2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பெரியகல்லாறு மைதானத்தில் கடினப்பந்து விளையாடுவதுக்கு தீர்வு

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 11 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வ. சக்தி

பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தினுள் கடினப்பந்து விளையாடுவது தொடர்பில் எழுந்து வந்த பிச்சனைக்கு சுமுகமானதொரு தீர்வு காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பெரியகல்லாறு பொது விiயாட்டு மைதானத்தினுள் கடினப்பந்து விளையாடுவது தொடர்பில் எழுந்த பிரச்சனைக்குத் தீர்வுகாணும் முகமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை(10) மாலை பெரியகல்லாறுக்கு விஜயம் செய்து அங்குள்ள விளையாட்டுக் கழகங்களுடன் ஜனாவும், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞானமுத்து யோகநாதனும்  நேரில் சென்று கலந்துரையாடினர்.

இதன்போது விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் தமக்கு தமது மைதானத்தில் கடினப்பந்து விளையாடுவதற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையால் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை நீக்குமாறு தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பில் இருசாராருக்கும் நீண்ட நேரம் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனா,

“பெரியகல்லாறு கிராமத்தில் அமைந்துள்ள விளையாட்டுக் கழகங்களை நான் நன்கு அறிவேன். விளையாட்டு மைதானத்தில் விளையாடுவது சம்பந்தமானது ஒரு பெரிய பிரச்சனையல்ல இக்கிராமத்தைச் சேர்ந்த பிள்ளைகள்தான் அதிலே விளையாடுகின்றார்கள். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அந்த விளையாட்டு மைதானத்திலே அவர்கள் விளையாடி வருகின்றபோது எதுவித சர்ச்சைகளும், இல்லாமல்தான் விளையாடி வருகின்றார்கள்.

ஒருசில மாதங்களுக்குள் இந்த குறிப்பிட்ட பிரச்சனை ஏற்பட்டிருக்கின்றது. அந்தப்பிரச்சனை பிரதேச சபை வரைச் சென்றிருக்கின்றது. பிரதேச செயலகத்தின் விளையாட்டு உத்தியோகத்தர் மூலமாக பெறப்பட்ட அறிக்கைகள் மூலமாகவும்,  பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகளின் பிரகாரமும்,  அந்த மைதானத்தில் கடினப்பந்து தற்காலிகமாக விளையாடுவது நிறுத்தியிருக்கின்றார்கள். இதுதொடர்பில் உரிய விளையாட்டுக் கழகங்களுடன் பிரதேச சபை தவிசாளரும் நானும் கலந்துரையாடி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்துள்ளோம். இதற்கு மிக விரைவில் சுமுகமான ஒரு தீர்வைப் பெற்றுத் தருவதாக கூறியிருக்கின்றோம்.

இதனை அரசியல் ரீதியான குழப்பகரமாக உருவாக்குவது எமது நோக்கமல்ல. இளைஞர்கள் அந்த மைதானத்திலே விளையாட வேண்டும். பெரியகல்லாறு கிராமத்திலே கடினப்பந்து விளையாடுபவர்கள், கடந்த காலங்களிலே எமது பிரதேசத்திற்கு பெருமையத் தேடித்தந்திருக்கின்றார்கள். நான்கூட இந்த மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுக்கு அதிதியாக கலந்து கொண்டிருக்கின்றேன். எனவே இந்த மைதானத்தில் இளைஞர்கள் விளையாட வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். அது மிகவிரைவில் நிறைவேறும்” எனக் கூறினார்.  

இதன்போது கருத்துத் தெரிவித்த யோகநாதன், “குறித்த மைதானம் தொடர்பில் பொதுமக்கள் எமக்கு வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமையவும், பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர், உள்ளூராட்சி ஆணையாளர், உள்ளிட்ட பலரின் கருத்துக்களையும் பெற்று, அதில் கடினப்பந்து விளையாடுவதை தற்காலிகமாக தடை செய்திருந்தோம்.  இவ்வாறு விளையாடுவதை தற்காலிகமாக தடைசெய்தது அவர்களுக்கு எதிராக அல்ல இப்பிரச்சனைக்கு தீர்வு பெறுவதற்காகத்தான்.

எமது பிரதேசத்தினுள் இளைஞர்கள் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்க வேண்டும். என்பது எனது விருப்பம். இதில் எதுவித அரசியலோ. தனிப்பட்ட விருப்பு வெறுப்போ கிடையாது. இருசாரரையும் ஒற்றுமைப்படுத்தி  கருணாகரமுடன்  இணைந்து நாம் முடிவெடுத்திருக்கின்றோம். இதற்கு மிகவிரைவாக பிரதேச சபைக்கோ வேறு யாருக்குமோ களங்கம் ஏற்படாதவாறு, இதற்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்” எனக் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .