2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மின்னுவது எல்லாம் பொன் அல்ல; புலனாய்வில் சிக்கிய நபர்

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 05 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதையலில் கிடைத்த தங்கமெனக் கூறி, போலித் தங்கத்தை 20 இலட்சம் ரூபாய்க்கு விற்க முற்பட்ட ஒருவர், புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சம்பவம், அம்பாறை - சங்கமன்கண்டிப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் சங்கமன்கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

புதையலில் கிடைத்த தங்கமெனக் கூறி, போலித் தங்கத்தை விற்பனை செய்வதாகக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலை அடுத்து, அக்கரைப்பற்று பொலிஸ் விசேட புலனாய்வுப் பொலிஸார், சம்பந்தப்பட்ட நபருடன் தங்க கொள்வனவாளர் போன்று  தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இதன்போது, தன்னிடம் உள்ள புதையல் தங்கத்துக்கு ரூபாய் 20 இலட்சம் வழங்குமாறு, அந்நபர் கோரியுள்ளார்.

அதற்கு சம்மதித்த பொலிஸ் விஷேட புலனாய்வுப் பொலிஸார், சங்கமன்கண்டியிலுள்ள குறிப்பிடப்பட்ட இடத்துக்குச் சென்று, இந்த நபரைக் கைது செய்துள்ளனர்.

இதன்போது, சம்பந்தப்பட்ட நபரால் புதையல் தங்கமெனக் கூறப்பட்ட தங்கக் கட்டிகள் போன்று மின்னும் உலோகத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

இது விடயமாக தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் விசேட புலனாய்வுப் பொலிஸார், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜராக்கவுள்ளதாகத் தெரிவித்தனர்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .