்பதால், காலப்போக்கில், வயது குறைந்த பெண்ணையே, ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமென்றும் ஓரிரு வயது மூத்த பெண்களைகூட திருமணம் செய்து வைக்கக் கூடாது என்பதும் கட்டாயப்படுத்தப்பட்ட நிலையாக மாறிவிட்டது.  
இன்றும்கூட நூற்றில் 99 சதவீதமான திருமணங்கள், வயது குறைந்த பெண்ணுக்கும் ஓரளவு வயது கூடிய பெண்ணுக்குமே நடைபெறுகின்றன. ஒரு சதவீதமானவர்களே, ஓரிரு வயது கூடிய பெண்களைத் திருமணம் செய்துகொள்கிறார்கள்.  

ஒரு பெண்ணுக்கு, குழந்தைப் பேறு என்பது 18 தொடக்கம் 30 வயதுக்குள் இருப்பது அவசியமென்று வைத்தியர்கள் கூறுகின்றனர். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு குழந்தைப் பேறு இருக்காது என்பது இதன் அர்த்தமில்லை. 30 வயதுக்கு மேல், பெண்களின் உடல்களில் மாற்றங்கள் ஏற்படுவதால், சுகப் பிரசவங்கள் அமைவதற்கு வாய்ப்பில்லை. மேலும் கருக்கலைதல் அதிகமாக இருக்கும். சத்திரசிகிச்சையினூடாகவே, குழந்தைகளைப் பிரசவிக்க நேரிடலாம். இவற்றைக் கருத்திற்கொண்டே, 30 வயதுக்குள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது நல்லது என கூறப்படுகிறது.   

இவ்விடயங்களைக் கூறி, உங்களது மனைவியை ஆறுதல் படுத்துங்கள். மேலும், மகப்பேற்று வைத்தியர் ஒருவரின் ஆலோசனைகளைப் பெறுங்கள்.   

உங்களது மனைவியையும்விட ஆறு வயது சிறியர் நீங்கள் என்பதால், உங்கள் மனைவி வயோதிபத்தை அடையும்போது, அவரை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.இதுவே, மதங்கியின் பதில்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .